தொடர்ந்து கஷ்டத்தை தந்த கடவுள் நெஞ்சுக்குக் கீழ இயக்கம் இல்லாத மட்டும் என் வறுமை நிலையை உணர்ந்துதான் எனக்கு வரமாக அளித்தான் என்று சில நேரங்கள் நான் தியானிப்பேன் காரணம் இடுப்புக்குக் கீழ இயக்கமில்லாமல் இருப்பதால் எனக்கு பசி தெரியாது"
மனித வாழ்க்கையில் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டேயிருக்கின்றன. பலருக்கு அவை ஆரோகணத்தில் அமைந்தாலும் சிலருக்கு அவரோகணத்தைக் கடந்து பூச்சியத்தில் நிறைவடைகின்றது. நேரிய சிந்தனை கொண்டவர்கள் படிப்படியாக முன்னேற்றம் அடைந்து செல்வார்கள் என்பார்கள். அவ்வாறான சிந்தனையில் தானுண்டு தனது வேலையுண்டென இருப்பவர்களின் வாழ்க்கை கூட திடீரென மாறுகின்றது.
ஆம் இல்லறத்தில் இணைந்து தனது குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்க்கையை நடத்திக்கொண்டிருந்த காலமது. கைக்குழந்தையின் அழுகையையே தாங்கமுடியாத அந்த இளம் குடும்பஸ்தன் அழுகையை நிறுத்துவதற்கான காரணத்தை தேடிய போது காலனின் விளையாட்டால் அவனது எதிர்காலமே கரைந்து விட்டது. உயிரிருந்து இன்று நடைபிணமாகி ஒவ்வொரு நொடியும் நெருப்பில் சிக்கிய புழுவாய் மனம் வெந்துகொண்டிருக்கின்றான் தற்போது 35வயதாகும் பெரியண்ணன் ஆனந்தராசா. அவருக்கு நிகழ்ந்த அவலத்தை இவ்வாறு கூறுகின்றார்.
கைக்குழந்தை பாலுக்கு அழுகுது. சீனி வாங்கினால் பால் கரைத்துக்கொடுக்கலாம் என்று தரைப்பாழ் கூடாரத்தை விட்டு வெளியே வந்து 5 மீட்டர் தூரம் நடக்கேல்ல பின்னால வந்த ஷெல் என் முதுகை பதம் பார்த்து விட்டது. உடனே பக்கத்தில நின்றவை மாத்தளன் கொஸ்பிட்டலுக்கு கொண்டு போய் சேர்ப்பித்தவை. வடிந்தோடும் இரத்தத்தை கட்டுப்படுத்தினார்கள். புண்களை ஆத்தினார்கள். ஆனால் பதம்பார்த்த பீசை எடுக்கவில்லை. விலா எலும்புக்குப் பக்கத்தில பீஸ் இருக்கு புண் ஆறிவிட்டதே தவிர நெஞ்சுக்குக் கீழ எனக்கு இயக்கம் இல்லை.
கைவேலி புதுக்குடியிருப்பில சொந்த நிலம் வாங்கி நான் தனிய ஒவ்வொரு வேலையாக செய்து பார்த்துப் பார்த்து வீட்டக் கட்டி பெற்றோரின் விருப்பப்படி திருமணம் செய்து நிறைந்த வருமானத்துடன் நிறைவான வாழ்வு வாழ்ந்து வந்தேன்.
வீட்டைச் சுத்தி வாழை, கமுகு, மா, பலா என பயன்தரு மரங்களோட இரண்டு பெண்பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்தேன். யார் கண்பட்டதோ தெரியவில்லை. 2009 இல் பிரச்சினை உக்கிரமடைய தொடங்கி விட்டது. எனவே கைக்குழந்தையோட இருக்கும் நாங்கள் பாதுகாப்பை தேடி முதலிலே செல்வோம் என புதுக்குடியிருப்பு வலைஞர் மடத்துக்கு போய் அங்கு தரைப்பாழ் கூடாரமமைத்து வெய்யிலுக்கும் மழைக்கும் பாதுகாப்பு தேடினோமே தவிர அங்கங்களை செயலிழக்கும் அளவிற்கு ஆபத்தை தேடிக் கொள்வோம் என எதிர்பார்க்கவில்லை.
சீனி வாங்கப் போன நான் காயப்பட்டு மாத்தளன் வைத்திய சாலைக்குச் சென்று முகாமுக்கு வரும்போது மூத்த மகள் 7 வயது இளையவள் ஒரு வயது கைக்குழந்தை. மனைவி மூன்றாவது குழந்தையாக என்னையும் வீல் சியாருடன் ஏற்றுக்கொண்டார். பின்னர் மீள் குடியேற்றம் என்ற பெயரில் சொந்த வீட்டுக்கு வருவோம் என்று வந்தா இங்கு அத்திவாரம் மட்டும்தான் இருந்தது.
2 கைக்குழந்தைகளோட அவயவங்கள் செயலிழக்கப்பட்ட என்னையும் ஒரு புறத்தில இருத்தி விட்டு மனைவி மெல்ல மெல்ல புற்களை வெட்டி தற்காலிக வீடு அமைத்தோம். பின் 5 இலட்சத்து 50 ஆயிரம் வீட்டுத்திட்டத்தில் ஓரளவு பூரணமாக்கப்பட்ட வெய்யில் மழையில இருந்து எம்மைப் பாதுகாக்கக் கூடியளவில கட்டி இருக்கோம். மிகுதியை முடிக்க வேண்டும் என்று நாங்கள் யோசிக்கவே இல்லை. காரணம் காயப்பட முன் என்னென்ன வேலை கிடைக்கிறதோ அதெல்லாத்தையும் கறன்ட்(மின்சாரம்) இல்லாத நேரத்திலயும் இரவு பகலாக செய்து நன்றாக இருந்தம். இன்று சாப்பாட்டுக்கு பிறரிடம் கையேந்தும் நிலையில் நானும் என் குடும்பமும் இருக்கும் போது என்னென்டு வீட்டுத்திட்டத்தை பூர்த்தி செய்ய முடியும்.
சரி அதுதான் வரும் அதிகாரிகளுக்கு எமது நிலையை விளக்கிக் கூறினாலும் இப்ப இரண்டு பிள்ளைகளும் பள்ளிக்கூடம் போரவை. மூத்த மகளுக்கு 13 வயது 8ஆம் வகுப்பு படிக்கிறா. இளையவ 8 வயது 3 ஆம் ஆண்டு படிக்கிறா. இருவரும் வல்லிபுரம் கனிஷ்ட வித்தியாலயத்தில் படிக்கினம் வீட்டில இருந்து பள்ளிக்கூடத்துக்கு 3 கி.மீ. போக வேணும். றோட்டுக்கு போய் பஸ்ஸில ஏத்தி விட்டா இருவரும் போவினம்.
ஆனால் வரும்போது இருவரும் ஒன்றாக 4 மணிக்குத்தான் வருவார்கள். காரணம் 2 மணிக்கு பள்ளிக்கூடம் விட்டு றோட்டுக்கு வந்தால் இ.போ.ச. பஸ் மட்டும் தான் பிள்ளைகளை ஏத்துமே தவிர தனியார் பஸ்கள் இங்க பள்ளிக்கூட பிள்ளைகள ஏத்த மாட்டாங்க. பிள்ளைகள் நின்றாலும் ஆசிரியர்கள் மட்டும் ஏறுங்கோ என்று பஸ்ஸை எடுத்திடுவினம். சைக்கிள் இருந்தா மனைவி ஓடுவா கூட்டிக்கொண்டு போய் கூட்டி வருவா. என்ன செய்வது பழஞ் சைக்கிள் என்றாலும் ஒன்றை வேண்டுவம் என்று நினைப்பதே தவிர செயற்படுத்த எங்களிடம் மூலதனம் இல்லை.
அன்றாடச் செயற்பாட்டை எடுத்துக் கொண்டால் காலையில பிள்ளைகளுக்கு செய்யிற சாப்பாட்டை நானும் மனைவியும் மதியம் வச்சு சாப்பிடுவம். மதியம் பிள்ளைகள் பாடசாலையில குடுக்கிற சாப்பாட்டை சாப்பிட்டு விட்டு வருவார்கள். பிறகு வீட்டில இருக்கிறத வச்சு இராப்பொழுத சமாளித்து கொள்ளுவம். ஆனால் இப்ப பள்ளிக்கூடம் விடுதலை விட்டிட்டுது. பிள்ளைகள் ரொம்ப கஷ்டப்படுகிறார்கள்.
எனக்கு தொடர்ந்து வீல்சியார்ல இருந்து படுக்கைப்புண் வந்து இப்பதான் கொஞ்சம் சுகம். கடந்த மூன்று மாதம் குப்புறப்படுக்கையிலேயே இருந்து கஷ்டப்பட்டு புண்ணை மாத்தி எடுத்தன். அதைவிட கொஸ்பிட்டலுக்கு மாதா மாதம் கிளினிக்குக்கு போறன். விலா எலும்பில பீஸ் இருக்கு. எடுக்க ஏலாது எடுக்கிறதென்றாலும் 5 இலட்சத்துக்கு மேல செலவாகும். ஆனால் எடுத்தால் சில நேரம் கழுத்துக்கு கீழ இயங்காமல் போய்விடும் என்றார்கள்.
பீஸை எடுத்தால் நடக்க முடியும் என்றால் காணியை வித்தாவது ஒப்பிறேசன் செய்திடுவன். ஆனால் காசைக் கொடுத்தும் கழுத்துக்குக் கீழே இயங்கா விட்டால்.என்ன செய்வது என்றதில் சத்திர சிகிச்சையை மறந்து விட்டேன். வருத்தம் மாறாது என்று தெரிந்தும் கிளினிக்குக்கு போறது யூரின் பாக் கோஸ் யூரின் ரியுப் பன்டேச் எல்லாம் போனால் இலவசமாக கிடைக்கும் என்பதை நம்பியே போறது. சில நேரம் அங்க மருந்து இல்லை என்றா ஒரு மாதத்துக்கு தேவையானவற்றை பாமசியில தான் வாங்க வேனும்.
ஆனால் எல்லா விதத்திலும் தொடர்ந்து கஷ்டத்தை தந்த கடவுள் நெஞ்சுக்குக் கீழ இயக்கம் இல்லாத மட்டும் என் வறுமை நிலையை உணர்ந்துதான் எனக்கு வரமாக அளித்தான் என்று சில நேரங்கள் நான் தியானிப்பேன் காரணம் இடுப்புக்குக் கீழ இயக்கமில்லாமல் இருப்பதால் எனக்கு பசி தெரியாது. வயித்து நோ தெரியாது. அதே போல் சாப்பாடுகள் எல்லா வகையாலும் சாப்பிட ஏலாது. மாமிசம் முற்றாக சாப்பிட ஏலாது. ஆக உப்புக்கஞ்சி மாத்திரம்தான் என்னால குடிக்க முடியும். அதேபோல் இயற்கைக்கடன் கழிப்பது ஒருநாள் விட்டு ஒருநாள். மனைவி நல்லா படிச்சவா வீட்டில 5 பெண் பிள்ளைகளில் மூத்தவா என்பதினால் வெள்ளன திருமணம் செய்திட்டா. அதேபோல் வெள்ளனே வாழ்க்கையின் சந்தோஷத்தில பாதியை தொலைத்து விட்டா. அவாக்கு பின்னால் உள்ள 4 பெண் சகோதரங்களும் இவ்வளவு இடப்பெயர்வு கஷ்டத்துக்கு மத்தியில படிச்சு பல்கலைக்கழகம் சென்று இருவர் பட்டதாரிகளாக வெளியேறி விட்டார்கள். இருவர் வெளியேறப் போகிறார்கள். மனைவியின் படிப்புக்கு வேலைகள் கிடைக்கும். ஆனால் என்னை பராமரிப்பதற்காக அவர் வேலைக்குச் செல்ல முடியாத நிலையில் இருக்கிறார்.
ஒரு மனிதனுக்கு கிடைக்கக்கூடிய அதிகபட்ச தண்டனையை எனக்கு வழங்கி விட்டார். அது என்னோடயே முடியட்டும். என் பிள்ளைகள நன்றாக வாழ வைக்க வேண்டும் என்றே நான் இப்ப கடவுளிடம் கேட்பது ஆனால் கடவுளும் தான் என்ன செய்வது வன்னியை பொறுத்தவரை யாருக்குத்தான் இரங்குவது. இருந்தாலும் என் மனைவியின் முயற்சியால் நான் மாதா மாதம் கொஸ்பிட்டலுக்கு போய் வருகிறேன். பஸ்ஸில ஏத்திறது என்றாலும் மனைவி தடுக்குப் பிள்ளைகளை தூக்குவது போலவே என்னை தூக்கி ஏத்திறது. அதே போல் இறக்குவது. காரணம் என்ர உடம்பில எந்த இடத்தில பீஸ் இருக்கு? எந்த இடத்தில புண் இருக்கு? என்று மனைவிக்குத்தான் தெரியும்.
35 வயதில வீட்டுக்கு காவலாக இருக்க வேண்டிய நான் இன்று 30 வயது மனைவியின் தயவில வாழும் நிலைக்கு தள்ளப்பட்டு விட்டேன். என்ர நிலையை புரிய முடியாத என் பிள்ளை. மூத்தவா கேட்பா, அப்பா பள்ளிக்கூடம் நடந்து போக கால் உளையுது போய் வந்து படிக்க முடியாது. சாப்பிட்டு வாற சாப்பாடு பள்ளிக்கு 2 மணித்தியாலத்துக்குள்ள செமிச்சு போகுது. பஸ்காரனும் ஏத்துறான் இல்ல என்று சொல்லி அழும் நாள் தான் அதிகம். அதேபோல் சின்ன மகள் சொல்லுவா அப்பா அக்காவை எல்லாம் தூக்கி வச்சு படம் எடுத்திருக்கிறீங்கள். ஏன் என்னை மட்டும் தூக்கிறதே இல்லை என்று சின்னப்பிள்ளை கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாத பாவியாக நான் வாழ்ந்து வருகிறேன்.
இவ்வாறான அவல நிலையில் மீள் குடியேற்றப்பட்டு இன்றுவரை எந்த ஒரு அரசியல்வாதியோ அரச சார்பற்ற நிறுவனங்களோ ஏன் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் எந்த அமைப்புக்களோ எங்களை வந்து பார்க்கவோ அல்லது ஒரு சல்லிக்காசு கூடத்தரவில்லை.
வெளிநாட்டு வீட்டுத்திட்டமும் மஹிந்த சிந்தனையூடாக வலுவிழந்தோருக்கு மாதாந்தம் கிடைக்கும் 3 ஆயிரம் ரூபா காசும்தான் எங்களுக்கு கிடைத்தது. அந்த மூவாயிரம் ரூபாவும் கடந்த 6 மாதமாகத்தான் கிடைக்கிறது. அதை விட ஒக்ஸ்பாம் நிறுவனத்தின் கிணறு வெட்ட சீமெந்தும் மண்ணும் தந்தவை. நாங்கள் ஆள்பிடிச்சுவெட்டி கிணறு கட்டி இருக்கிறம்.
நல்லா இருந்த குடும்பம் சந்தர்ப்ப சூழ்நிலையால் அங்கவீனமாக்கப்பட்ட பின்னும் அவர்களுக்கு இந்த நாட்டில் கிடைக்கும் வெகுமதி மாதம் 3 ஆயிரமும் 5 இலட்சத்து 50 ஆயிரம் அரைகுறை வீட்டுத்திட்டமும் கல்லும் மண்ணும்தான். இருந்தாலும் எங்களிடம் மனோதிடம் இருக்கு. நாங்கள் எந்த ஒரு அரசியல்தலைமைகளையும் நம்பி வாழ விரும்பவில்லை. உப்பு விக்கப்போனால் மழை பெய்யுது மா விக்கப்போனால் காத்தடிக்குது என்ற மாதிரி பெரிய கோழிக்கூடு அடித்து கோழி வளர்க்க தொடங்கி அத்தனை கோழியும் விடலைப் பருவத்துக்கு வர வெள்ளம் வந்து கோழி எல்லாம் செத்துப்போச்சு. அதே போல வளவில பசுவை வாங்கி விட்டன். புல் வளர்ந்திட்டுது. ஆனால் நின்ற பசு செத்துப் போச்சு. எனவே என் கஷ்டங்கள் உணர்ந்து எனக்கு உதவி செய்ய யாராவது விரும்பினால் எங்களுக்கு கொஞ்சக் கோழியும் பசு மாடும் பிள்ளைகளின் கல்விக்காக ஒரு சைக்கிளும் முற்றுப்பெறாத வீட்டை முடிப்பதற்கு உதவியும் செய்து தாங்கோ. காலமுள்ளவரை நாங்கள் உங்கள் வாழ்விற்காகவும் பிரார்த்திப்போம். இந்த இளம் குடும்பதலைவனின் உள்ளக்குமுறலை ஒரு தரம் சிந்திப்போம். இரு பிள்ளைகளின் எதிர்காலத்துக்காக உதவியளிப்போமாக
Social Buttons