Latest News

June 23, 2017

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற குழு கூட்டத்தில் நடந்தது என்ன? சிவசக்தி ஆனந்தன் விளக்கம்.
by admin - 0

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற குழு கூட்டத்தில் நடந்தது என்ன? சிவசக்தி ஆனந்தன் விளக்கம்.
 
வடக்கு மாகாணசபை விவகாரம் ஒரு வழியாக முடிவிற்கு வந்ததன் பின்னர்இ கடந்த 22.06.2017 அன்று காலை 10.30 மணியளவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழு கூட்டம் நடைபெற்றது. இதில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வடக்கு மாகாணசபை குழப்பம் தொடர்பாகவும் தான் மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பாகவும் நீண்டதொரு விளக்கத்தைக் கொடுத்திருந்தார். 

மாவை சேனாதிராஜாவும் தனது விளக்கத்தைத் தெரிவித்திருந்தார். அவர்களது உரை முடிவுற்றதன் பின்னர் நான் எனது விளக்கத்தைப் பின்வருமாறு முன்வைத்தேன்.

மாகாண சபைத் தேர்தல் முடிந்தவுடன் பம்பலப்பிட்டியில் அமைந்திருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் காரியாலயத்தில் முதலமைச்சர் மற்றும் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகள் கலந்துகொண்டிருந்த கூட்டத்தில் மாகாணசபையை வழிநடத்துவதற்கு ஒரு குழு அமைக்கப்படவேண்டும் என்று நானும் எமது கட்சியின் தலைவரும் வலியுறுத்தினோம்.

 பல்வேறு வாதப்பிரதிவாதங்களின் பின்னர் அதனை ஏற்றுக்கொண்டு குழுவும் அமைக்கப்பட்டது. ஆனால் அந்தக் குழு ஒருமுறைகூட கூடவில்லை.
மாகாணசபையின் முதல் ஒன்றரை வருடங்கள் உங்களது வழிகாட்டலின்படியே முதலமைச்சர் செயற்பட்டார். அப்பொழுது உங்களுக்கு முதல்வர் நல்லவராகத் தெரிந்தார். உங்களது பிழையான இராஜதந்திர அணுகுமுறையும் கள யதார்த்தமும் முதல்வரை மக்கள் நலன்சார்ந்து செயற்படத் தூண்டியிருந்தது. இதனால் உங்களுக்கும் முதல்வருக்கும் இடையில் இடைவெளி அதிகமாகியது.

இந்நிலையில் தமிழரசுக் கட்சியால் அமைச்சர்கள்மீது ஊழல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இந்த பிரச்சினை கடந்த ஓராண்டிற்கும் மேலாக நீடித்திருந்த நிலையில் கூட்டமைப்பின் தலைவர் என்ற நிலையில் நீங்கள் இதனை சரியாக அணுகவில்லை. இந்த குற்றச்சாட்டை உரிய முறையில் அணுகி அமைச்சர்களை மாற்றியிருந்தால் மாகாணசபையின் பிரச்சினை இவ்வளவுதூரம் வந்திருக்காது. 

புளொட் அலுவலக்த்தில் நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் நான்கு அமைச்சர்களையும் மாற்றி சுழற்சி அடிப்படையில் ஏனைய நால்வருக்கு சந்தர்ப்பம் வழங்கப்படவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. 

மேலும் அண்டனி ஜெகந்நாதன் உட்பட பதினாறு மாகாணசபை உறுப்பினர்களும் இதே கருத்தை வலியுறுத்தியிருந்தனர்.  அன்று அவ்வாறு செய்திருந்தால் இந்தப் பிரச்சினை எழுந்திருக்காது.

கடந்த ஓராண்டுகாலமாகவே அமைச்சர்கள் தொடர்பாக ஊழல் மோசடிகளும் குற்றச்சாட்டுகளும் ஊடகங்களின் வாயிலாக முன்வைக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையிலேயே ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்காக முதல்வர் ஒரு விசாரணைக் குழுவை நியமித்தார். அந்த விசாரணைக் குழு நியமிக்கும்போது நீங்கள் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. விசாரணை குழுவின் அறிக்கை வெளிவந்த பின்னரும் நீங்கள் தலையிட்டு அந்த அறிக்கை தொடர்பாக உரிய நடவடிக்கை எடுத்திருக்க முடியும். அதனையும் நீங்கள் செய்யவில்லை. 

இதனால் முதலமைச்சர் சபையின் மாண்பையும் தமிழ் மக்களின் எதிர்பார்ப்பையும் தக்க வைக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்.

அமைச்சர்கள் அனைவரும் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்தவர்களாகவும் அதற்கு ஆதரவானவர்களாகவும் இருந்ததால் அவர்களுக்கு எதிரான நடவடிக்கையைக் கைவிடுவதற்கும் இதற்காக முதலமைச்சரை நீக்குவதற்கும் நடவடிக்கையை மேற்கொண்டிருந்தீர்கள். மக்கள் செல்வாக்கும் ஈ.பி.ஆர்.எல்எவ்இ ரெலோ மற்றும் புளொட் ஆகிய கட்சிகளின் ஆதரவும் முதலமைச்சருக்கு இருந்ததாலும் முதலமைச்சரின் பக்கம் நியாயம் இருந்ததாலும் வேறுவழியின்றி உங்கள் நடவடிக்கையிலிருந்து நீங்கள் பின்வாங்கினீர்கள்.

பிரச்சினை சூடுபிடிக்கத் தொடங்கியதும் இரண்டாம் நாள் நான் உங்களிடம் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தை யாழ்ப்பாணத்தில் கூட்டுமாறு வேண்டுகோள் விடுத்தேன். ஆனால் நீங்கள் அன்று நேரம் இல்லையென்றும் அடுத்த இரண்டு தினங்கள் கழித்து கொழும்பில் சந்திக்கலாம் என்றும் கூறி கட்சித் தலைவர்களுக்கு அறிவிக்குமாறு என்னிடம் தெரிவித்திருந்தீர்கள்.

 இது தொடர்பாக நான் மாவை அண்ணனைத் தொடர்புகொண்டபோது அவர்இ 'நான் இப்பொழுது ஆளுநர் அலுவலகத்தில் இருக்கிறேன். நீங்கள் சம்பந்தருடன் கதைத்துவிட்டீர்கள்தானே அதுவே போதுமானது' என்று சொல்லி தொலைபேசியைத் துண்டித்துவிட்டார். பின்னர் அழைக்கவில்லை. 

ஏனையவர்களுடனும் தொடர்பு கொள்ள முடியவில்லை. ஒரு வழியாக புளொட் கட்சியைச் சேர்ந்த முக்கியஸ்தர் ஒருவரிடம் கூட்டம் பற்றிய தகவலைத் தெரிவித்தேன். இப்படி ஒரு இக்கட்டான நேரத்தில் ஒன்றிணைந்த செயற்பாட்டிற்காக அழைப்பு விடுக்கப்பட்டபோதும் உங்களால் உரியவகையில் செயலாற்ற முடியாமல் போயிருந்தது.

இந்த நிலையில்இ முதலமைச்சருக்கு ஆதரவாக பங்காளிக்கட்சிகளும்இ நியாயத்தின் பக்கம் நின்ற மாகாணசபை உறுப்பினர்களும் அணிதிரண்டிருந்தனர். நாங்கள் தலையிடாமல் இருந்திருந்தால் நிலைமை மிகவும் மோசமாகிப் போயிருக்கும். 

நாம் கூடிப் பேசியிருந்தால் பிரச்சினையை சுமுகமாக முடித்திருக்க முடியும். இறுதியில் பங்காளிக்கட்சிகள் மதத்தலைவர்கள் ஆகியோரின் முயற்சியாலேயே வடக்கு மாகாணசபையின் பிரச்சினையை முடிவிற்குக் கொண்டுவரமுடிந்திருந்தது. 

கூட்டமைப்பின் பெயரில் தமிழரசுக் கட்சியை வளர்க்க வேண்டும் என்ற குறுகிய சிந்தனையே இவ்வளவு பிரச்சினைகளுக்கும் காரணம் என்று எனது விளக்கத்தை முன்வைத்தேன்.

இதன்போது என்னையும் சேர்த்து பன்னிரண்டு உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர். அவர்களில் ஒருவரும் இடைநடுவில் பேசவில்லை. எனது உரையைத் தொடர்ந்து திருவாளர் சுமந்திரன் உரையாற்றும்போது நான் வைத்த விமர்சனங்களை ஏற்றுக்கொண்டார்.

மேலும்அடுத்தமுறை மாகாணசபைத் தேர்தலில் நாங்கள் விக்னேஸ்வரனை வேட்பாளராகத் தெரிவு செய்யாவிட்டால் நீங்கள் போராட்டம் நடத்துவீர்கள். நீங்கள் மூவரும் இணைந்து அவருக்கு ஆதரவளிப்பீர்கள் என்று தெரிவித்தாரர். ஆம் இந்தமுறை நீங்கள் அறிமுகம் செய்த விக்னேஸ்வரனை அடுத்தமுறையும் நாம் ஆதரிப்போம் என்று பதிலளித்தேன்.

தமிழரசுக் கட்சியின்மீதும் கூட்டமைப்பின் தலைவர்மீதும் எம்.ஏ.சுமந்திரன்மீதும் நான் வைத்த விமர்சனங்களை திருவாளர் சுமந்திரன் ஏற்றுக்கொண்டது போலவே சரவணபவன் அவர்களும் ஏற்பதாகக் கூறினார்.

உண்மை இவ்வாறிருக்கையில்இ திருவாளர் சரவணபவனை ஆசிரியராகக் கொண்டு இயங்கும் உதயன் பத்திரிகை 'அடுத்த முறையும் விக்கி சி.எம்மாக ஈபிஆர்எல்எப் எதிர்ப்பு' என்று 23.06.2017அன்றைய நாளிதழில் முன்பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் இந்த செய்தி தொடர்பாக என்னைத் தொடர்புகொள்ள முயற்சித்தபோதும் நான் பதிலளிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளது.

என்னைத் தொடர்புகொள்ள முயற்சித்ததாகத் தெரிவித்திருப்பது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது. மேலும் செய்தி பாராளுமன்றக் குழுக் கூட்டம் தொடர்பானது. எனவே என்னைத் தொடர்பு கொள்ள முடியாவிட்டாலும் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களைக் கேட்டறிந்துகொண்டிருக்க முடியும். இதில் மற்றொரு சிறப்பம்சம் அந்தப் பத்திரிகையின் நிர்வாக ஆசிரியரான சரவணபவன் நான் உரையாற்றியபோது கூட்டத்தில் சமூகமளித்திருந்தார். அவரிடம் கேட்டாவது செய்தியை ஊரிஜிதப்படுத்தியிருக்க முடியும். மேலும் செய்தியைக் கொடுத்தவர் யார் என்பது குறித்து எத்தகைய தகவலும் வெளியிடப்படவில்லை. இதன் மூலம் செய்தியின் நம்பகத்தன்மை கேள்விக்குள்ளாகிறது.

அறிந்தோ அறியாமலோ உதயன் பத்திரிகை ஒரு விடயத்தைத் தெளிவுபடுத்தியுள்ளது. இதுவரை காலமும் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுக்கூட்ட விபரங்களை ஈபிஆர்எல்எப்தான் ஊடகங்களுக்குத் தெரிவிக்கிறது என்ற குற்றச்சாட்டு எம்மீது சுமத்தப்பட்டிருந்தது. இன்று உதயன் அவசர அவசரமாக முற்றிலும் உண்மைக்கு மாறாக திரிபு படுத்திய ஒரு செய்தியை வெளியிட்டதன் மூலம் அந்தக் கருமத்தைத் தானே செய்துவந்துள்ளமை நிரூபணமாகியுள்ளது. 

பொதுவாக கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் விடயங்களை பத்திரிகைகளுக்கு தெரிவிப்பதில்லை என்பது மரபாகக் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. எப்பொழுது தமிழரசுக் கட்சி தன்னிச்சையாகச் செயற்படத் தொடங்கியதோ அன்றிலிருந்து யாராவது ஒருவர் செய்திகளை முந்திக்கொண்டு ஊடகங்களுக்குத் தெரிவிப்பது தொடர்கிறது. இந்த விடயத்திலும் நாம் உட்கட்சி விவகாரத்தை கட்சிக்குள்ளேயே தீர்ப்பதற்கு முயற்சித்தோம்.

உதயன் உண்மைக்கு மாறான செய்தியை வெளியிட்டதன் விளைவாக கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட முக்கியமான விடயங்களை ஊடகத்திற்கும் அதன் வாயிலாக மக்களுக்கும் தெரியப்படுத்த வேண்டிய நிர்ப்பந்தம் எனக்கு ஏற்பட்டது.
« PREV
NEXT »

No comments