யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் கொலை வழக்கினை வேறு திசைக்கு நகர்த்த முயற்சிக்கின்றீர்களா? என யாழ்.நீதவான் நீதிமன்ற நீதிபதி குற்றப் புலனாய்வாளர்களிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
குறித்த வழக்கு விசாரணை இன்று(13) யாழ்.நீதிவான் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
மேலும் விசாரணையின் போது, குற்றப்புலனாய்வு பிரிவினர் வழக்கு அறிக்கையினை சமர்ப்பிக்க கால தாமதம் ஆகியமையினால் கடும் தோனியில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மாணவர்களின் கொலை விசாரணை அறிக்கையை சமர்பிக்க தாமதப்படுத்துவதன் மூலம் வழக்கு விசாரணையை வேறு திசைக்கு நகர்த்துவதற்கு முயற்சிக்கின்றீர்களா? எனவும் கேள்வி எழுப்பினார்.
இந்த கட்டத்தில் எதற்காக சட்டமா அதிபரின் ஆலோசனை பெறுகீறீர்கள்? என்பது தொடர்பாகவும் கேள்வி எழுப்பியிருந்தார்.
முல்லைதீவு சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் மேற்கொண்ட விசாரணை தொடர்பில் மறு வழக்கு தவனையின் போது முல்லைதீவு சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் மன்றில் முன்னிலையாகி விளக்கமளிக்க வேண்டும் என விசேட உத்தரவிட்டுள்ளார்.
அவ்வாறில்லையாயின் அவருக்கு எதிராக மன்றானது பகிரங்க பிடியானை பிறப்பித்து அவரை கைது செய்யும் எனவும் யாழ்.நீதிவான் நீதிமன்ற நீதிவான் எஸ்.சதீஸ்கரன் தெரிவித்தார்.
அத்துடன் குறித்த வழக்கினை எதிர்வரும் 27 ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளார்.
யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 20 ஆம் திகதி யாழ்.பொலிஸாரினால் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments
Post a Comment