Latest News

August 09, 2016

அவுஸ்திரேலியாவின் சனத்தொகை கணக்கெடுப்பில் தமிழீழம் தனியாக இணைப்பு!
by admin - 0

அவுஸ்திரேலியாவின் சனத்தொகை கணக்கெடுப்பில் தமிழீழம் தனியாக இணைப்பு!

அவுஸ்திரேலியாவின் சனத்தொகை கணக்கெடுப்பில் பிறந்த நாடு என்பதற்கு தமிழீழம் எனவும் தனியாக குறிக்கப்படமுடியும் எனவும் அதன் மூலம் தமிழீழம் எனக்குறிப்பிடுவோர் தனியான பகுதியினராக கணக்கெடுப்பில் உள்ளடக்கப்படுவார்கள் என அந்நாட்டு கணக்கெடுப்பு திணைக்களம் அறிவித்துள்ளது.

அதற்கமைவாக சனத்தொகை கணக்கெடுப்பின்போது பிறந்தநாடு என்பதற்கு தமிழீழம் எனவும் பேசும்மொழி பூர்வீகம் என்பதற்கு தமிழ் எனவும் பயன்படுத்துமாறு சமூக ஆர்வலர்களால் சமூகவலைத்தளங்களில் கருத்துகள் பகிரப்பட்டுவருகின்றன.

அவற்றில் சில வருமாறு:

சர்வதேச சமூகங்களும் ஊடகங்களும் எங்களை தமிழர் என்றே வகைப்படுத்துகின்றனர். ஆனால் நாங்கள் எங்களை தமிழர்களாக பிரகடனப்படுத்துவதில் இடர்படுகின்றோம்.

ஒஸ்ரேலியா போன்ற தமிழர்கள் ஏறத்தாழ 75000 அளவில் வசிக்கின்ற நாடுகளில் எமது எண்ணிக்கையை சரிவர பிரகடனப்படுத்துவதன் மூலமே தமிழர் தொடர்பான சமூகபிரச்சனைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொள்ளமுடியும்.

இம்முறை பிறந்தநாடு எனும்போது தமிழீழம் எனவும் பதிவோம்.

எம்மை நாமே யாரென்றுசொல்வோம்.

Q11 – Country of Birth – TAMIL EELAM
Q15 – Language spoken at home (other than English) – TAMIL
Q17 – Our ancestry – TAMIL

குறிப்பு:
1. இம்முறை தமிழீழம் (TAMIL EELAM) என்று குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் பதியப்படாது போனால் அடுத்தமுறை கணக்கெடுப்பில் தமிழீழம் என்ற தனியான பகுதி கணக்கெடுப்பிலிருந்து நீக்கப்படக்கூடிய சாத்தியம் உண்டு.

2. ஒஸ்ரேலியாவின் ஏதோவொரு வீட்டில் எதிர்வரும் செவ்வாய்கிழமை 09-08-2016 இரவு இருப்பவர்கள் எவரும் இக்கணக்கெடுப்பில் பங்குபற்றியே ஆகவேண்டும். அல்லது தண்டப்பணம் கட்டவேண்டும்.australeja01


நாங்கள் யார்? எமது அடையாளம் என்ன?

இலங்கை தமிழை பூர்வீகமாக கொண்டு, இலங்கையில் பிறந்து, தமிழை ஆங்கிலம் தவிர்ந்த மொழியாக பேசிக்கொண்டு அவுஸ்திரேலியாவில் வசிப்பவர்கள்.

2016 குடிசன மதிப்பீட்டு கணக்கெடுப்பில் இல 16 – ஆங்கிலம் தவிர்ந்த வேறு எந்த மொழியை வீட்டில் பேசுகிறீர்கள் என்ற கேள்விக்கு தமிழ் என்று குறிப்பிட வேண்டியது எமது வரலாற்று கடமையாகும்.

2011 குடிசன மதிப்பீட்டு தரவுகளின்படி வெவ்வேறு பூர்வீகங்களை கொண்ட மக்களில் மொத்தமாக 50151 மக்கள் வீட்டில் தமிழை பேசுகிறார்கள் என்ற கணக்கெடுப்பின் படி தான் அவுஸ்திரேலிய அரசு நமது தமிழ் மக்களுக்கான சலுகைகளையும் மானியங்களையும் வழங்கியது என்பது மிக தெளிவான உண்மையாகும்.

கடந்த 5 வருடங்களில் இறந்தவர்களையும் நாட்டை விட்டு பல் வேறு காரணங்களால் வெளியேறியவர்களையும் தவிர்த்து புதிதாக குடியேறியவர்களும், தமிழ் பேசும் மக்களுக்கு பிறந்த குழந்தைகளும்
2016 குடிசன மதிப்பீட்டில் சேர்த்துக்கொள்ள படுவதனால் இம்முறை கணக்கெடுப்பில் இத்தொகையை இரட்டிப்பாக்குவதற்கு நாம் எல்லோரும் எம்மாலான பங்களிப்பை வழங்க வேண்டும்.

இதற்காக;
நாமும், நமது குழந்தைகளும், நமது முதியோரும், நமது தமிழ் நண்பர்களும், அவர்களை சார்ந்தவர்களும் ஆங்கிலம் தவிர்ந்த மொழியாக வீட்டில் பேசப்படும் மொழி தமிழ் என்பது குறிப்பிட பட வேண்டிய அவசியத்தை ஊக்குவிக்க வேண்டும்.australeja02

மிகவும் முக்கியமாக நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது!!!!!!!!

எமது பூர்வீகம் இலங்கை தமிழ் என்பதாகும்.
நாம் நம்மை இலங்கை தமிழர்கள் என அடையாளம் காட்டி கொண்டால் மட்டுமே உலக அரங்கில் எமது தொகை அவுஸ்திரேலியாவில் வாழும் இலங்கை தமிழர் தொகையை நிர்ணயிக்கும்.

அப்பொழுது தான் ;
1 நாம் இங்கே ஏன் புலம்பெயர்ந்தோம் என்ற வரலாறு எழுத்துகளால் பொறிக்கப்படும்.( 2011 இன் எண்ணிக்கைக்கும் 2016 இன் எண்ணிக்கைக்கும் இடையிலான வேறு பாட்டுக்கான காரணம் சுட்டிக்காட்டப்படும்)
2 நம்மிடையே நம்முடன் வாழும் இலங்கை தமிழ் சகோதர சகோதரிகளின் அகதி விண்ணப்பங்களில் கணிசமான கவன ஈர்ப்பு செலுத்தப்படும்.
3 அவுஸ்திரேலிய பிரஜா உரிமை கொண்ட இலங்கை தமிழர்கள் அகதிகளாக வந்தவர்களை வழிநடத்தக்கூடிய தகுதியையும் அவர்களை நம் சகோதரங்களாகவும் ஏற்றுக்கொண்டமையையும் உறுதிப்படுத்த முடியும்.

குறிப்பு;
“இலங்கை” என்பது தான் நாம் பிறந்த நாடு.
Ceylon என்ற பெயர் Sri Lanka என மாற்றப்பட்டமை ஓர் துரதிர்ஷ்டமான, தமிழர்களாகிய எம்மால் ஏற்றுக்கொள்ளமுடியாத சொற்பதம் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

ஆனால் சமகாலத்தில் எம்மை உலக அரங்கிலோ, அவுஸ்திரேலியாவிலோ இலங்கை தமிழர்கள் என அடையாளப்படுத்த வேண்டிய தேவையை நாம் உணர வேண்டும்.
இதனை அவுஸ்திரேலிய தமிழர் பேரவையும், தமிழ் பாடசாலைகளின் கூட்டமைப்பும், தமிழ் மூத்தோர் சங்கங்களும் உணர்ந்து செயல்படுவார்கள் என எதிர்பார்க்கிறோம்.

“Other ” என்ற சொற்பதம் கணக்கெடுப்பில் “Other” என்று மட்டும் தான் குறிப்பிடப்படும் என்பது தவிர்க்க முடியாத்து “Tamil nfd” என்ற பூர்வீகம் எமக்கு ஓர் அடையாளத்தை கொடுக்காது என்பதனை nfd (no further definison) குறித்து நிற்கிறது என்ற உண்மையை உணர்ந்துதானாக வேண்டும்.

இத்துடன் இணைக்கப்பட்ட 2011 குடிசன மதிப்பீட்டு புள்ளிவிபரங்கள் நாம் கடந்த காலத்தில் விட்ட தவறையும், எதிர் காலத்தில் விடப்போகும் தவறையும் புத்தி ஜீவிகளுக்கு உணர்த்தும் என்பதில் எந்த ஐயமுமில்லை.

“இலங்கை தமிழர்” என்ற சொற்பதம் எம்மை “Ceylon tamil” என்றோ அல்லது “தமிழ் ஈழ தமிழர்” என்றோ மட்டுமே மறைமுக அடைமானம் கொள்ளப்படும் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.

இலங்கை தமிழர்களாக நம்மை அடையாளம் காட்டி மற்றய உலக தமிழர்களோடு இணைந்து தமிழ் மொழியையும் தமிழ் இனத்தையும் வளர்த்து வாழ வைக்கும் முற்போக்கு சிந்தனையை நமதாக்கிக்கோள்வோம்!

வாழ்க தமிழ்! வளர்க தமிழ் மொழி

மது எமில்-

பெரும்பாலான சீக்கியர்களிடம் “நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?” என்று கேட்டால் “நான் காலிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவன்” என்று பெருமையுடன் பதில் சொல்லுவார்கள். இவர்களைப் போன்று தமிழர்களும் தம்மைத் தாமே முதலில் அங்கீகரிக்க வேண்டும்.

அவுஸ்திரேலியாவில் சனத்தொகைக் கணக்கெடுப்பு இவ்வாண்டு நடைபெறுகிறது. பல் கலாச்சார விடயங்களுக்கான நிதிப்பங்கீடு முதல் பல முக்கிய தீர்மானங்களை அவுஸ்திரேலிய அரசு மேற்கோள்வதற்கு ஐந்தாண்டுகளுக்கு ஒரு தடவை மேற்கொள்ளப்படும் இக்கணக்கெடுப்பு முக்கிய பங்கு வகிக்கிறது.

2006 ஆம் ஆண்டில் அவுஸ்திரெலியாவில் சனத்தொகைக் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்ட போது 9,000 ஈழத்தமிழர்கள் வசிப்பதாக தவறாகக் கணக்கிடப்பட்டது. ஆனால் உண்மையில் அதை விடப் பன் மடங்கு தமிழர்கள் அப்போது அவுஸ்திரேலியாவிலிருந்தனர்.

எவ்வாறு இந்தத் தவறு நிகழ்ந்தது? நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்? என்ற கேள்விக்கு Ceylon என்றும் பேசும் மொழி தமிழ் என்றும் பதிலளித்தவர்களும் மற்றைய நாட்டுத் தமிழர்கள் மாத்திரமே தமிழர்கள் என்று கணக்கிடப்பட மிகுதி அனைவருமே சிங்களவர்களாகக் கணக்கிடப்பட்டனர்.

2011 ஆம் ஆண்டின் சனத்தொகைக் கணக்கெடுப்பின் போது சில அமைப்புக்களும் சமூக ஆர்வலர்களும் அவுஸ்திரேலியா வாழ் ஈழத் தமிழர்கள் மத்தியில் ஏற்படுத்திய விழிப்புணர்வின் காரணமாக கூடுதலானவர்கள் Ceylon எனவும் Ceylon Tamil எனவும் பதிலளித்தன் காரணமாக தமிழர்களின் எண்ணிக்கை 50,000 எட்டியது ஓரளவு வெற்றியே. தற்பொழுது 72,000 தொடக்கம் 75,000 வரையிலான தமிழர்கள் உண்மையில் அவுஸ்திரேலியாவில் வசிக்கின்றனர். இவர்கள் இது வரை முறையாகக் கணக்கிடப்படவில்லையென்பது ஒரு கவலை தரும் செய்தியாகும்.

இந்நிலையில் 2016 ஆம் ஆண்டின் அவுஸ்திரேலியா சனத்தொகைக் கணக்கெடுப்புத்தினம் ஆகஸ்ட்டு 09 ஆம் திகதி என்பதுடன் விபரங்களைத் தபால் மூலமோ இணையத்தினூடாக வழங்கத் தவறுபவர் 180 அவுஸ்திரேலிய டொலர்களை அபராதமாகச் செலுத்த வேண்டும். குறிப்பிட்ட தினத்தில் அவுஸ்திரேலியா எல்லைக்குள் இருக்கும் எந்தவொரு பிரசையும் அவர் சுற்றுலாப்பயணியாக இருந்தாலும் கூட தம்மைப்பற்றிய விபரங்களைப் பதிவுக்குட்படுத்த வேண்டும்.

இவ்வாண்டுச் சனத்தொகைக் கணக்கெடுப்பில் நீங்கள் எந்த நாட்டில் பிறந்தவர் என்ற கேள்விக்கு “Tamil Eelam” என்றும் உங்கள் பூர்வீகம் என்ன என்ற கேள்விக்கு “Elam Tamil” எனவும், உங்கள் தாய் மொழி எது என்ற கேள்விக்கு “Tamil” எனவும் பதிலளித்து ஒரு மாற்றத்தை இம்முறை ஏற்படுத்த முடியும்.

Tamil Eelam என்று பதிலளிக்கும் போது அதனை ஒரு தரவாகப் பதிவு செய்ய 7107 என்ற (Country Code7107 )குறியீட்டு இலக்கத்தை அவுஸ்திரேலியப் புள்ளி விபரப் பணியகம்(Australian Bureau of Statistics) ஒதுக்கியிருக்கிறது. இப்பதில்களின் மூலம் ஒரு பெறுமதியான செய்தியை அவுஸ்திரேலிய அரசுக்கு சொல்வதற்கு ஒரு சந்தர்ப்பமாக இதனைப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

எமது இன அடையாளத்தை துணிந்து வெளிப்படுத்த நாமே தயங்குவோமாயின் அந்நியர்கள் ஒரு போதும் எமது உரிமைகளைத் தட்டில் வைத்துப் பரிசாகத் தரப் போவதில்லை. எனவேதான் தமிழ் செயற்பாட்டாளர்கள் இதனை ஒரு முக்கிய விடயமாகப்பரப்புரை செய்து வருகின்றனர். ஆகக் குறைந்தது 3,000 தமிழர்களாவது இவ்வாறு பதிலளிப்பார்களாயின் அது ஒரு கணிசமான திருப்பத்தை ஏற்படுத்தும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. எனவே இச்செய்தியை அனைவருக்கும் பகிர்ந்து கொள்வோம்.
« PREV
NEXT »

No comments