தொழிலாளர் வர்க்கத்தில் காலிப்பிரிவோ கிருலப்பனைப் பிரிவோ கிடையாது. தொடர்ந்து தொழிலாளர்கள் ஏமாற்றப்பட்டு வருகின்றனர். இதற்கு தொடர்ந்தும் தொழிலாளர்கள் தலை சாய்க்க முடியாது என்று சமூக அபிவிருத்தி நிறுவகத்தின் தலைவர் பெ.முத்துலிங்கம் தெரிவித்தார்.
கண்டி தொழிற் திணைக்களத்தில் உழைக்கும் பெண்கள் முன்னணி ஒழுங்கு செய்திருந்த மேதின நிகழ்வில் தொழிற் சங்கங்களின் பிரதிநிதிகளுக்கு மத்தியில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது-,
இன்று வரை காலி நகரமா கிருலப்பனையா என்ற வினாவே மேலோங்கி நின்றது. தொழிலாளர்களின் தேவைகளைப் பெற்றுக் கொடுக்க அல்லது தொழிலாளர் உரிமைகளை வழங்க காலி என்றோ, கிருலப்பனை என்றோ அவசியமில்லை. தொழிலாளர் வர்க்கத்தில் காலிப்பிரிவோ கிருலப்பனைப் பிரிவோ கிடையாது. இதுவெல்லாம் தொடர்ந்து தொழிலாளர்களை சுரண்டி ஏமாற்றுவதற்கு மேற்கொள்ளும் போலிக்கவர்ச்சிகளாகும். இப்படியான விடயங்களில் தொழிலாளர் விழிப்படைய வேண்டும்.
தொழிலாளர்களுக்கு ஏகப்பட்ட பிரச்சினைகள் உண்டு. தொழில் உரிமை, சம்பள உரிமை என்றெல்லாம் பல விடயங்கள் இருக்க மக்களின் கவனத்தை வேறு பக்கம் திருப்பும் செயலாக இது உள்ளது என்றார்.
உழைக்கும் பெண்கள் முன்னணியின் செயலாளர் செல்வி. யோகேஸ்வரி கிருஷ்ணன் தெரிவித்ததாவது-,
இன்று நாட்டில் அனைத்துத் தொழில் துறைகளும் பெண்ணியல் மயமாக்கப்பட்டு வருவதைக் காண்கிறோம். இது பற்றி பெண்கள் முன்னேறிவருவதாகக் கூறினாலும் உண்மையில் குறைவேதன தொழிற் பட்டாளத்தை உருவாக்கும் ஒரு விடயமாக அது உள்ளது. எல்லாத் துறைகளிலும் பெண் தொழிலாளர்கள் உள் வாங்கப்பட்டு வருகின்றனர். அவர்களைச் சுரண்டுவது இலகு. எனவே பெண்கள் விடயம் தொடர்பான தொழிற்சங்கங்களின் தேவை இன்று அதிகரித்துள்ளது.
தோட்டத் தொழிலாளர்களைப் பொறுத்தவரை அண்மைக்காலமாக சம்பளஉயர்வு பற்றி பரவலாகப் பேசப்பட்டு வந்தது. முதலில் 1000 ரூபா ஒரு நாளைக்கு வழங்கப்பட வேண்டும் என்ற கோஷம் காணப்பட்டது. பின்னர் அது தொழில் அமைச்சின் பேச்சுவார்த்தையுடன் 750 ரூபாவாக மட்டுப்படுத்தப்பட்டது. பின்னர் தனியார் துறைக்கு அதிகரிக்கப்பட்ட 2500 ருபா மாதாந்தத் தொகை தோட்டத் தொழிலாளருக்கும் அதிகரிக்கப்பட வேண்டும் என்ற கோஷம் மேலோங்கியது. இறுதியில் இன்று எதுவுமே நடைமுறையில் இல்லாத நிலை காணப்படுகிறது.
வீட்டுப் பணிப் பெண்களுக்கு ஆகக்குறைந்த சம்பள நிர்ணயம் ஒன்று வெளியிடப்பட வேண்டும். அவர்களது தொழில் ஒப்பந்தம் மற்றும் தொழில் உரிமைகள் பேணப்பட வேண்டும். இதற்கான அழுத்தங்களைக் கொடுக்க வேண்டும்.
அதிகமான பெண் தொழிலாளர்களுக்கு விடுமுறைகளே வழங்கப்படுவதில்லை. போயாதினத்தில் மாத்திரம் விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது. பெண்களது சில தொழிற் துறைகள் நிறுவன மயமாக்கப்படவில்லை. இதனால் எதுவித உரிமைகளையும் பெற முடியாத நிலை தோன்றியுள்ளது. அதிகமானவர்களுக்கு ஊழியர் சேமலாப நிதி, ஓய்வூதியக் கொடுப்பனவு போன்றவை செலுத்தப்படுவதில்லை. எனவே இப்படியான சுரண்டல்கள் தொடர்பாக தொழிலாளர்கள் விழிப்படைய வேண்டும் என்றார்.
No comments
Post a Comment