பாணந்துறை வடக்கு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கெசல்வத்த - ஜயா மாவத்தையில் அமைந்துள்ள பிரபல நிறப்பூச்சு உற்பத்தி
நிறுவனத்தில் நேற்று இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட வாயுக் கசிவு காரணமாக சுமார் 50 பேர் வரையில் சுவாச பிரச்சினை காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று காலை 10.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் நிறுவனத்தின் 'தினர்' என்ற திரவம் களஞ்சியப்படுத்தப்படும் பாரிய கொள்கலனில் உள்ள குழாயொன்றில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்தே இந் நிலைமை ஏற்பட்டதாகவும், பொலிஸார் தெரிவித்தனர்.
இதனால் நிறுவனத்துக்கு அருகில் உள்ள சுமார் 30 குடும்பங்கள் வரையில் அங்கிருந்து வெளியேற்றப்பட்டதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
பிரபல பெயின்ட் உற்பத்தி நிறுவனமான குறித்த நிறுவனத்தில் நேற்றும் வழமை போன்று பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதன் போது எரிவாயு சிலிண்டர் ஒன்று வெடித்து, தினர் கொள்கலனுக்கு செல்லும் குழாயை சேதப்படுத்தியுள்ளதாக கூறப்படுகின்றது. இதனால் அந்த குழாயிலும் வெடிப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து தினர் கொள்கலனில் இருந்து ஏற்பட்ட வாயுக் கசிவு காரணமாக அந் நிறுவனத்தில் பணி புரியும் பலருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. இந் நிலையிலேயே உடனடியாக மூச்சுத் திணறலுக்கு உள்ளானவர்கள் பாணந்துறை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
சம்பவத்தையடுத்து உடனடியாக ஸ்தலத்து பொலிஸாரும் விஷேட நிபுணர்களும் விரைந்த நிலையில் பெயின்ட் உற்பத்தி நிறுவனத்துக்கு அருகில் உள்ள சுமார் 30 குடும்பங்களை பாதுகாப்பான இடங்களுக்கு அகற்றினர். எவ்வாறாயினும் வாயுக் கசிவு பின்னர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் காரணமாக நேற்று மாலை வரை சுமார் 50 பேர் வரையில் பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்தன. அவர்களில் பலர் நேற்று இரவுவரை அங்கேயே தங்கியிருந்து சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் அவர்களின் நிலைமை பாரதூரமாக இல்லை என வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்தன.
வெடிப்பு மற்றும் வாயுக் கசிவு தொடர்பான காரணத்தைக் கண்டறிய பொலிஸார் விஷேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
No comments
Post a Comment