Latest News

November 23, 2015

தமிழர்களுக்கு அமெரிக்கா '100 சதவீத ஆதரவு'-சம்பந்தர்!
by Unknown - 0

இலங்கையிலுள்ள தமிழர்களுக்கு அமெரிக்கா நூறு சதவீதம் ஆதரவு அளிக்கும் என அமெரிக்க உயரதிகாரி சமந்தா பவர் உறுதியளித்தார் என சம்பந்தர் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

ஐ நாவுக்கான அமெரிக்காவின் நிரந்திரப் பிரதிநிதி சமந்தா பவர், இலங்கை வந்து ஜனாதிபதி, பிரதமர் உட்பட பல்தரப்பினரை சந்தித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சமந்தா பவரை இன்று சந்தித்து பேசினர்.
அச்சந்திப்பில் போருக்கு பின்னரான காலத்திலும் தமிழ் மக்கள் எதிர்கொண்டு வரும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து அவருக்கு விளக்கப்பட்டதாக கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தர் தெரிவித்தார்.

குறிப்பாக குடிமக்கள் வசிக்கும் பகுதிகளில் இராணுவப் பிரசன்னம் இன்னும் குறிப்பிடத்தக்க அளவுக்கு அதிகமாக உள்ளதை அவரது கவனத்துக்கு தாங்கள் கொண்டுவந்ததாகவும் சமபந்தர் மேலும் தெரிவித்தார்.

இலங்கையில் தமிழ் மக்களுக்கு நியாயமானதொரு தீர்வைப் பெற்றுத்தர தம்மாலான அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும் என்றும் அதுகுறித்து தமிழ் மக்கள் எவ்விதமான சந்தேகமும் கொள்ளத் தேவையில்லை என்றும் சமந்தா பவர் தமக்கு வாக்குறுதி அளித்தார் எனவும் சம்பந்தர் கூறினார்.

ஐ நா மனித உரிமைகள் பேரவையில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் முழுமையாக நிறைவேற்றப்பட வேண்டியத் தேவை, உண்மைகள் அறியப்பட வேண்டியது, உண்மையின் அடிப்படையில் நீதி வழங்கப்பட வேண்டியத் தேவை ஆகியவை குறித்து தாங்கள் அவரிடம் வலியுறுத்தியதாகவும் அவர் தமிழோசையிடம் தெரிவித்தார்.

போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டும், இனியும் இலங்கையில் இப்படியானச் சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியதன் தேவை குறித்தும் நல்லிணக்கம் தொடர்பிலும் சமந்தா பவர் அம்மையாருடன் கூட்டமைப்பினர் உரையாடியதாவும் சம்பந்தர் கூறினார்.

தமிழ் மக்களுக்கான வேலை வாய்ப்புகள், வீட்டு வசதி, மீள்குடியேற்றம், முறையான புனர்வாழ்வு, கைதிகளின் விடுதலை ஆகியவை குறித்தும் அவருடன் விரிவாகப் பேசப்பட்டதாகவும் சம்பந்தர் தெரிவித்தார்.
« PREV
NEXT »

No comments