Latest News

October 29, 2015

WT 1190 F விண் பொருள் அல்ல-நாளை அதிகாலை கிரக நகர்வுகளால் வானில் விநோதம்
by Unknown - 0

நவம்பர் மாதம் 13 ஆம் திகதி இலங்கையின் தென்பகுதிக் கடலில் விழக்கூடிய சாத்தியம் உள்ளதாகக் கூறப்படும் செய்மதிச் சிதைவு, விண் பொருள் அல்லவென அடையாளம் காணப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

WT 1190 F எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த சிதைவு குறித்து பிரித்தானியாவின் டெய்லி மெயில் உள்ளிட்ட பல்வேறு இணையத்தளங்கள் தகவல்களை வெளியிட்டிருந்தன.

இந்த சிதைவு தொடர்பில் வினவியபோது, 2012ஆம் ஆண்டிலிருந்து அந்த பொருள் விண்வெளியில் கண்காணிக்கப்பட்டு வருவதுடன், அதனடிப்படையிலான ஆராய்ச்சிகளின் பிரகாரம் அது விண்பொருள் அல்லவென உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஆதர் சீ கிளார்க் நிலையத்தின் விஞ்ஞானி ஒருவர் குறிப்பிட்டார்.

நவம்பர் மாதம் 13 ஆம் திகதி இலங்கை நேரப்படி முற்பகல் 11.50 அளவில் தென்பகுதி கரையோரத்திலிருந்து 65 கிலோமீற்றர்களுக்கு அப்பாலுள்ள கடலில் இந்த பாகம் விழக்கூடிய சாத்தியமுள்ளதாகவும், அது விழக்கூடிய சரியான இடம் தொடர்பில் விஞ்ஞானிகள் தொடர்ந்தும் ஆய்வுகளை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சிதைவின் நகர்வு குறித்து ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் விஞ்ஞானிகள் சிலர் உன்னிப்பாக கண்காணித்து வருவதாக சர்வதேச தகவல்கள் குறிப்பிடுகின்றன.

எவ்வாறாயினும், இந்த சிதைவினால் இலங்கைக்கு எந்தவிதமான பாதிப்புகளும் ஏற்பட மாட்டாதென நட்சத்திர சாஸ்திரவியலாளர்கள் கருதுகின்றனர்.

நட்சத்திர சாஸ்திரவியல் தொடர்பில் ஆர்வம் காட்டுகின்றவர்களுக்கு நாளை அதிகாலை அபூர்வ சந்தர்ப்பமொன்று கிட்டவுள்ளது.

மூன்று கிரகங்கள் ஒன்றுக்கொண்டு மிகவும் நெருக்கமாக பயணிக்கும் அபூர்வ காட்சியை அவதானிக்கும் சந்தர்ப்பம் நாளை அமையவுள்ளது.

இதன் பிரகாரம் வியாழன், செவ்வாய் மற்றும் வெள்ளி கிரகங்கள் ஒன்றுக்கொன்று மிக அருகில் நகருமென ஆதர் சீ கிளார்க் நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.

நாளை அதிகாலை 4 மணியளவில் கிழக்கு வான் பரப்பிலிருந்து 15 முதல் 20 பாகைக்கு இடையில் இந்த கிரக நகர்வுகளைக் கண்காணிக்க முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.

முக்கோண வடிவிலான இந்த கிரகங்களின் அமைவினை சாதாரண கண்காளால் பார்வையிட முடியும் எனவும் ஆதர் சீ கிளார்க் நிலையத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
« PREV
NEXT »

No comments