சிறிலங்கா விவகாரத்தில் அனைத்துலக விசாரணையினை வலியுறுத்;தி தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் ஈழத்தமிழ் உற்சாகத்தினையும் உறுதுணையினையும் தருவதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அமைச்சர் சுதன்ராஜ் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்களுக்கு எதிராக சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதனை வலியுறுத்தியும், இலங்கை தொடர்பாக பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும், இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாட்டை அமெரிக்கா எடுத்தால் அதைமாற்ற இந்தியா ராஜதந்திர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும், என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் உள்ளடக்கிய தீர்மானமொன்று தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இது தொடர்பில் ஜெனீவாவில் கருத்து தெரிவித்திருந்த அமைச்சர் சுதன்ராஜ், இவ்வாறானதொரு தீர்மானம் சிறிலங்காவின் வட மாகாண சபையிலும், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவையிலும் நிறைவேற்றப்பட்டிருந்த நிலையில், தற்போது தமிழக சட்டசபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் முக்கியத்துவம் உள்ளதோடு, சிறிலங்கா தொடர்பிலான ஐ.நா மனித உரிமைச்சபையின் விசாரணை அறிக்கை வெளிவருகின்ற நாளில் இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள தருணம் முக்கியத்துவத்தினை தருகின்றதென தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவினை அனைத்துலக குற்றவியில் நீதிமன்றத்தில் பாரப்படுத்துமாறு ஐ.நாவைக் கோரும் மில்லியன் கையெழுத்து இயக்கத்தில் பல லட்சம் ஒப்படங்களை இட்டுக் கொண்ட தமிழக மக்களின் மன உணர்வுகளை தமிழக சட்டசபைத்தீர்மானம் பிரபலித்துள்ளதாகவும் அமைச்சர் சுதன்ராஜ் தெரிவித்துள்ளார்.
இத்தீர்மானத்தினை முன்மொழிந்த தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களுக்கும், அனைத்து கட்சியினருக்கும் ஈழத்தமிழர்கள் சார்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் நன்றியினைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அமைச்சர் சுதன்ராஜ் தெரிவித்துள்ளார்.
No comments
Post a Comment