Latest News

September 17, 2015

சர்வதேச விசாரணையே தேவை என கத்தோலிக்க ஆயர்கள் கடிதம்
by Unknown - 0

சர்வதேச விசாரணை மட்டுமே, இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயத்தைப் பெற்றுத்தரும் என வடக்கு-கிழக்குப் பகுதியைச் சேர்ந்த 170 கத்தோலிக்க மதகுருமார்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் அவர்கள் கூட்டாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையருக்கு அவசரக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர்.

இலங்கை மீது சர்வதேச விசாரணை தேவை என்று கோரி வந்த அமெரிக்காவும், இப்போது தவறான வழிநடத்தல் காரணமாக தமது நிலையை மாற்றிக் கொண்டுள்ளது என்று கூறும் அவர்களது அறிக்கை, நாட்டில் இரண்டு தேர்தல்கள் நடைபெற்ற பிறகு, புதிதாக அமைந்துள்ள தேசிய அரசு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை வழங்கும் என ஐ.நா. தவறாக நம்புகிறது எனவும் தெரிவிக்கிறது.

ஒற்றுமை இல்லாமல் சமாதானம் ஏற்படாது, அந்த ஒற்றுமை ஏற்பட நீதி வழங்கப்பட வேண்டும் என பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார் திருகோணமலை மறைமாவட்ட ஆயர் நோயல் இம்மானுவேல்.

அப்படியான நீதி, சர்வதேச விசாரணை ஒன்றின் மூலமே வழங்கப்பட முடியும் எனத் தாங்கள் நம்புவதாகவும் அவர் கூறினார்.

உள்நாட்டு விசாரணை முறையாக நடைபெறாது என்பதே தங்களது எண்ணமாக உள்ளது என்றும் திருகோணமலை மறைமாவட்ட ஆயர் கூறுகிறார்.

சர்வதேச விசாரணை நடைபெறும்போது அது பாரபட்சமற்றதாக இருக்கும் என்றும், அது பொறுப்புக்கூறல் மற்றும் நீதிவழங்குவதற்கு உதவும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

சாட்சிகளுக்கு பாதுகாப்பான சூழல் உருவாக்கப்படுவது மிகவும் அவசியம் என்றும், அது இல்லாவிடில் விசாரணை உரிய பலனை அளிக்காது எனவும் திருகோணமலை ஆயர் கூறுகிறார்.

இலங்கையில் தவறிழைத்தவர்கள் தண்டனையிலிருந்து தப்பும் கலாச்சாரம் நிலவுகிறது என்றும், முன்னாள் இராணுவத் தளபதி சரத் ஃபொன்சேகாவுக்கு ஃபீல்டு மார்ஷல் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது அதற்கு ஒரு எடுத்துக்காட்டாக அமைகிறது எனவும் கத்தோலிக்க ஆயர்கள் எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

« PREV
NEXT »

No comments