உத்தரபிரதேசம் மாநிலம் காவல் நிலையத்தில், இலஞ்சம் கொடுக்க மறுத்த பெண்ணுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக இரண்டு பொலிஸார் பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.
பாராபங்கி மாவட்டத்தில் உள்ள காவல் நிலையத்தில் செய்தியாளர் ஒருவரது தாயார் மீது பொலிஸார் தீ வைத்து உள்ளனர். அவருடைய கணவரை வெளியே விடுவதற்கு பொலிஸார் இலஞ்சம் கேட்டு உள்ளனர்.
ஆனால் அவர் மறுக்கவே, அவர் மீது தீ வைக்கப்பட்டு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள பொலிஸார், பெண் தற்கொலை செய்துக் கொள்ள முயற்சி செய்தார் என்று கூறியுள்ளனர்.
பாதிக்கப்பட்ட பெண் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது நிலைமை மிகவும் மோசமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாஜிஸ்திரேட் முன்பு பாதிக்கப்பட்ட பெண் கொடுத்து வாக்குமூலத்தில், தன்னிடம் பெலிஸார் தவறாக நடந்துக் கொண்டதாகவும், அவமானப்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.
தனது கணவரை விடுவிக்க 1 இலட்சம் ரூபா இலஞ்சம் கேட்டனர், அதனை நான் கொடுக்க மறுக்கவே என் மீது தீ வைத்தனர் என்று கூறியுள்ளார்.
மாவட்டத்தின் காகா கிராமத்தில் நடந்த தீ விபத்து தொடர்பாக, பெண்ணின் கணவரை, பொலிஸார் கடந்த ஞாயிறு (05) அன்று விசாரணைக்காக அழைத்து வந்துள்ளனர். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக தீவிர விசாரணையும் நடைபெற்று வருவதோடு அந்த பிரதேசத்தில் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

No comments
Post a Comment