வவுனியா பிரபல வர்த்தகரின் 5 வயது மகன் கடத்தப்பட்ட சம்பவத்துடன் வவுனியா பட்டானிச்சூர் புளியங்குளத்தைச் சேர்ந்த சந்தேக நபர்பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று முன்தினம் பாலர் பாடசாலைக்கு சென்று வீடு திரும்பிக்கொண்டிருந்த சிறுவன் கடத்தப்பட்டிருந்தான். இதனையடுத்து சிறுவனின் தந்தையிடம் 30 இலட்சம் ரூபா கப்பம் கோரப்பட்டிருந்த நிலையில் அத் தொகையை வழங்க முடியாது என தெரிவித்த நிலையில் 10 இலட்சம் தருமாறு கடத்தப்பட்ட நபரினால் வர்த்தகரிடம் கோரப்பட்டிருந்தது.
இதன் படி 10 இலட்சம் ரூபா குப்பை மேடொன்றில் வைக்கப்பட்டதன் பின்னர் சிறுவன் பாதுகாப்பாக விடுவிக்கப்பட்டிருந்தான். இதனையடுத்து வர்த்தகர் வவுனியா பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார்.
உடனடியாக சிறந்த முறையில் செயற்பட்ட வவுனியா பொலிஸார் கடத்திய நபரை மறுநாள் கைது செய்ததுடன் விளக்கமறியலில் வைப்பதற்கு நீதிமன்றத்தின் உத்தரவினை பெற்று விளக்கமறியலில் வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இதேவேளை குறிப்பிட்ட சந்தேக நபர் சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தராக செயற்பட்ட நிலையில் நிதி மோசடி தொடர்பில் பணி நீக்கம் செய்யப்பட்டவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
No comments
Post a Comment