பிரதமராக வேண்டுமெனில் பொதுத்தேர்தலில் போட்டியிடுமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார். அத்துடன், மக்களால் மட்டுமே என்னைப் பிரதமர் பதவியிலிருந்து நீக்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மஹிந்த ராஜபக்சவை பிரதமராக்க சிறிலங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினர் முயற்சிக்கின்றனர். மக்களால் நிராகரிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்ச பின் கதவு வழியாக பிரதமராக முயற்சிப்பது சட்ட விரோதமானதாகும். அவரை எப்படி பிரதமராக்க முடியுமென்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். கண்டியில் நேற்று முன்தினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ரணில் விக்ரமசிங்க இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
யார் பிரதமராக வேண்டுமென்பதை எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மக்களே தீர்மானிக்க முடியும். அதை வேறு எவரும் தீர்மானிக்க முடியாது. மஹிந்தவை பிரதமராக்க வேண்டுமாயின், மக்களுக்கு அதற்கான சந்தர்ப்பத்தை வழங்கி அவர்களின் ஆணையைப் பெறவேண்டும். ஆனால், மஹிந்தவை நாட்டின் பிரதமராக்க மக்கள் விரும்புவார்கள் என நாம் உள்ளிட்ட அனைவரும் நம்பவில்லை என்றும் கூறியள்ளார்.
அவர்கள் மக்கள் ஆணைக்கு ஏன் தலைசாய்க்காதுள்ளனர்? இறைமை மக்களிடம் இல்லை. தம்மிடம்தான் இருக்கின்றது என இவர்கள் இன்னமும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். அரசை மாற்றும் அதிகாரம் மக்களிடம் இல்லை. தம்மிடம்தான் இருக்கின்றது என்று இவர்கள் எண்ணிக்கொண்டிருக்கிறார்கள் என்றும் கூறியுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் புண்ணியத்தில் இருக்கும் அவர்களுக்கு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியாது. மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கு எமக்கு புண்ணியம் உள்ளது. எந்தவொரு சந்தர்ப்பத்திலும், பொதுத் தேர்தலுக்குச் சென்று மக்களின் தீர்ப்புக்கு முகங்கொடுக்க நாம் தயாராக இருக்கின்றோம். மக்கள் எமக்களித்த ஆணையை மாற்றும் அதிகாரம் சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கோ அல்லது ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கோ இல்லை என்றும் கூறியுள்ளார்.
No comments
Post a Comment