Latest News

May 07, 2015

அடையாள அட்டை தேவையில்லை ;வாக்காளரின் வார்த்தை போதும்-பிரிட்டிஷ் தேர்தல்
by Unknown - 0

பிரிட்டிஷ் பொதுத்தேர்தலில் வாக்குப்பதிவு தொடங்கியிருக்கிறது. சுமார் 5 கோடி பேர் வாக்காளர்களாகப் பதிவு செய்திருக்கின்றனர்.

பிரிட்டிஷ் தேர்தல் அமைப்பில் இருக்கும் ஒரு விநோதமான விஷயம்,வாக்காளர்கள் எவரும் வாக்களிக்க எந்தவிதமான அடையாள அட்டையும் தேவையில்லை.

வாக்களர்களுக்கு அனுப்பப்படும் வாக்கு அட்டை, “இந்த ஆவணத்தை நீங்கள் வாக்குச்சாவடிக்கு எடுத்துவரத் தேவையில்லை“ என்று தெளிவாகவே கூறுகிறது.

இந்த அட்டையில் வாக்காளர்கள் எங்கு சென்று வாக்களிக்கவேண்டும் என்ற விவரங்கள் மட்டும் தரப்படுகின்றன.

வாக்குச்சாவடிக்குச் சென்ற பின்னும் கூட, அங்கு வாக்காளர்கள் எந்த ஒரு அதிகாரபூர்வ அடையாள ஆவணத்தையும் காட்டத் தேவையில்லை.

ஐக்கிய ராஜ்ஜியத்தில் கட்டாயமாகக் காட்டப்படவேண்டிய அடையாள அட்டை என்று எதுவும் இல்லை.

வாக்காளர்கள் சரியான வாக்குச் சாவடிக்கு காலை ஏழு மணியிலிருந்து இரவு10 மணிக்குள் சென்று அங்கிருக்கும் வாக்குப்பதிவு அதிகாரியிடம் தங்கள் பெயரைச் சொன்னால், அவர் வைத்திருக்கும் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் விவரங்களைச் சரி பார்த்து, பின்னர் அவர் அந்த வாக்காளருக்கு அவரது வாக்குச் சீட்டைத் தருவார். அதை எடுத்துக்கொண்டு வாக்குப்பதிவு பூத்துக்குச் சென்று , யாருக்கு வாக்களிக்க விரும்புகிறோமோ அவரது பெயருக்கு எதிராக 'X' என்ற குறியிட வேண்டியதுதான். அதுவும் பென்சிலால்.

எனவே உலகின் மற்ற நாடுகள் எல்லாம் முக்கியமாக கருதும் இந்த மாதிரியான ஆவணம் இல்லாமலே தேர்தலை நடத்திக்கொள்ளலாம் என்று ஏன் பிரிட்டன் மட்டும் கருதுகிறது?

பிரிட்டிஷ் பாரம்பரியம்

பிரிட்டனுக்கென்று போருக்குப் பிந்தைய அமைதிக் காலத்தில், அடையாள அட்டையைப் பயன்படுத்திய பாரம்பரியம் இல்லை என்றாலும், கட்டாயமாக அடையாள அட்டை பயன்படுத்தப்பட்ட காலகட்டம் ஒன்றும் இருந்தது.

இரண்டாம் உலகப்போரின் போது, அரசாங்கம் அடையாள அட்டைகளை கட்டாயமாக பயன்படுத்தவேண்டும் என்று வலியுறுத்தியது. ஆனால் போர் முடிந்தவுடன் இந்தப் பயன்பாடு நிறுத்தப்படும் என்று உறுதியளித்தது.இந்த அடையாள அட்டைகள் 1952வரை பயன்படுத்தப்பட்டன. ஆனாலும் அவை குறித்து பெரும் அதிருப்தி நிலவியது. பிரிட்டிஷ் வாழ்க்கை முறையின் மீது இந்த அடையாள அட்டைகள் திணிக்கப்படுவதாகவே கருதப்பட்டது. போர் முடிந்ததும் அந்த அடையாள அட்டைகளின் பயன்பாடும் நிறுத்தப்பட்டுவிட்டது.

அவ்வப்போது இந்த விஷயம் விவாதிக்கப்பட்டு வந்திருக்கிறது. 2001ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி நடந்த தாக்குதல்களை அடுத்து அப்போதைய பிரிட்டிஷ் அரசு 2004ஆம் ஆண்டு விருப்பமுள்ளவர்களுக்கு அடையாள அட்டைகள் தரும் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இது அரசியல் ரீதியாக சாத்தியமானால் பின்னர் கட்டாயமாக்கப்படும் என்றும் கருதப்பட்டது.
ஆனால் இந்த திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது.

தனிப்பட்ட சுதந்திரம்

அடையாள அட்டைகளுக்கு எதிராக எழுந்த கடும் எதிர்ப்புக் குரல்களில் ஒன்று கன்சர்வேடிவ் நாடாளுமன்ற உறுப்பினர் டேவிட் டேவிஸின் குரல். இந்த அடையாள அட்டைகள் பயன்படுத்தப்படுவது என்பது , மக்களைப் பற்றிய தரவுகள் அடங்கிய அரசு ஒன்று உருவாகி, அது மக்களின் அந்தரங்க வாழ்க்கையில் அரசின் ஒற்றர்கள் ஊடுருவிப் பார்க்கவும், கவனமாக செயல்படாத அதிகாரிகள் மக்களின் சொந்த தனிப்பட்ட தரவுகளை பார்க்கவும், கணினிகளை ஊடுருவும் கிரிமினல்கள் இந்தத் தரவுகளைப் பார்க்கவும் வழிவகுக்கும் என்று அவர் கூறினார்.

இந்த 'விரும்பினால் அடையாள அட்டை' என்ற திட்டம் அமல்படுத்தப்பட்டபோது இதைப் பெறுவதற்கு மக்கள் பணம் தரவேண்டும் என்ற நிலை இருந்தது. எனவே பணம் செலுத்தி அந்த அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ள மிகச் சிலரே முன்வந்தனார்.

பின்னர் 2010ல் வந்த கூட்டணி ஆட்சியில் இந்த “மூக்கை நுழைக்கும் திட்டம்” கைவிடப்பட்டது. இந்த திட்டம் ரத்துசெய்யப்பட்டபோது, கண்ணியமான, சட்டத்தை மதிக்கும் மக்கள் மீது அரசுக்கு இருக்கும் கட்டுப்பாட்டை குறைக்கவும் மக்களுக்கே அதிகாரங்களை திரும்ப வழங்கவும் அரசு எடுக்கும் பல நடவடிக்கைகளில் இதுவும் ஒன்று என்று உள்துறை அமைச்சர் தெரெசா மே கூறினார்.

எனவே பிரிட்டிஷ் வாக்காளர்கள் இன்று வாக்குச்சாவடிக்குச் செல்லும்போது அவர்கள் வாக்குச்சாவடிக்கு சென்று தங்கள் பெயரைச் சொன்னால் போதும், அவர்கள் வார்த்தையில் அதிகாரிகள் நம்பிக்கை வைத்து வாக்களிக்க அனுமதிப்பார்கள்.

நன்றி BBC Tamil
« PREV
NEXT »

No comments