புங்குடுதீவில் உயர்தர வகுப்பு மாணவியான சிவலோகநாதன் வித்தியாவின் படுகொலை குறித்து உரிய விசாரணைகள் நடத்தப்பட்டு குற்றவாளிகள் நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட்டு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று மகளிர் விவகார பிரதியமைச்சரும் ஐ.தே. க.வின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான திருமதி விஜயகலா மகேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.புங்குடுதீவில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து விடுத்துள்ள அறிக்கையிலேயே பிரதியமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் இவ்வாறு கூறியுள்ளார்.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ள தாவது;
கடந்த ஆட்சிக் காலத்தில் யாழ். குடாநாட்டில் பல பாலியல் வல்லுறவுச் சம்பவங்களும் பெண்கள் மீதான வன்முறைகளும் இடம்பெற்றிருந்தன. காரைநகரில் கடந்தசில மாதங்களுக்கு முன்னர் 9 வயது மற்றும் 11 வயது பாடசாலை மாணவிகள் மீது பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இந்தச் சம்பவம் தொடர் பில் விசாரணைகள் நடத்தப்பட்டபோதிலும் குற்றவாளிகள் இன்னமும் தண்டிக்கப்படவில்லை.
இதேபோல் பல்வேறு சம்பவங்கள் குடாநாட்டில் அரங்கேற்றப்பட்டுள்ளன. புதிய அரசாங்கம் பதவியேற்ற பின்னர் இவ்வாறான பெண்கள் மீதான வன்முறைச் சம்பவங்கள் மற்றும் பாலியல் வல்லுறவுச் சம்பவங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தற்போது புங்குடுதீவுப் பகுதியில் பாடசாலை மாணவி பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.
இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படுபாதக செயலை யார் மேற்கொண்டிருந்தாலும் அவர்கள் நீதிமன்றத்துக்கு முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டியது அவசியமாகும். இதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளமை பாராட்டத்தக்கது.
சம்பவத்தில் படுகொலை செய்யப்பட்ட மாணவியின் குடும்பத்தினரது ஆழ்ந்த கவலையில் நானும் பங்கேற்றுக்கொள்கின்றேன். எதிர்காலத்தில் இவ்வாறான துர்ப்பாக்கிய சம்பவங்கள் இடம்பெறாமல் தடுப்பதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டுமென்று பொலிஸ்மா அதிபரை நான் கேட்டுக்கொள்கிறேன். எமது மக்கள் கடந்த 3 தசாப்தகாலமாக யுத்தத்தினால் பெரும் இழப்புக்களை சந்தித்துள்ளனர். இவ்வாறு பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் பெண்கள் மீதான வன்முறைச் சம்பவங்கள், படுகொலைகள் இடம்பெறுவதனை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.
புங்குடுதீவு மாணவி படுகொலை விடயத்தில் நீதி உடனடியாகவே நிலை நாட்டப்பட வேண்டும். குடாநாட்டில் இத்தகைய சம்பவங்கள் எதிர்காலத்தில் இடம் பெறாதிருப்பதை பொலிஸார் உறுதிசெய்ய வேண்டும்
No comments
Post a Comment