மகிந்த ராஜபக்ஷே அரசாங்கத்திற்கும் இந்த அரசாங்கத்திற்கும் தமிழ் மக்களின் விவகாரத்தில் எந்தவிதமான வித்தியாசமும் இல்லை என்ற வகையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுக்கு தடையுத்தரவு வழங்கப்பட்டு உள்ளது.
இந்த தடையுத்தரவு நல்லாட்சி நிலவுகின்றது எனும் மாயையில் இருந்து மக்கள் வெளிவர உதவும் என நம்புகின்றோம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்து உள்ளார்.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுக்கு முல்லைத்தீவு நீதிமன்றம் தடையுத்தரவு வழங்கியமை தொடர்பில் யாழ்.ஊடக அமையத்தில் சனிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
தமிழ் கட்சிகளில் எதிர்கட்சி நாங்கள் மட்டுமே மற்றையவர்கள் எல்லாம் அரசின் பங்காளி கட்சிகள்.
அமைச்சு பதவிகளை எடுக்காமல் சிலர் இருக்கின்றார்கள் ஆனால் அமைச்சு பதவிக்கு மேலான தேசிய நிர்ணய சபையில் இருக்கின்றார்கள்
அரசாங்கத்திற்கு வக்காலத்து வாங்காத வெளியில் இருந்து சுதந்திரமாக செயற்படும் ஒரு அமைப்பு அதுவும் தமிழ் தேசியவாதத்தை மையப்படுத்தி செயற்படும் அமைப்பு நாங்கள் மட்டுமே.
அப்படியான அமைப்பு ஏற்பாடு செய்த அமைதியான நிகழ்வுக்கு தடையை கோரிய பொலிஸ் யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கின்றது இந்த புதிய அரசின் கீழ்
இங்கே ஒரு மாயை உண்டு ஜனவரி 8ம் திகதிக்கு பிறகு நல்லாட்சி நிலவுவதாகவும் ஜனநாயகம் மலர்ந்துள்ளதாகவும் சட்டத்தின் ஆட்சி நிலவுவதாகவும் கூறப்படுகின்றது
அது எல்லாத்திற்கும் தெளிவு கொடுக்கும் வகையிலும் அதற்கு முற்றுபுள்ளி வைக்கும் வகையிலும் இந்த தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
ஆனாலும் இறந்த மக்களுக்கு நினைவு அஞ்சலி செலுத்தும் நினைவேந்தல் நிகழ்வு நீதிமன்ற தடையுத்தரவு காரணமாக முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் நடாத்தாவிடினும் எங்கோ ஒரு இடத்தில் நினைவேந்தல் நிகழ்வை நடாத்தியே தீருவோம் என தெரிவித்தார்.
No comments
Post a Comment