நேபாளத்தில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து எவரெஸ்ட் சிகரம் சுருங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நேபாளத்தில் கடந்த மாதம் 25ம் தேதி கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.9 ஆக பதிவாகியிருந்த நிலநடுக்கத்தால் நேபாளம் நிலைகுலைந்து போயுள்ளது. அங்கு 7 ஆயிரத்து 250 பேர் பலியாகியுள்ளனர்.
இந்நிலையில் நிலநடுக்கத்தால் எவரெஸ்ட் சிகரம் சுருங்கியுள்ளது தெரிய வந்துள்ளது. ஐரோப்பாவைச் சேர்ந்த சென்டினல்- 1ஏ ராடார் செயற்கைக்கோள் கடந்த புதன்கிழமை நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட நேபாள பகுதி வழியாக சென்றுள்ளது. அப்போது எவரெஸ்ட் சிகரத்தின் அளவு 2.8 சென்ட்டிமீட்டர் குறைந்துள்ளதை செயற்கைக்கோள் படம்பிடித்துள்ளது.
இந்த செயற்கைக்கோள் தகவலை விஞ்ஞானிகள் குழு ஆய்வு செய்து தனது அறிக்கையை இன்னும் சில வாரங்களில் அளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே தலைநகர் காத்மாண்டு அருகே 120 கிமீ நீளமும், 50 கிமீ அகலமும் உள்ள இடம் 1 மீட்டர் உயர்ந்துள்ளது. நிலநடுக்கம் காத்மாண்டுவில் இருந்து 83 கிமீ தொலைவில் உள்ள இடத்தில் 15 கிமீ ஆழத்தில் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments
Post a Comment