சென்னை: ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள படம் உத்தமவில்லன் தமிழகத்தில் வெளியாவதில் ஏற்பட்ட சிக்கல் நீடிக்கிறது.
இன்று வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இப்படத்தின் ரசிகர்கள் காட்சி இன்று காலை ரத்தானது. தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தையின் முடிவில் தயாரிப்பாளர் - பைனான்ஷியர்களுக்கு இடையே சுமூகமான முடிவு ஏற்பட்டதை அடுத்து இன்று மாலை 6.30 மணிக்கு படம் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இருப்பினும் இதுவரை எங்குமே படம் திரையிடப்பட்டதாக தகவல் இல்லை.
கமல் நடித்து இயக்குநர் லிங்குசாமி தயாரித்திருக்கும் படம் உத்தமவில்லன். நடிகர் ரமேஷ் அரவிந்த் இயக்கியிருக்கும் இப்படத்தில் கமலுக்கு ஜோடியாக ஆண்ட்ரியா, பூஜா குமார் நடித்துள்ளனர். இவர்கள் தவிர கே. பாலசந்தர், விஸ்வநாத், ஜெயராம், நாசர், ஊர்வசி, எம்.எஸ்.பாஸ்கர், பார்வதி, பார்வதி நாயர், சித்ரா லட்சுமணன் உட்பட பலர் நடித்துள்ளனர்.
இப்படம் தமிழகத்தில் மட்டும் 400 அரங்குகளில் வெளியாகிறது. சினிமா ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கும் பெரிய படங்களில் இதுவும் ஒன்று. இப்படத்தின் விளம்பரங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அமோக டிக்கெட் முன்பதிவும் நடைபெற்றது.
இன்று இப்படம் திரைக்கு வருவதாக இருந்தது. ஆனால், திடீர் நிதி பிரச்சனையால் இப்படத்தின் முதல் காட்சி ரிலீஸ் ஆவதில் தாமதம் ஏற்பட்டது. காட்சிகள் ரத்தானதாக செய்திகளும் வந்தன. ஆனால், தயாரிப்பாளர் மற்றும் பைனான்ஷியர் இடையே தொடர்ந்து நடந்து வந்த பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்தது. அதனைத் தொடர்ந்து மாலை 6.30 மணிக்கு உத்தமவில்லன் தமிழகத்தில் ரிலீசாகும் என தகவல்கள் வெளியாகின. ஆனால் தொடர்ந்து சிக்கல் நீடிப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
No comments
Post a Comment