இலங்கைப் பிரஜைகளாக மாத்திரம் இருப்பவர்களே உள்நாட்டு அரசியலில் ஈடுபட முடியும் என்று மிகவும் நுட்பமாக தீர்மானம் நிறைவேற்றி உள்ளது மைத்திரி - ரணில் அரசாங்கம்.
கடந்த நாட்களில் நாடாளுமன்றத்தில் அறுதிப் பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்ட அரசமைப்பின் 19 ஆவது திருத்தம் மூலம் இது நடத்தப்பட்டு உள்ளது.
வெளிநாட்டுப் பிரஜைகள், இரட்டைப் பிரஜாவுரிமை பெற்றவர்கள் தேர்தல் கேட்கவோ, வாக்களிக்கவோ முடியாது என்கிற அம்சங்களுடன் தொடர்பு பட்ட சரத்துக்களை சட்டம் தெரிந்த நிபுணர்களை அதிகம் கொண்டிருக்கக் கூடிய தமிழ் தேசிய கூட்டமைப்பு பெயரளவில்கூட ஆட்சேபித்து இருக்கவில்லை.
மாறாக கோட்டாபய ராஜபக்ஸ அரசியலில் பிரவேசிக்கின்றமையை தடுக்கவே இந்த ஏற்பாடு என்று மார் தட்டிக் கொள்கின்ற ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஒத்து ஊதுகின்றது.
கடந்த கால யுத்தச் சூழல் காரணமாக சுமார் 1.5 மில்லியன் தமிழர்கள் புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழ்கின்றனர். இவர்களில் அதிகமானோர் இலங்கைப் பிரஜாவுரிமையையை இரத்து செய்து உள்ளனர். கணிசமானோர் இரட்டைப் பிரஜாவுரிமை பெற்று உள்ளனர். பலர் இரட்டைப் பிரஜாவுரிமைக்கு விண்ணப்பித்து வருகின்றனர். வெறுமனே இலங்கைப் பிரஜையாக மாத்திரம் உள்ள புலம்பெயர் தமிழர்கள் விரல் விட்டு எண்ணக் கூடிய அளவினரே ஆவர்.
மொத்தத்தில் புலம்பெயர் தமிழர்களின் அரசியல் உரிமையே ஐக்கிய தேசிய கட்சி - தமிழ் தேசிய கூட்டமைப்பு கூட்டு மூலம் பறிக்கப்பட்டு உள்ளது.
புலம்பெயர் தமிழர்கள் உள்நாட்டு அரசியலில் ஈடுபடுகின்ற பட்சத்தில் தமிழ் தேசிய அரசியலில் மாற்றுத் தலைமை ஏற்பட்டு விடும் என்கிற நியாயமான அச்சம் காரணமாகவே தமிழ் தேசிய கூட்டமைப்பால் இச்சதி அரங்கேற்றப்பட்டு உள்ளது.
ஐக்கிய தேசிய கட்சியை பொறுத்த வரை புலம்பெயர் தமிழர்கள் புலிகள் இயக்கச் செயற்பாட்டாளர்கள். எனவே இதை மூலதனமாக வைத்துத்தான் தமிழ் கூட்டமைப்பின் காட்டிக் கொடுப்பும், துரோகமும் இடம்பெற்று உள்ளன.
No comments
Post a Comment