யாழில் இன்று அதிகாலை கைது செய்யப்பட்ட ஊடகவியலாளர் மற்றும் இரு பல்கலைகழக மாணவர்கள் உட்பட்ட நால்வரையும் எதிர்வரும் 27 ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்.நீதவான் நீதிமன்ற நீதிபதி பொ.சிவகுமார் உத்தரவு இட்டுள்ளார்.
ஹிரு தொலைகாட்சியின் யாழ்.பிராந்திய ஊடகவியலாளரான த. பிரதீபன் இரு பல்கலைகழக மாணவர்கள் உட்பட நால்வர் யாழ்.பல்கலைகழகத்திற்கு அருகில் வாடகை வீடொன்றில் இருந்த வேளை நள்ளிரவு 12.30 மணியளவில் மூன்று வாகனங்களில் சென்ற பொலிசார் வீட்டுக்குள் நுழைந்து ஊடகவியலாளரையும் அவருடன் தங்கி இருந்தவர்களையும் கைது செய்து இருந்தனர்.
கைது செய்யப்பட்ட நால்வரும் 1 லட்சம் ரூபாய் பணத்தினை கொள்ளையிட்டனர் என கோரி யாழ்.நீதிவான் நீதிமன்றில் பொலிசார் முன்னிலை படுத்தினர்.
அதனை அடுத்து நால்வரையும் எதிர்வரும் 27 ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்.நீதவான் நீதிமன்ற நீதிபதி பொ.சிவகுமார் உத்தரவு இட்டார்.
இன்றையதினம் நால்வரையும் நீதிமன்றில் பொலிசார் முற்படுத்திய வேளை முறைப்பாட்டாளர் நீதிமன்றுக்கு சமூகம் அளிக்கவில்லை.
பொலிசாரே முறைப்பாட்டாளரை நீதிமன்றுக்கு சமூகம் அளிக்க வேண்டாம் என கூறி தடுத்ததாகவும், முறைப்பாட்டாளர் நீதிமன்றுக்கு சமூகம் அளித்தால் இன்றையதினம் நால்வரும் பிணையில் வெளி வர கூடிய சந்தர்ப்பம் ஏற்படும் என்பதனாலையே முறைப்பாட்டாளரை பொலிசார் தடுத்து நிறுத்தியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
No comments
Post a Comment