பயங்ரவாத தடைச்சட்டத்தில் கைதுசெய்யப்பட்டு பிரித்தெடுக்கப்பட்டு அண்மையில் பிணையில் விடுவிக்கப்பட்ட ஜெயக்குமாரியும் மகள் விபூசிகாவும் நேற்று இணைந்து கொண்டர்.
கடந்த செவ்வாய்க்கிழமை பிணையில் விடுதலை செய்யப்பட்ட ஜெயக்குமாரி மகாதேவா ஆச்சிரமத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த தனது மகளை நேற்று கிளிநொச்சியில் சந்தித்தார். கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஜெயக்குமாரியும் மகளும் ஒரு வருடத்தின் பின்னர் சுதந்திரமாக சந்தித்துக் கொண்டனர்.
விடுதலைப்புலிகளை மீளக்கட்டியெழுப்புவதற்கு முயற்சித்தார் என்று கூறி கிளிநொச்சியில் உள்ள அவரது வீட்டில் வைத்துக் கைது செய்யப்பட்ட ஜெயக்குமாரி கடந்த 10 ஆம் திகதி பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.
எனினும் அவர் கைது செய்யப்படும் போது பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்கள் விடுதலைத் தினத்தில் அவரிடம் வழங்கப்படவில்லை. அதனால் உடனடியாக கிளிநொச்சிக்கு வருகைதர அவரால் முடியவில்லை. தனது ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு கடந்த வியாழக்கிழமை கொழும்பு நீதவான் நீதிமன்றத்திடம் கோரியிருந்தார்.
அதற்கமைய கடந்த வெள்ளிக்கிழமை அவரது ஆவணங்கள் கையளிக்கப்பட்டிருந்தன.ஆவணங்களைப் பெற்றுக் கொண்ட ஜெயக்குமாரி உடனடியாக கிளிநொச்சிக்கு வருகை தந்து தனது மகளைச் சந்தித்தார்.
அண்மையில் விபூசிகாவின் பூப்புனித நீராட்டு விழாவுக்கு ஜெயக்குமாரியை அனுமதிக்குமாறு கோரிய போதும் பிணை மறுக்கப்பட்டிருந்தது.
அத்துடன் தனது தாயாரை விடுவிக்குமாறு சிறுமி விபூசிகா இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்ததும் குறிப்பிடத்தக்கது. ஒரு வருடத்தின் பின்னர் இணைந்த தாயும் மகளும் சந்தித்து கண்ணீர் விட்டு அழுத காட்சி மனதை உருக்கும் விதமாக இருந்தது.
Social Buttons