முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ மீண்டும் அரசியலுக்கு வரவேண்டும் என்ற அழுத்தத்தை கொடுக்கும் கூட்டம் பாரிய வெற்றியை பெற வேண்டும். அதன் மூலம் ஸ்திரமான ஒரு நாட்டை கட்டியெழுப்ப முடியும் என ஊடகங்களுக்கு முன்னாள் பிரதி அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான பிரபா கணேசன் கருத்து தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
இன்று நாட்டில் நிலையான ஆட்சியை நாம் காணக்கூடியதாக இல்லை. மாறாக அரசியலில் என்ன நடக்கும் என்ற சந்தேகம் மக்களிடையே எழுந்துள்ளது. ஆட்சி மாற்றத்திற்கு வாக்களித்த சிறுபான்மை மக்களிடையேயும் இச் சந்தேகம் நிலவுகின்றது. நல்லாட்சியை இன்று இவர்கள் வழங்குகிறார்களா? 100 நாள் வேலைத்திட்டத்தை முழுமையாக செய்து முடிப்பார்களா என்பது சந்தேகத்திற்குள்ளாகியுள்ளது.
இன்று நான் உட்பட அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், ஆதரவு தெரிவித்த கட்சித் தலைவர்கள் எல்லோருக்கும் இரண்டு வாகனங்கள் வழங்கப்பட்டு அதற்காக ஒரு லட்ச ரூபா எரிபொருள் மானியங்களும் வழங்கப்படுகின்றன. இது தான் மைத்திரி, ரணிலின் நல்லாட்சியா இது போன்ற பல நல்லாட்சி விபரங்களை வெளியிட நான் தயாராக இருக்கின்றேன்.
நாட்டின் ஜனாதிபதி என்பவர் பிறிதொரு நாட்டுக்கு செல்லும் பொழுது பயணிகள் விமானத்தில் பயணிப்பது உள்நாட்டு மக்களை சந்தோசப்படுத்தி விடலாம். மாறாக நாட்டின் இறைமையை காப்பாற்றும் வகையில் எமது பொருளாதார வளர்ச்சிக் கேற்ப தனி விமானத்தில் பயணிப்பதே எமது நாட்டின் கௌரவத்தை காப்பாற்றியிருக்கும். இன்று ஆட்சி மாற்றத்திற்கு பின் எமக்கு முன்னால் உள்ள கேள்வி எமது தமிழ் தேசியமா? அல்லது எமது நாட்டின் இறையாண்மையா என்பதை யோசிக்க வேண்டும். நாட்டை விட்டுக் கொடுத்தால் தமிழ் தேசியத்தை காப்பாற்ற முடியுமா? அமெரிக்கா போன்ற மேற்குலக நாடுகளின் ஆதிக்கம் எமது நாட்டை ஆக்கிரமிக்கும் போது தமிழ், சிங்கள மக்கள் ஒற்றுமையாக பயணிக்க வேண்டிய ஒரு காலக்கட்டத்தை நாம் எதிர்நோக்க வேண்டியுள்ளது.
இந்த தருணத்தில் கடந்த ஆட்சியின் போது மஹிந்த ராஜபக் ஷ செய்த தவறுகளை உணர்ந்திருப்பார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. மீண்டும் அவர் அந்த தவறுகள் நடைபெறாது. தனது சகோதரரின் அரசியல் மூலமாகத்தான் தான் அவர் கறைப்பற்றிருக்கின்றார் என நான் நினைக்கின்றேன். இருப்பினும் முதுகெலும்பில்லாத பிரதமரை விட மஹிந்த ராஜபக் ஷ அரசியலுக்கு வருவாரேயாயின் மஹிந்த சிந்தனையை விட புதிய சிந்தனையை நாம் ஏற்படுத்தி புதிய ஆட்சியை உருவாக்க முடியும் என்று நினைக்கின்றேன்.
மஹிந்தவின் மீள் வருகையின் மூலமாக அவர் ஒரு நாளும் சிறுபான்மை மக்களை புறந்தள்ள முடியாத பாடத்தை படித்திருக்கின்றார் என்பதை இந்த இடத்தில் குறிப்பிட விரும்புகின்றேன்
Social Buttons