மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி, முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா 10 ஆண்டுகள் தேர்தலில் நிற்க தகுதியிழப்பு செய்யப்பட்டுள்ளதாக சட்டப்பேரவைத் தலைவர் பிறப்பித்த உத்தரவு அரசாணையாக, தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
சட்டப்பேரவைத் தலைவர் பி.தனபால், செயலாளர் ஜமாலுதீன் ஆகியோரது உத்தரவு, அரசாணையாக தமிழக அரசிதழில் இன்று (புதன்கிழமை) வெளியிடப்பட்டது.
அதில், 'லஞ்ச ஒழிப்புச் சட்டம் 1988 பிரிவு 13 (2)-ன்படி, ஊழல் வழக்கில் ஜெயலலிதாவுக்கு பெங்களூர் நீதிமன்றம் சிறைத் தண்டனை விதித்துள்ள நிலையில், இந்திய அரசியலமைப்பு சட்டப் பிரிவு 191, மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951 ஆகியவற்றின் அடிப்படையில் அவர் தகுதியிழப்பு செய்யப்படுகிறார்.
அவருக்கு தண்டனை வழங்கப்பட்ட 2014-ம் ஆண்டு செப்டம்பர் 27-ம் தேதி முதல், தமிழக சட்டப்பேரவை உறுப்பினரில் இருந்து தகுதியிழப்பு ஆகிறார். தண்டனைக்காலம் மற்றும் அதற்குப் பிந்தைய 6 ஆண்டுகளும் அவர் தகுதியிழப்பு செய்யப்படுகிறார். இந்த உத்தரவு அவரது விடுதலை தொடர்பான நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு உட்பட்டு மாறுபடும்.
எனவே, தற்போதைய நிலையில் கடந்த செப்டம்பர் 27-ம் தேதி முதல் ஸ்ரீரங்கம் எம்எல்ஏ தொகுதி காலியானதாக அறிவிக்கப்படுகிறது' என்று அதில் கூறப்பட்டுள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்ற ஜெயலலிதா, முதல்வர் பதவியுடன் ஸ்ரீரங்கம் தொகுதி எம்எல்ஏ பதவியையும் இழந்தார். அவரது தகுதியிழப்பு குறித்து முறையான அரசாணை, கடந்த 8-ம் தேதி தமிழக அரசால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஜெயால்லிதா சொத்துக்குவிப்பு வழக்கில், மேல்முறையீட்டு மனுக்களில் விடுதலை அல்லது தண்டனையில் மாற்றம் இல்லாவிட்டால், தற்போதைய உத்தரவுப்படி ஜெயலலிதா 10 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது.
No comments
Post a Comment