Latest News

September 05, 2014

வடக்கு முதல்வரையும் விட்டு வைக்காத இராணுவ புலனாய்வு படை
by admin - 0

இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணத்திற்கு இன்று விஜயம் மேற்கொண்டிருந்த இலங்கைக்கான ஜேர்மன் தூதுவரிடம் வடபகுதியின் இன்றைய மக்களுடைய நிலைமைகள், மாகாண சபையின் நிர்வாகத்தில் எதிர்நோக்கப்பட்டுள்ள விடயங்கள் போன்ற பல விடங்களை எடுத்துரைத்த வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்கள், தான் கலந்து கொள்கின்ற நிகழ்வுகளில் இராணுவத்தைச் சேர்ந்தவர்கள் வந்திருந்து தன்னைப் பல கோணங்களில் புகைப்படங்கள் எடுப்பதாகவும் எடுத்துக் கூறியிருக்கின்றார்.
இதுபற்றி பிபிசி தமிழோசையிடம் கருத்து வெளியிட்ட வடமாகாண முதலமைச்சர் இது ஒரு பாரதூரமான விடயம் என்று கூறினார்.

இஸ்ரேலிய உத்தியாகிய இந்த நவீன முறையின் மூலம், ஒருவரைப் பலகோணங்களில் படங்கள் எடுத்து, அவருடைய போக்கு குறித்த தகவல்களை ஆராய்ந்து, அறிய முடியும் என்ற வகையில் தன்னையும் இவர்கள் இவ்வாறு படங்கள் எடுப்பதாகவே தான் கருதுவதாகவும் முதலமைச்சர் விளக்கிக் கூறினார்.
தனக்கு தீங்கு விளைவிக்கும் நோக்கம் இதில் இருப்பாகத் தெரியவில்லை என குறிப்பிட்ட அவர், யுத்தம் முடிவடைந்து ஐந்து வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் வடபகுதியில் மக்கள் அனைவரையும் இவ்வாறு படங்கள் எடுப்பதன் மூலம், இராணுவம் அவர்களை இயல்பாகவும், சுதந்திரமாகவும் இயங்கவிடாமல் செய்திருக்கின்றது என்றும் குறிப்பிட்டார்.


இதுபற்றி ஜேர்மன் தூதுவரிடம் எடுத்துக் கூறியபோது, அவர் தன்னையும் சிலர் தான் சென்ற இடங்களுக்கெல்லாம் தன்னைப் பின்தொடர்ந்து வந்து படங்கள் எடுத்ததை அவதானித்தாகத் தெரிவித்ததாகவும் முதலமைச்சர் தெரிவித்தார்.


'சட்டப்படி செயற்படுவேன்'

இதேவேளை, இந்தியப் பிரதமர்; நரேந்திர மோடியைச் சந்திப்பதற்கு இந்தியா செல்வதானால், வடமாகாண முதலமைச்சர் அரசாங்கத்திடம் அனுமதி பெற்ற பின்பே செல்லவேண்டும் என்று அரசாங்கத் தரப்பில் கூறப்படுவது பற்றி கேட்டபோது, சட்டத்தில் என்ன நடைமுறைகள் இருக்கின்றனவோ அதனைப் பின்பற்றியே தாங்கள் செயற்பட்டு வருவதாகவும், தொடர்ந்தும் அவ்வாறே செயற்படவுள்ளதாகவும் பதிலளித்தார்.
ஆயினும் முதலமைச்சர் ஒருவர் அவ்வாறு அனுமதி பெற்றுத்தான் செல்ல வேண்டும் என்று சட்டத்தில் இருப்பதாகத் தனக்குத் தெரியவில்லை என்றும் அவ்வாறு இருந்தால் அதற்கமைவாகவே செயற்படுவேன் என்றும் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்.
« PREV
NEXT »

No comments