கடந்த காலங்களிருந்து வடமாகாணம் விரைவாக மீண்டு கொண்டிருந்தாலும் அங்குள்ள மக்களும் அடிப்படை வசதிகள் முழுமைப்படுத்தப்படவில்லை என்று இலங்கைக்கான பிரிட்டன் தூதுவர் ஜோன் ரன்கின் தெரிவித்துள்ளார். வடபகுதிக்கான தனது மூன்றுநாள் பயணத்தை முடித்துக் கொண்ட அவர் தனது பயணம் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது.- வடபகுதியில் முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா போன்ற பகுதிகளில் நான் மக்களைச் சந்தித்திருந்த வேளை தமக்கு வீட்டு வசதியில்லை, குடிதண்ணீர் இல்லை, தொழில்வாய்ப்பில்லை என்று மக்கள் என்னிடம் முறையிட்டனர். இவை குறித்து அரசு அக்கறை கொள்ள வேண்டும்.
வடபகுதிக்கு மீண்டும் விஜயம் மேற்கொண்டு அங்குள்ள நிலைமைகளைப் பார்வையிட்டது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. கடந்த காலங்களிருந்து வடமாகாணம் விரைவாக மீண்டுகொண்டிருக்கின்றது என்பதற்கான தெளிவான சமிஞ்சைகள் அங்கு உள்ளன. அதேவேளை சில விடயங்களில் கரிசனை கொள்ளப்படவேண்டும். அரசாங்கம் இந்தப் பகுதிகளில் எடுத்துள்ள நடவடிக்கைகளை நான் பாராட்டுகிறேன். வடபகுதியில் தனியார் மருத்துவமனையில் முதன் முறையாக இதய சத்திர சிகிச்சை வெற்றிகரமாகத் தொடங்கப்பட்டுள்ளது. இதுபோன்ற விடயங்கள் மகிழ்ச்சியளிக்கின்றன. ஆனாலும் வடபகுதி மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதற்கு தொடர்ந்து நடவடிக்கைகளை எடுக்கவேண்டியுள்ளது. அரசாங்கத்தின் இந்த முயற்சிகளுக்கு பிரிட்டன் தொடர்ந்தும் உதவும்.
முன்னர் எமது திட்டத்தின் கீழ் வடபகுதியில் செயற்படுத்தப்பட்ட பல திட்டங்கள் வெற்றிகரமாகச் செயற்படுகின்றன. முல்லைத்தீவில், புதுகுடியிருப்பு மக்களுடன் நான் கலந்துரையாடினேன். அப்போது தமக்கு வீட்டு வசதியின்மை, தொழில்வாய்ப்பின்மை குறித்து அவர்கள் எனக்கு தெரிவித்துள்ளனர் என்றும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
No comments
Post a Comment