போர்க்குற்ற ஆதாரங்களைத் திரட்டும் நோக்கில் இலங்கை வந்திருந்த அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில், போர்க்குற்ற விவகாரங்களைக் கையாளும் தூதுவர் ஸ்டீபன் .ெஜ .ெரப், யாழ். ஆயர் இல்லத்தில் வைத்து யாழ். ஆயர் வண. தோமஸ் சௌந்தரநாயகம் மற்றும் மன்னார் ஆயர் வண.இராயப்பு ஜோசப் ஆகியோரை சந்தித்திருந்தார்.
இதன்போது போரின் இறுதிக்கட்டத்தில் படையினரின் விமானக்குண்டுகள், கிளஸ்டர் குண்டுகள், இரசாயனக் குண்டுகளால் தான் அதிகளவு பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ஸ்டீபன் ரெப்பிடம் ஆயர்கள் தெரிவித்திருந்தனர்.
அவர்களின் இந்தக் கருத்து பெரும் சர்ச்சைகளை உருவாக்கி விட்டுள்ளது.
ஒரு பக்கத்தில் உடனடியாகவே இலங்கை இராணுவம் இதனை நிராகரித்தது.
தாம் ஒருபோதும் இத்தகைய குண்டுகளை பயன்படுத்தியதும் இல்லை, அவற்றைப் பயன்படுத்துவதற்கான வசதிகளும் தம்மிடம் இல்லை என்று கூறியிருந்தார் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய.
அதேவேளை, போரில் கிளஸ்டர் குண்டுகளை வீசியதாக ஸ்டீபன் ரெப்பிடம் எடுத்துக் கூறிய, - இராணுவத்தின் மீது போர்க்குற்றம் சுமத்திய யாழ், மன்னார் ஆயர்களும் பயங்கரவாதிகளே என்றும் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் பிரதியமைச்சராகவுள்ள முன்னாள் கடற்படை அதிகாரி றியர் அட்மிரல் சரத் வீரசேகர கூறியிருந்தார்.
அதுமட்டுமன்றி தமக்கு மட்டுமே சிங்களத் தேசியவாத இரத்தம் ஓடுவதாக அவ்வப்போது காட்டிக் கொள்ளும், விமல் வீரவன்ஸ போன்ற அமைச்சர்களும், ஜாதிக ஹெல உறுமய, பொதுபல சேனா, இராவண பலய போன்ற அமைப்புக்களும் ஆயர்களுக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்தியுள்ளன.
அதேவேளை, யாழ், மன்னார் ஆயர்கள் கூறிய போர்க்குற்றச்சாட்டை, ஆயர்கள் பேரவை ஏற்றுக் கொள்ளாது என்று கர்தினால் மல்கம் ரஞ்சித் கூறியுள்ளார்.
அதாவது தாமும் தேசியவாத சிந்தனையிலேயே இருப்பதாக கர்தினால் மல்கம் ரஞ்சித் பௌத்த அடிப்படைவாதிகளுக்கு செய்தியை வெளிப்படுத்த முயன்றாலும், யாழ், மன்னார் ஆயர்களை கைது செய்ய வேண்டும் என்று பௌத்த அடிப்படைவாத அமைப்புக்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளன.
ஏற்கனவே, பௌத்த அடிப்படைவாத அமைப்புக்கள் ஏனைய மதங்களுக்கு எதிராக குறிப்பாக கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்ற நிலையில், அத்தகைய முறுகல் அதிகரிப்பதை தவிர்ப்பதற்காக கர்தினால் மல்கம் ரஞ்சித் தமது ஆயர்களை விட்டுக் கொடுத்தாரா? அல்லது தாமும் தீவிர தேசியவாதி என்பதை வெளிப்படுத்துவதற்காக அவ்வாறு கூறினாரா? என்று தெரியவில்லை.
எவ்வாறாயினும், போர்க்குற்றங்கள் என்று வரும் போது, அதை நியாய பூர்வமாகவோ மத ரீதியாகவோ அணுகாமல் இனரீதியாக அணுகி நிராகரிக்கும் போக்கே இங்கு காணப்படுகிறது.
போரின் இறுதிக்கட்டத்தில் போர்க்குற்றங்கள் நிகழ்ந்தன என்ற குற்றச்சாட்டை, தமிழர்களான மதகுருக்களால் மட்டுமே ஏற்க முடிகிறது.
வடக்கு, கிழக்கில் உள்ள கத்தோலிக்க ஆயர்கள் அதை ஏற்றுக் கொண்டாலும் தெற்கிலுள்ள ஆயர்களின் பார்வை வேறு விதமாகவே உள்ளது.
அது நீதி, நியாயம், உண்மை என்பனவற்றைத் தேடுவதைத் தடுக்கின்றதாக குறுகிய, இனரீதியான சிந்தனைப் போக்கை வெளிப்படுத்துவதாகவே காணப்படுகிறது.
யாழ், மன்னார் ஆயர்களின் போர்க்குற்றச்சாட்டுகளை ஆயர்கள் பேரவை ஏற்காது என்ற கர்தினால் மல்கம் ரஞ்சித்தின் கருத்து அரசாங்கத்தையும் படையினரையும் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தை மட்டும் அடிப்படையாக கொண்டுள்ளது.
அது அவரது தனிப்பட்ட கருத்தாக இருந்தாலும் அது அவர் சார்ந்த இனம் மீதுள்ள விசுவாசமாகவே பார்க்கப்படுகிறது.
அதுபோலவே, போர்க்குற்றங்கள் விடயத்தில் முஸ்லிம்கள், முஸ்லிம் நாடுகள் நடுநிலை வகிக்க வேண்டும் என்ற கருத்தை வெளியிட்டுள்ளார் அமைச்சர் ரவூப் ஹக்கீம்.
நீதி அமைச்சரான அவர், ஜெனீவா தீர்மானங்களைத் தோற்கடிப்பதற்கான முயற்சிகளில் கடந்த காலங்களில் தீவிரமாகப் பங்காற்றியவர் என்பது யாவரும் அறிந்த ஒன்றே.
ஒரு பக்கத்தில் போரின் போது முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாக குற்றம்சாட்டிய , அதற்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்று கோரிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரான ரவூப் ஹக்கீம், இப்போது நடுநிலை வகிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இங்கு நடுநிலை என்பது மதில்மேல் பூனையின் நிலையுடன் ஒப்பிடலாம்.
அதாவது போர்க்குற்றச்சாட்டுகள் விவகாரத்தில் தமிழர் தரப்புடனும் இணையாமல் அரச தரப்பினருடனும் இணையாமல் இருப்பதே முஸ்லிம்களுக்கு நல்லது என்று கருதுகிறார் அவர்.
ஏனென்றால், அண்மையில் தம்மைச் சந்தித்த போர்க்குற்ற விவகாரங்களுக்கான அமெரிக்க தூதுவர் ஸ்டீபன் ரெப் தமது நிகழ்ச்சிநிரலுக்குள் தன்னைக் கொண்டு வர முயன்றதாகவும் ஹக்கீம் கூறியுள்ளார்.
அவ்வாறாயின், அமெரிக்கா ஏதோ ஒரு திட்டத்துடன் செயற்பட ஆரம்பித்துள்ளது என்பதை அவர் புரிந்து கொண்டுள்ளார்.
ஆனால், அதற்கு ஒத்துழைத்தால், தமது பதவி பறிபோய் விடும் என்று அஞ்சுகிறாரா? அல்லது முஸ்லிம்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என அஞ்சுகிறாரா? என்று தெரியவில்லை.
எவ்வாறாயினும், போர்க்குற்றச்சாட்டுகள் விடயத்தில், நடுநிலையோடு இருப்பதே நல்லது என்று அவர் கூறியுள்ளார்.
இதன் மூலம் பூனைக்கும் தோழன் பாலுக்கும் காவலாக இருக்க அவர் ஆசைப்படுகிறார்.
ஆனால், போர்க்குற்ற விசாரணை ஒன்று வருமேயானால், இப்போது நடுநிலை வகிக்க வேண்டும் என்று கூறிய ஹக்கீமோ, முஸ்லிம் காங்கிரஸோ அல்லது ஏனைய முஸ்லிம்களோ அதனைத் தமக்கான நீதியைப் பெற்றுக் கொள்ளும் தளமாக பயன்படுத்திக் கொள்ளமாட்டார்கள் என்று எந்த உத்தரவாதமும் இல்லை.
கடந்த காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் அரசாங்கம் பேச்சு நடத்திய போது, அதே அரசாங்கத்தில் அங்கம் வகித்த முஸ்லிம் காங்கிரஸ் தம்மையும் தனித்தரப்பாக பேச்சில் இணைக்க வேண்டும் என்று கோரியது நினைவிருக்கலாம்.
அதுபோன்று, போர்க்குற்ற விசாரணை என்று வரும் போது இப்போதைய மௌனத்தை முஸ்லிம்கள் நிச்சயம் கடைப்பிடிக்கப் போவதில்லை.
அவர்கள் அவ்வாறு ஒதுங்கியிருக்க அரசாங்கமும் விடப் போவதில்லை.
விடுதலைப் புலிகளின் போர்க்குற்றங்கள் என்று முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்களை முன்னிறுத்தி நியாயம் கேட்க முஸ்லிம்கள் முற்படலாம்.
அப்போது இந்த நடுநிலைமை கேள்விக்குள்ளாகி விடும்.
மொத்தத்தில் போரின் இறுதிக்கட்டத்தில் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள் விடயத்தில் நியாயம் தேடுவதற்கு வெளிநாடுகளிடம் இருந்து கிடைக்கின்ற ஒத்துழைப்பு உள்நாட்டில் ஏனைய இனங்களிடம் இருந்து கிடைப்பதில்லை.
ஒரு மக்கள் கூட்டத்துக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக கோரப்படும் நியாயமாகப் பாராது, அதனை அரசியல் உள்நோக்கத்துடன், இனரீதியான சிந்தனையுடன் பார்ப்பதால் தான் இந்தநிலை.
யாழ், மன்னார் ஆயர்கள் அமெரிக்க தூதுவரிடம் போர்க்குற்றச்சாட்டுகளை சுமத்தியதால் தான், இந்த வேறுபட்ட மனோநிலையையும், கருத்து முரண்பாடுகளையும் உணர முடிந்துள்ளது.
போருக்குப் பிந்திய நல்லிணக்கத்துக்கு பொறுப்புக்கூறல் முக்கியமானது என்று வலியுறுத்தப்படுகின்ற போதிலும், அதனை ஏற்கின்ற பக்குவம் தமிழரல்லாதோரிடம் இன்னமும் உருவாகவில்லை.
இந்தக் குறுகிய நோக்கத்துக்கு அடிப்படையாக இருப்பது அரசாங்கத்தைப் பகைக்கக் கூடாது என்ற எண்ணமா? படையினரைக் காப்பாற்றும் நோக்கமா? அல்லது இன்னமும் மறைந்து போகாத இனரீதியான சிந்தனையா?
இவற்றுள் எது காரணமாக இருந்தாலும், அது போருக்குப் பிந்திய இன நல்லிணக்கத்துக்குச் சவாலான விடயமாகவே இருக்கும்.
ஏனென்றால், காயங்களுக்கு மருந்திடாமல் வடுக்களை ஆற்றாமல் வலிகளைப் போக்கவோ, அதனை மறக்கவோ முடியாது.
(- ஹரிகரன்)
No comments
Post a Comment