இன்னும் சுமார் நான்கு மாதங்களில் ஆரம்பமாகப் போகும், ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின், 25 ஆவது அமர்வை எதிர்கொள்வதற்கான தயார்படுத்தல்களில் அரசாங்கம் இப்போதே இறங்கிவிட்டது.
அண்மையில், கொமன்வெல்த் மாநாட்டுக்காக வந்திருந்த, பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன், வரும் மார்ச் மாதத்துக்குள் இலங்கை அரசாங்கம் உள்ளக விசாரணைகளை நடத்தத் தவறினால், சர்வதேச விசாரணைக்கு அழுத்தம் கொடுப்போம் என்று எச்சரித்து விட்டுச் சென்றிருந்தார்.
ஆனால், எத்தகைய வெளியக அழுத்தங்களுக்கும் அரசாங்கம் அடிபணியப் போவதில்லை என்று அதற்குப் பின்னர், ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ திட்டவட்டமாக கூறியிருந்தார். கடந்தவாரம் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் இதனை நினைவுபடுத்தி, எத்தகைய காலக்கெடுக்களுக்கோ, அச்சுறுத்தல்களுக்கோ அரசாங்கம் அடிபணியாது என்று தெளிவாக அறிவித்துள்ளார்.
எனினும், வரும் ஜெனீவா கூட்டத்தொடருக்கு முன்னதாக, சில நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்கத் தொடங்கியுள்ளது.
கடந்த 29 ஆம் திகதி லண்டனில் உள்ள புரொன்ட்லைன் கிளப்பில் நடந்த பிரான்செஸ் ஹரிசனின், முடிவுறா போர் என்ற ஆவணப்படம் தொடர்பான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்ட சனல் - 4 ஆவணப்படத் தயாரிப்பாளர், கெலும் மெக்ரே, இலங்கை அரசாங்கம், வரும் மார்ச் மாதத்துக்கு முன்னர் பல ஆணைக்குழுக்களை நியமிக்கும் என்று தாம் எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டிருந்தார்.
அதாவது, அவர் குறிப்பிட்டதன் அர்த்தம், ஜெனீவா கூட்டத்தொடரை எதிர்கொள்வதற்கு – சர்வதேச சமூகத்தை ஏமாற்றுவதற்காக இலங்கை பல தயார்படுத்தல்களை மேற்கொள்ளலாம் என்பதேயாகும். ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் வருகைக்கு முன்னதாக, காணாமற்போனோர் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட ஆணைக்குழு இப்போது தகவல்கள் திரட்டி வருகிறது.
அதேவேளை, சனத்தொகை புள்ளிவிபரவியல் திணைக்களம், போரினால் ஏற்பட்ட இழப்புக்களை பதிவு செய்யும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.
இவையெல்லாம் ஜெனீவா கூட்டத்தொடரை எதிர்கொள்வதற்கான சில தயார்படுத்தல்கள் தான்.
இதுமட்டுமல்ல, கடந்தவாரம் திடீரென பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்கி வந்த, தேசிய பாதுகாப்பு ஊடக நிலையம் கலைக்கப்பட்டது.
போர்க்காலத்தில், போர் பற்றிய தகவல்களை வெளியிடவும், ஊடகங்களைக் கட்டுப்படுத்தவும், தேசிய பாதுகாப்பு ஊடக நிலையம் அமைக்கப்பட்டது.
ஒருவகையில் இது ஊடகங்கள் மீது அழுத்தங்களை பிரயோகிப்பதற்கான ஒரு கருவியாகவே பயன்படுத்தப்பட்டு வந்தது.
அண்மையில், மாவீரர் தினத்திற்கு முன்னர் கூட, புலிகளைப் புகழும், அவர்களை மரியாதைக்குரியவர்களாகப் போற்றும் ஊடகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஊடக மத்திய நிலையப் பணிப்பாளர் லக்ஸ்மன் ஹுலுகல்ல எச்சரித்திருந்தார்.
ஆனால் சில நாட்களிலேயே தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையம் கலைக்கப்பட்டு, அவரது பதவியும் பறிபோனது.
போருக்காக உருவாக்கப்பட்ட இந்த நிலையம், போர் முடிந்து நான்கரை ஆண்டுகளாகியும் ஏன் செயற்படுகிறது, எதற்காக ஊடகங்களை மிரட்டுகிறது என்ற குற்றச்சாட்டுகளின் விளைவாகவே அது கலைக்கப்பட்டுள்ளது. இதுவும் கூட ஜெனீவாவுக்கான ஒரு தயார்படுத்தல் தான்.
ஆனால், அரசாங்கம் எத்தனை ஆணைக்குழுக்களை அமைத்தாலும், அடுத்த ஜெனீவா கூட்டத்தொடரில் இருந்து தப்பிப்பதற்கு அரசாங்கத்துக்கு உள்ள ஒரே வழி, போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரிக்க நம்பகமான - நடுநிலையான ஒரு விசாரணையை நடத்துவது தான்.
ஏற்கனவே, இலங்கை அரசாங்கம் நியமித்த விசாரணை ஆணைக்குழுக்கள் எல்லாமே, இராணுவத்துடன் தொடர்புடையவை என்றும், அவை நடுநிலையானவையல்ல என்றும் பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன் தெரிவித்திருந்தார்.
அதுமட்டுமன்றி, மூதூரில் படுகொலை செய்யப்பட்ட தமது 17 பணியாளர்கள் தொடர்பாக, கடந்தவாரம், அக்சன் பெய்ம் நிறுவனம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், இலங்கை இராணுவமே அதை செய்ததாக குற்றஞ்சாட்டியிருந்தது.
இலங்கை அரசாங்கம் நியாயமான உள்ளக விசாரணையை நடத்தும் என்று தாம் நம்பவில்லை என்றும், சர்வதேச விசாரணை நடத்தப்பட்டால், கொலைகள் தொடர்பான சாட்சியங்களை சமர்ப்பிக்கத் தயார் என்றும் கூறியுள்ளது.
இதுவரை இலங்கை அரசாங்கம் நடத்திய உள்ளக விசாரணைகள் முழுமையாகவோ, நம்பகமானதாகவோ அமையாத நிலையில் தான், இதைவிட சுதந்திரமான ஆணைக்குழுவொன்றை அமைக்க அரசாங்கம் முன்வராது என்ற கருத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுதான் இன்று முக்கியமான பிரச்சினையாக உள்ளது.
போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாக, நம்பகமான, சுதந்திரமான விசாரணை ஒன்று நடத்தப்படாமல், சர்வதேச சமூகம் ஓயப் போவதில்லை. அவர்களால் இனி ஓயவும் முடியாது.
ஏனென்றால், இதற்கு முன்னர், பொதுவாக நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும், பொறுப்புக்கூற வேண்டும் என்று தான் சர்வதேச சமூகம் கூறி வந்தது.
ஆனால் இப்போது, நிலைமை அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்து விட்டது.
நேரடியாகவே போர்க்குற்றச்சாட்டுகளுக்கு, பதிலளிக்க வேண்டும் என்றும் சுதந்திரமான விசாரணை நடத்த வேண்டும் என்றும், அமெரிக்கா, கனடா, பிரித்தானியா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்த ஆரம்பித்து விட்டன.
சில காலமாக அமைதியாக இருந்து வந்த அமெரிக்காவும் இப்போது கடுமையாக எச்சரிக்கும் தொனியில் கருத்து வெளியிடத் தொடங்கியுள்ளது.
கடந்தவாரம், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின், தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலர் நிஷா தேசாய் பிஸ்வால், வொஷிங்டனில் கருத்து வெளியிட்ட போது, இலங்கை அரசாங்கம் உள்ளக விசாரணையை நடத்தாது போனால் சர்வதேச சமூகம் பொறுமையிழந்து விடும் என்று எச்சரித்துள்ளார்.
றொபேட் பிளேக்கிற்குப் பதிலாக அண்மையில் இந்தப் பதவியை ஏற்ற நிஷா தேசாய் பிஸ்வால், வெள்ளை மாளிகைக்கு மிகவும் நெருக்கமானவர்.
இந்தக் காலகட்டத்தில் அவரது இந்தக் கருத்து, முக்கியத்துவம் பெற்றுள்ளது.
பெரும்பாலும், அடுத்த ஜெனீவா கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்படும் தீர்மானத்தை அமெரிக்கா, முன்வைக்காது என்றே கருதப்படுகிறது.
ஏற்கனவே இரண்டு தீர்மானங்களை அமெரிக்கா முன்வைத்தும் உரிய பலன் கிட்டாத நிலையில், இப்போது பிரித்தானியாவை அது உசார்படுத்தி விட்டுள்ளதாகத் தெரிகிறது. அடுத்த ஜெனீவா களத்தை பிரித்தானியாவே திறந்து விடும் வாய்ப்புகள் உள்ளன.
ஏனென்றால், தற்போது, பிரித்தானியா போர்க்குற்றங்கள் குறித்த சர்வதேச விசாரணையை வலியுறுத்த ஆரம்பித்துள்ளது.
கடந்தவாரம் கூட பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் வில்லியம் ஹேக், நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போது இலங்கை அரசாங்கத்துக்கு சர்வதேச விசாரணை பற்றிய எச்சரிக்கையை விடுத்திருந்தார்.
இந்தநிலையில், ஜெனீவாவில் சர்வதேச விசாரணை என்பதை மையப்படுத்தியதாகவே அடுத்தகட்ட நகர்வு அமையப்போவது பெரும்பாலும் உறுதியாகியுள்ளது. இந்தநிலையில், இலங்கை அரசாங்கத்துக்கு அமெரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகள் சுதந்திரமான உள்ளக விசாரணைக்கு கொடுத்த காலக்கெடு இன்னமும் கூட முடிவுறவில்லை.
அதற்குள் எதையாவது செய்வதற்கு அரசாங்கம் முயற்சிக்கலாம்.குறிப்பாக தென்னாபிரிக்காவின் துணையுடன் உண்மை நல்லிணக்க ஆணைக்குழுவை நியமிக்கும் யோசனை ஒன்றை அரசாங்கம் கைவசம் கொண்டுள்ளதாக தெரிகிறது.
என்றாலும், இதுதொடர்பாக, பேச்சு நடத்த இலங்கை வரவிருந்த தென்னாபிரிக்காவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் இப்ராகிம் இப்ராகிம், தனது பயணத்தை பிற்போட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நெல்சன் மண்டேலாவின் மரணத் துக்கு முன்னரே அந்தப் பயணம் பிற்போடப்பட்டது. எவ்வாறாயினும், ஜெனீவாவில் காத்திருக்கும் ஒரு புதை குழியைப் பற்றி அரசாங்கத்தினால் அலட்சியமாக இருந்து விடமுடியாது.
ஏனென்றால், சீனா, ரஷ்யா, கியூபா, சவூதி அரேபியா, வியட்நாம் போன்ற நட்பு நாடுகள், ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் அங்கத்துவத்தை பெற்றுக் கொண்டாலும். ஜெனீவா இன்னமும் இலங்கை அரசாங்கத்துக்கு பாதகமான ஒரு களமாகவே இருந்து வருகிறது,
இந்தப் பாதகமான களத்தை சாத கமாக்கிக் கொள்ள இலங்கை எல்லா முயற்சிகளையும் எடுக்கவே முனையும். ஆனால் அவை அமெரி க்கா, பிரித்தானியா. கனடா போன்ற நாடுகளை திருப்திப்படுத்தும் அள வுக்கு வலியதாக இருக்குமா என்பதே முக்கியமானது.
No comments
Post a Comment