யாழ். போதனா வைத்தியசாலைக்கு சொந்தமான கட்டிடப் பொருட்களை படைமுகாம்களை அமைப்பதற்கு நிர்வாகம் வழங்கியமை கடும் வாதப்பிரதிவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. பாரிய இட நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள நிலையினில் யாழ்.போதனாவைத்தியசாலை புதிய கட்டி நிர்மாண வேலைகள் புலம்பெயர் உறவுகளது பங்களிப்பினிலேயே முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அவ்வகையினில் திருத்த வேலையின் பின்னர் கழற்றி வைக்கப்பட்டிருந்த பழைய ஓடுகளை இராணுவத்தினர் நேற்று முன்தினம் முற்பகல் எடுத்துச் சென்றிருந்தமை கண்டனத்திற்குள்ளாகியுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கப்படுகையில் வைத்தியசாலை வெளி நோயாளர் பிரிவு கட்டடத்தின் ஓடுகள் அண்மையில் இறக்கப்பட்டு அவற்றுக்குப் பதிலாக “சீற்’றுகள் பொருத்தப்பட்டிருந்தது. அவ்வாறு கீழே இறக்கப்பட்டு வைத்தியசாலையின் பிரதான வாயிலின் உள்ளே அடுக்கி வைக்கப்பட்டிருந்த ஓடுகளை இராணுவத்தினர் தமது வாகனத்தில் ஏற்றிச் சென்றனர். அரசு விதிமுறைகளின்படி வைத்தியசாலைகளில் இருந்து இலவசமாக ஓடுகளை இராணுவத்துக்கு வழங்க முடியுமெனவும் ஒரு அரச திணைக்களத்தில் இருந்து அதே அரசின் மற்றொரு பிரிவுக்கு அவ்வாறு இலவசமாக வழங்க முடியுமெனவும் அவற்றைத் தருமாறு வேறு எந்தத் திணைக்களத்தினரும் எம்மிடம் கோரியிருக்கவில்லை. இராணுவத்தினர் அவற்றைத் தருமாறு கோரியிருந்தனர். அதன் அடிப்படையில் அவர்களுக்கு அது வழங்கப்பட்டது என்றும் வைத்தியசாலை நிர்வாகம் தரப்பினில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் திட்டமிட்டே பலாலியிலிருந்து விடுக்கப்பட்ட அறிவுறுத்தலையடுத்து புதிய முகாம் அமைப்பதற்கு ஓடுகள் வழங்கப்பட்டுள்ளமை அம்பலத்திற்கு வந்துள்ளது.
No comments
Post a Comment