Latest News

November 19, 2013

மனிதஉரிமை விவகாரம்: சிறிலங்காவுக்கு சீனா கொடுத்துள்ள அதிர்ச்சி வைத்தியம்
by admin - 0

மனிதஉரிமைகளை பாதுகாக்கவும், ஊக்குவிக்கவும் முயற்சிகளை எடுக்க வேண்டும் என்று சிறிலங்காவிடம் சீனா கோரிக்கை விடுத்துள்ளது.
பீஜிங்கில் இன்று செய்தியாளர் சந்திப்பில் பேசிய சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் கயின் கங் இந்தக் கருத்தை வெளியிட்டு சிறிலங்காவுக்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளார்.
“வெவ்வேறு நாடுகளில், வெவ்வேறு பொருளாதார, சமூக வேறுபாடுகளால், மனிதஉரிமைகள் பாதுகாப்பிலும் வேறுபாடுகள் இருக்கக் கூடும்.
எனவே குறிப்பிட்ட நாடு, மனிதஉரிமைகளைப் பாதுகாக்கவும், ஊக்குவிக்கவும் முக்கியமாக முயற்சிகளை எடுக்க வேண்டும்.
அதேவேளை, உலகின் ஏனைய நாடுகள், ஆக்கபூர்வமான உதவிகளை வழங்க வேண்டும்.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வரும் மார்ச் மாதத்துக்குள் சிறிலங்கா அரசாங்கம் மனிதஉரிமை விவகாரங்களுக்கு பதிலளிக்கத் தவறினால், வரும் மார்ச் மாதம் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில், அனைத்துலக விசாரணைக்கு அழுத்தம் கொடுக்கப்படும் என்று பிரித்தானியப் பிரதமர் விடுத்துள்ள எச்சரிக்கை தொடர்பாக, சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளரிடம் கேள்வி எழுப்பிய போது,
“இது கொமன்வெல்த்துக்குள் உள்ள விவகாரம்.
அதேவேளை, இது மனிதஉரிமைகள் பற்றிய விவகாரம் என்று நான் நம்புகிறேன்.
நாடுகளுக்கிடையில பேச்சுக்களும் தொடர்பாடலும் இருக்க வேண்டும்.
மனிதஉரிமை விவகாரங்களில் அனைத்து நாடுகளுடனும் பேச்சு மற்றும் தொடர்பாடல் மூலம் பரஸ்பர புரிந்துணர்வை ஏற்படுத்தும் கொள்கையை நாம் எப்போதும் பேணி வருகிறோம்.
அனைத்துலக மனிதஉரிமைகளை ஊக்குவிக்க ஆக்கபூர்வமாக செயற்படுகிறோம்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவுடன் நெருக்கமான உறவைக் கொண்டுள்ள சீனா முதல்முறையாக சிறிலங்காவின் மனிதஉரிமை விவகாரங்கள் குறித்து, ஆச்சரியமளிக்கும் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளது.
ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில், சிறிலங்காவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானங்களை தோற்கடிப்பதற்கு சீனா தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
« PREV
NEXT »

No comments