Latest News

November 13, 2013

கலம் மெக்ரே சென்ற ரயிலை மறித்துப் போராட்டம்
by admin - 0

யாழ்ப்பாணத்திற்கு ரயில் மூலமாகப் பயணம் செய்த கலம் மக்ரே உள்ளிட்ட சனல்
4 ஊடகவியலாளர்களுக்கு எதிராக அநுராதபுரத்தில் ரயிலை மறித்து நடத்தப்பட்ட ஓர் ஆர்ப்பாட்டம் காரணமாக அவர்கள் யாழ் பயணத்தைக் கைவிட்டு கொழும்பு திரும்பியிருப்பதாக பொலிசார்
தெரிவித்திருக்கின்றனர். புதன்கிழமை காலை 6.50 மணிக்கு கொழும்பு கோட்டையில் இருந்து கிளிநொச்சி நோக்கிப் புறப்பட்ட ரயிலில் சனல் 4 ஊடகவியலாளர்கள் குழுவினர் யாழ்ப்பாணம் செல்வதற்கான
தமது பயணத்தை ஆரம்பித்திருந்தனர். இவர்கள் யாழ்ப்பாணம் செல்வதற்காக
ரயிலில் வருவதை அறிந்த குழு ஒன்று அநுராதபுரத்தில் வந்து நின்ற
ரயிலை மறித்து, பாதையில் கூடிநின்று கலம் மக்ரேயை திரும்பிச் செல்லுமாறு கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர். சுமார் இரண்டு மணித்தியாலங்கள் நீடித்த இந்த ஆர்ப்பாட்டத்தையடுத்து,
பாதுகாப்பு உயரதிகாரிகளின் முடிவுக்கமைய, கலம் மக்ரே குழவினர்
யாழ்ப்பாணத்திற்கு மேற்கொள்ளும் பயணத்தில் ஆபத்து இருப்பதாகக் கூறி,
பொலிஸ் பாதுகாப்புடன் வாகனங்களில்
அவரை கொழும்புக்கு அனுப்பி வைத்தனர். கொழும்பில் நடைபெறுகின்ற பொதுநலவாய மாநாட்டில்
கலந்து கொள்வதற்காக கலம் மக்ரேவுக்கு தாமதத்திற்குப் பின்பே இலங்கை வருவதற்கான அனுமதி வழங்கப்பட்டிருந்தது. அவர் இலங்கையை வந்தடைந்தபோது, கட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்திறங்கியதுமே, அவருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
« PREV
NEXT »

No comments