மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனைத்துறையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் மண்முனைத்துறைப்பாலத்தின் புதிய வீதியானது அங்கு பரம்பரை பரம்பரையாக நெற்பயிர் செய்யப்படும் வயல்களின் நில மட்டத்தை விட 3 அடி உயரமாக நிர்மாணி க்கப்படுவதால் விவசாயிகள் எதிர்காலத்தில் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்படுமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஆராய்வதற்காக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறுாக் தலைமையில் கடந்த வியாழக்கிழமை பொறியியலாளர்கள் அந்த இடத்திற்கு சென்று அந்த வீதியின் நிர்மாண வேலைகளை பார்வையிட்டனர்.
மழை காலங்களில் நீர் இயற்கையாகவே வாவிக்குள் வடிந்தோடும் அப்பாதை முற்றாக தடைப்படுவதனால் நீர் தேங்கி நிற்கும் நிலை ஏற்படும். இதனால் ஆண்டாண்டு காலமாக காலபோகத்தில் நெற்பயிர்ச்செய்கை செய்யப்படுகின்ற அந்தக்காணிகள் இவ்வாறு புதிதாக அமைக்கப்படும் வீதியின் காரணமாக அக்காணிகளில் எதிர்காலத்தில் பயிர் செய்யமுடியாத நிலை ஏற்படும் என இதன் போது சுட்டிக்காட்டப்பட்டது.
இது சம்பந்தமாக ஆராய்ந்து உடனடியாக இதற்குதீர்வு காணும் விதமாக உரிய நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் நீர் தேங்கி நிற்கும் இப்பிரச்சினைக்கு முடிவு காணப்பட்டது.
இதற்கான திட்ட வரைபுகளை உடனடியாக தயாரித்து அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பிரதம பொறியியலாளரும் ஜப்பானிய நிறுவன வதிவிட பொறியியலாளரும் உறுதியளித்ததாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறுாக் தெரிவித்தார்.
வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பிரதம பொறியியலாளர் எம்.நிசார்தீன், விசேட திட்ட முகாமைப்பிரிவின் பொறியியலாளர்கள் ஏ.ஹகீம், கே.றன்ஜித்குமார் ஜப்பானிய நிறுவன வதிவிட பொறியியலாளர் யசோரோ நறுகாவான், ஜப்பானிய ஒப்பந்தக்காரரின் பொறியியலாளர் கே.ஒமோரி ஆகியோர் இங்கு சமுகமளித்திருந்தனர்.
இது தொடர்பாக அப்பகுதி விவசாயிகளும் பொதுமக்களும் என்னிடம் சுட்டிக்காட்டியதையடுத்து மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் கடந்த கூட்டத்தில் கூறப்பட்டதற்கிணங்க இதை பார்வையிட்டு இதற்கான தீர்வு பெறப்பட்டதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக் மேலும் தெரிவித்தார்.
புதிதாக அமைக்கப்பட்டு வரும் மண் முனைத்துறைப்பாலத்தின் நிர்மாண வேலை கள் முடிவடையும் நிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments
Post a Comment