சிரியாவின் அதிபர், பஷர்-அல்-ஆசாத் பதவி விலகக் கோரி, கிளர்ச்சியாளர்கள், கடந்த இரண்டு ஆண்டுகளாக, ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின் றனர். இதனால் ராணுவத்தினருக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே, கடும் சண்டை நடந்து வருகிறது.கடந்த மாதம், 21ம் தேதி, ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதால், 1,300 பேர் பலியானதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக, ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதா என்பது குறித்து, ஐ.நா., நிபுணர் குழு, சம்பவ இடங்களில் ஆய்வு நடத்தியது. அத்துடன், சில மாதிரிகளையும் எடுத்துச் சென்று, அவற்றை பகுப்பாய்விற்காக அனுப்பியுள்ளனர்.ரசாயன ஆயுதங்களை பயன்படுத்திய சிரியா மீது, ராணுவ தாக்குதலை நடத்த, அமெரிக்க அதிபர் ஒபாமா திட்டமிட்டு உள்ளார். இதற்காக, அமெரிக்க பார்லிமென்ட்டின் ஒப்புதலை கோரியுள்ளார். அமெரிக்கா தாக்குதல் நடத்துவதற்கு, இஸ்ரேல், பிரான்ஸ், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
சிரியாவுக்கு ஆதரவாக செயல்பட, ரஷ்யா திட்டமிட்டு உள்ளது. இதற்காக, உளவு கப்பல் ஒன்றை, மத்திய தரைகடல் பகுதிக்கு, ரஷ்யா அனுப்பி வைத்துள்ளது. ஜெர்மனும், பிரிட்டனும், இந்த தாக்குதலில் ஈடுபடப் போவதில்லை என, தெரிவித்துவிட்டன."சிரியா மீது தாக்குதல் நடத்த வேண்டாம்' என, அரபு நாடுகளும், சீனாவும் கேட்டு கொண்டுள்ளன. சண்டைக்கு முன்னோட்டமாக, அமெரிக்கா, போர் கப்பலை, மத்திய தரைகடல் பகுதிக்கு அனுப்பி வைத்துள்ளது. மத்திய தரைகடல் பகுதியில், இஸ்ரேல் நேற்று, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை நடத்தியது. இதை, ரேடார் மூலம் உணர்ந்த ரஷ்யா, சிரியா மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக, சில, "டிவி'க்களில் அறிவித்தது.
ஆனால், இதை மறுத்த இஸ்ரேல் ராணுவ அமைச்சகம், அமெரிக்காவுடன் இணைந்து, மத்திய தரைக்கடல் பகுதியில், ஏவுகணை சோதனை நடத்தியதாக, விளக்கம் அளித்தது.இஸ்ரேல் நடத்திய இந்த ஏவுகணை சோதனையால், சிரியாவில் போர் மூண்டு விட்டதாக, புரளி பரவியது. இதனால், ஆயிரக்கணக்கான மக்கள், தங்கள் இருப்பிடங்களை விட்டு, பாதுகாப்பான இடங்களுக்கு சென்றனர்
No comments
Post a Comment