இலங்கையின் பிரதம நீதியரசர் சட்டத்திற்கு முரணான வகையில் அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில், பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்ளும் உச்சி மாநாடு எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கையில் நடத்தப்படுவதற்கான தகுதி குறித்து கானா சட்டத்தரணிகள் சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.
இலங்கையில் சட்டம் மற்றும் நீதித்துறையின் சுதந்திரம் என்பன முற்றாக அலட்சியம் செய்யப்பட்டுள்ளதாக கானா சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் நேனே அபாயாத்தே அமேகச்சர் குற்றம் சுமத்தினார்.
சங்கத்தின் 2013 - 2014 ஆம் ஆண்டுகளுக்கான மாநாட்டில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
பொதுநலவாய நாடுகள் அமைப்பு அதன் நம்பகத்தன்யையும் மதிப்பையும் பாதுகாக்க வேண்டும் என்றால் இலங்கை உட்பட அடக்குமுறைகளை மேற்கொள்ளும் நாடுகளுக்கு எதிராக உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
இலங்கையின் முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க சட்டவிரோதமாக நியாயமற்ற விசாரணைகள் மூலம் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
அவரது பதவி நீக்கமானது இலங்கையின் நீதித்துறை சுதந்திரத்தின் மீதான நேரடியான தாக்குதலாகும். இலங்கையின் சட்டத்துறையின் பொறுப்புகள் மற்றும் திறனை குறைமதிப்புக்கு உட்படுத்தி இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பொதுநலவாய நாடுகளின் உச்சி மாநாட்டை இலங்கையில் நடத்துவது தொடர்பில் அந்த அமைப்பு மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என்றார்.
No comments
Post a Comment