தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை விடவும், வட மாகாண முதலமைச்சராக தெரிவு செய்யப்பட்டுள்ள விக்னேஸ்வரன் ஆபத்தானவர் என ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பொதுச் செயலாளர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
பிரபாகரன் யுத்த களத்தில் எல்லோருக்கும் தெரியும் வகையில் போராடினார். எனினும், விக்னேஸ்வரன் அதே நோக்கங்களுக்காக மறைமுக அடிப்படையில் இராஜதந்திர ரீதியில் போராடுவார்.
தெரியும் எதிரியுடன் போராடுவது இலகுவானது. எனினும் தெரியாத மறைமுக எதிரியுடன் போராடுவது மிகவும் ஆபத்தானது. எனினும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு தேவையான வகையில் நாட்டை ஆட்டுவிக்க அனுமதியளிக்க முடியாது.
வாடக்கில் நாசிவாத, கடும்போக்குடைய கட்சியொன்று தேர்தல் வெற்றியீட்டியுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு அஞ்சப் போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்லவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பிரபாகரன் துப்பாக்கியால் பெற முடியாததை விக்னேஸ்வரன் சட்டத்தின் மூலம் பெற முயற்சிக்கின்றார்: உதய கம்மன்பில
மாகாண சபைகளுக்கு அதிகளவான அதிகாரங்களை கொடுத்து விட்டு அதனை திரும்ப பெற முயற்சித்தால் இலங்கையின் நட்பு நாடுகள் கூட இலங்கைக்கு எதிராக மாறக் கூடும் என மேல் மாகாண அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
பத்தரமுல்லையில் உள்ள ஜாதிக ஹெல உறுமயவின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் துப்பாக்கியால் செய்ய முடியாததை விக்னேஸ்வரன் சட்டத்தின் மூலம் செய்ய முயற்சித்து வருகிறார்.
இராஜதந்திர ரீதியில் ஈழத்தை வழங்கிய நாடாக இலங்கை மாறிவிடக் கூடாது. காணி அதிகாரங்கள் மத்திய அரசாங்கத்திற்கே உரியது என உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
இந்த தீர்ப்பு தற்காலிகமானது எனவே அரசியல் அமைப்பின் உள்ள காணி தொடர்பான மாகாணங்களுக்கு உள்ள அதிகாரங்கள் இரத்துச் செய்யப்பட வேண்டும் என்றார்.
No comments
Post a Comment