அரசியலமைப்பின் பிரகாரம் அடுத்த ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் 2015 ஆம் ஆண்டிலேயே நடைபெறும் சாத்தியம் உள்ளது. 2014 ஆம் ஆண்டில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறுவதற்கான சாத்தியம் இல்லை என்று அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
ஊடகத்துறை அமைச்சில் நேற்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அடுத்த வருடம் ஆட்சியை கைப்பற்றவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார். அப்படியானால் அடுத்த வருடம் பாராளுமன்றத் தேர்தல் அல்லது ஜனாதிபதித் தேர்தல் நடைபெறுமா? என்று கேள்வியெழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த அமைச்சர் அங்கு மேலும் கூறியதாவது,
கடந்த பல வருடங்களாக ரணில் விக்கிரமசிங்க இந்த விடயத்தை கூறிவருகின்றார். ஐக்கிய தேசிய கட்சியின் 55 ஆவது ஆண்டு விழாவிலும் இதனை குறிப்பிட்டிருந்தார். ஆனால் ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் ஜனாதிபதி பதவிப் பிரமாணம் ஏற்று நான்கு வருடங்களின் பின்னர் அடுத்த இரண்டு வருட காலப்பகுதியில் எப்போது வேண்டுமானாலும் ஜனாதிபதி தேர்தலை நடத்தும் முடிவை ஜனாதிபதி எடுக்கலாம்.
அவ்வாறு இந்த இரண்டு வருடங்களில் அவர் தேர்தலை நடத்தாவிட்டால் ஆறு வருடங்களின் முடிவில் அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதித் தேர்தலை நடத்தவேண்டும். அந்த வகையில் பார்க்கும்போது ஜனாதிபதி பதவிப் பிரமாணம் செய்து 2014 ஆம் ஆண்டு நவம்பர் மாதமே நான்கு வருடங்கள் பூர்த்தியாகின்றன. எனவே 2015 ஆம் ஆண்டில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறுவதற்கான சாத்தியங்கள் உள்ளன. அந்த வகையில் 2014 ஆம் ஆண்டில் நாட்டில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறுவதற்கான சாத்தியம் இல்லை.
No comments
Post a Comment