தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளர் முன்னாள் நீதியரசர் விக்னேஸ்வரனுக்கான விருப்பு வாக்கு, எங்கள் ஒவ்வொருவரினதும் வரலாற்றுக் கடமை என பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.
அவர் தனது செய்திக் குறிப்பில் பிள்வருமாறு வெளியிட்டுள்ளார்.
பேரன்பிற்கும் பெருமதிப்பிற்குமுரிய யாழ்ப்பாண மாவட்ட வாக்காளப் பெருமக்களே,
வட மாகாணத்தின் முதலமைச்சர் வேட்பாளராகவும் யாழ்ப்பாண மாவட்டத்தின் முதன்மை வேட்பாளராகவும் தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் களமிறக்கப்பட்டுள்ள முன்னாள் உச்ச நீதிமன்ற நீதியரசர் சீ.வீ. விக்னேஸ்வரன் அவர்களுக்கு யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள ஒவ்வொரு தமிழ்த் தேசிய உணர்வாளர்களும் தங்களின் ஒரு விருப்பு வாக்கை அவரின் 10ம் இலக்கத்திற்கு இட்டு அதி கூடிய விருப்பு வாக்குகளால் அவரை வெல்ல வைப்பது எங்கள் ஒவ்வொருவரதும் வரலாற்றுக் கடமையாகும்.
தமிழர்களின் இறைமை தன்னாட்சியுடன் கூடிய ஒரு கௌரவமான அரசியல் தீர்வுக்காக ஆறு தசாப்தங்களாகப் போராடும் நாங்கள், 2009 இல முள்ளி வாய்க்காலில் இன அழிப்புச் செய்யப்பட்ட எம் மக்களுக்கான சர்வதேச விசாரணை கோரியும் தமிழர்கள் கௌரவமான சம பங்காளர்களாக இந்த மண்ணில் வாழ்வதற்கான உரிமை வேண்டும் என்பதைச் சர்வதேச சமூகத்தின் இதயங்களில் இறுக்கமாக உறைய வைப்பதற்கும் தமிழர்கள் ஓரணியாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நிற்கிறார்கள் என்பதை உலகுக்குக் காட்டவும் இத் தேர்தல் ஒரு கருத்துக் கணிப்பாகவே அமைகிறது.
இதில் சட்ட ரீதியான அறிவும், ஆழுமையும் ஆன்மீகமும் தமிழ்த்தேசியம் தொடர்பான தெளிவான பார்வையும் கொண்ட விக்னேஸ்வரன் அவர்களை அதி கூடிய விருப்பு வாக்குகளால் நாம் வெல்ல வைக்க வேண்டும். இந்த வரலாற்றுக் கடமை ஒவ்வொரு யாழ்ப்பாண மாவட்ட தமிழ்த் தேசிய வாக்காளர்களிடையே உண்டு.
அந்த வரலாற்றுக் கடமையைத் தவற விடாமல் நாங்கள் மேற்கொள்ள எல்லோரும் திடசங்கற்பம் கொள்வோம் என பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.
No comments
Post a Comment