தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எப்போதும் எடுத்த காரியத்தை பலத்த சவால்களுக்கு மத்தியில் நடத்தி முடிக்கும். மக்களின் பிரதிநிதியாகிய நாங்கள் மக்கள் நலன்களில் கண்ணும் கருத்துமாக இருப்போம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா தெரிவித்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற கவனஈர்ப்பு பேரணியின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
இராணுவத்தினர் மாங்காடு மற்றும் குருக்கள் மடம் வீடுகளுக்குச் சென்று பேரணியில் கலந்து கொள்ளக் கூடாது என்றதுடன் அப்படிச் சென்றால் கம்பஹா நீர்ப் பிரச்சினையில் நடைபெற்ற நிகழ்வே நடக்கும் என மக்களை அச்சுறுத்தியுள்ளனர்.
இதனால் பங்குகொள்ளவிருந்த அதிகமானோர் கலந்து கொள்ளவில்லை. இருந்தும் இங்குள்ள மக்களை வைத்து பேரணியை நடத்தியுள்ளோம். இது எமக்கு வெற்றியே.
நாம் அரசுக்கோ அல்லது பொலிஸாருக்கோ எதிராக பேரணி நடத்தவில்லை. கோவிலை சேதப்படுத்தி களவு செய்தவர்களைக் கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்துங்கள் என்று தான் இந்த அமைதிப் பேரணியை பொலிஸாரின் அனுமதியுடன் நடத்த திட்டமிட்டிருந்தோம்.
இருப்பினும் இதில் இராணுவத்தினர் தலையிடுவதை பார்க்கும் போது இராணுவத்தினர் தானா இக்களவுகளைச் செய்தார்கள் எனத் தோன்றுகின்றது என்றார்.
No comments
Post a Comment