புதுக்குடியிருப்புப் பிரதேசத்தில் மீள்குடியமர்த்தப்பட்டுள்ள மக்களின் நலன்கருதி பல இலட்சம் ரூபா செலவில் அமைக்கப்பட்டுள்ள பேருந்து நிலையத்தில் மதுப்பிரியர்கள் அடாவடித்தனங்களில் ஈடுபட்டு வருவதாக மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இது குறித்து கவலை தெரிவித்துள்ள இப்பகுதி மக்கள் குறித்த பேருந்து நிலையத்தை விரைவாகத் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்டவர்களைக் கோரியுள்ளனர்.
முல்லை மாவட்டத்தில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின்போது புதுக்குடியிருப்புப் பிரதேசத்தில் இருந்த குறித்த பேருந்து நிலையம் பயன்படுத்த முடியாதவாறு பலத்த சேதத்திற்குள்ளானது.
இப் பகுதியில் நிரந்தரமான பேருந்து நிலையம் இல்லாததினால் மீள்குடியேறிய மக்கள் தங்கள் பயணங்களை மேற்கொள்ள முடியாமல் பாதிப்படைந்து வருகின்றனர்.
மக்கள் நலன் கருதி பரந்தன், முல்லைத்தீவு வீதியில் கோம்பாவில் கிராம உத்தியோகத்தர் பிரிவிலுள்ள கைவேலி என்னும் இடத்தில் பிரதேச செயலகத்தினால் வழங்கப்பட்ட ௨ ஏக்கர் காணியில் 20 இலட்சம் ரூபா செலவில் பிரதேச சபையினால் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
மக்களின் தேவையைக் கருத்திற்கொண்டு அவசரமாக அமைக்கப்பட்ட இந்தப் பேருந்து நிலையம் மூன்று மாதங்களுக்கு மேலாகியும் திறக்கப்படாமல் இருப்பதனால் மதுப்பிரியர்களின் மறைவிடமாக மாறியுள்ளது. மது அருந்துபவர்கள் பேருந்து நிலையத்தை நாடி வந்து மது மருந்துவதுமல்லாமல் வெற்றுப் போத்தல்களையும் பியர் ரின்களையும் அவ்விடத்தில் வீசிவிட்டு செல்கிறார்கள். இதனால் சுற்றுச் சூழலுக்குப்பாதிப்பு ஏற்படுவதுடன் சுகாதாரத்திற்கும் பங்கம் ஏற்படுகின்றது.
இந் நிலை குறித்துக் கவலையடைந்துள்ள மக்கள் பூர்த்தியான நிலையிலுள்ள இந்த பேருந்து நிலையத்தை விரைவாககத் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்டவர்களைக் கோரியுள்ளனர்.
No comments
Post a Comment