ஐந்து மாவட்டங்களைத் தன்னகத்தே கொண்ட வடக்கு மாகாண சபையில் 36 அங்கத்தவர்களில் 30 அங்கத்தவர்களையாவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெற்று சாதனை புரிந்து காட்ட வேணுமென கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் சூளுரைத்துள்ளார். தேர்தல் நடாத்தப்படும் 3 மாகாண சபைகளிலும் நாங்கள் வெற்றி பெறுவோம். குறிப்பாக வடக்கு மாகாண சபையைக் கைப்பற்றுவோமென ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் மூத்த அமைச்சர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றார்கள்.
எமது மக்களின் மிகப் பெரிய ஆதரவுடன் வடமாகாண சபையில் ஆட்சி அமைப்போமென ஈ.பி.டி.பி. யின் தலைவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவும் அவரது கட்சியினரும் உறுதி கூறி வருகின்றார்கள். இந்த நிலையில் 36 அங்கத்தவர்களை தெரிவு செய்வதற்கான 5 மாவட்டங்களை உள்ளடக்கிய வடக்கு மாகாண சபைக்கு 906 பேர் போட்டியிடுகின்றார்கள்.
யாழ்ப்பாணம், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய 5 மாவட்டங்களிலும் மொத்தமாக 714488 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
1.ஸ்ரீலங்கா தொழிலாளர் கட்சி 2.இலங்கை தமிழரசுக்கட்சி 3.ஜனசதபெரமுன 4.சோஷலிச சமத்துவக்கட்சி 5.ஐக்கிய தேசியக்கட்சி 6.மக்கள் விடுதலை முன்னணி 7.ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பு 8.ஜனநாயக சுதந்திரக்கட்சி 9.ஜனநாயக ஐக்கிய முன்னணி 10.ஐக்கிய சோஷலிசக்கட்சி 11.ஸ்ரீ லங்கா மகாஜன பக் ஷய ஆகிய 11 கட்சிகள் களத்தில் இறங்கியுள்ளன.
இதேவேளை 1.அன்ரனி ரங்கதுசார, 2.இராஜலிங்கம் விதுன்ராச, 3.ர.திரிலோகநாதன், 4.பொ.விஜயகாந்த், 5.ஜனூன் முஹம் மட், 6.இ.தாமோதரம் ராஜா, 7.மாணிக்கசோதி அபிமன்னசிங்கம், 8.செல்வி தம்பிப்பிள்ளை 9.கிருஷ்ணசாமி சுபாஸ்கரன் ஆகியோர் தலைமையில் 9 சுயேச்சைக்குழுக்கள் யாழ். மாவட்டத்தில் போட்டியிடுகின்றன.
இருபது போட்டி நிலைகள் காணப்படும் இம்மாவட்டத்தின் வாக்காளர் தொகை 426703 ஆகும்.
16 உறுப்பினர்களைக் கொண்ட யாழ். மாவட்டத்தில் போட்டியிடும் பிரதான கட்சிகளின் முதன்மை வேட்பாளர்களாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரன், ஈ.பி.டி.பி. முதன்மை வேட்பாளர் எஸ். தவராஜா, ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளர் இ.அங்கஜன் ஐக்கிய தேசியக்கட்சியின் முதன்மை வேட்பாளர் தி. துவாரகேஸ்வரன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
நான்கு (4) உறுப்பினர்களை தெரிவு செய்ய வேண்டிய கிளிநொச்சி மாவட்டத்தில் 11கட்சிகளும் இரண்டு சுயேச்சைக்குழுக்களும் போட்டியிடுகின்றன. 91 வேட்பாளர்கள் போட்டியிடும் இம் மாவட்டத்தில் 68.590 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதன் மை வேட்பாளராக தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி, ஐக்கிய தேசியக் கட்சி யின் முதன்மை வேட்பாளராக தியாகராஜா விக்னேஸ்வரன், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளராக ஈ.பி.டி.பி. கட்சியைச் சேர்ந்த வை.தவநாதன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
முல்லைத்தீவு மாவட்டம் 5 மாகாண சபை உறுப்பினர்களைக் கொண்டது. இம் மாவட்டத்தில் 52402 பேர் இம்முறை வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். 104 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ள இம்மாவட்டத்தில் 11 கட்சிகளும் இரண்டு 2 சுயேச்சைக்குழுக்களும் போட்டியிடுகின்றன.
இம்மாவட்டத்தின் முதன்மை வேட்பாளர்களாக தமிழ்த் தேசியக்கூட்டமைப்பைச் சேர்ந்த கோட்டக்கல்வி அதிகாரி மரியம்பிள்ளை அன்ரனி ஜெகநாதன் போட்டியிடுகிறார்.
வவுனியாவில் 94,367 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். 6 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட வேண்டிய இம் மாவட்டத்தில் 12 கட்சிகளையும் 07 சுயேச்சைக்குழுக்களையும் சேர்ந்த 171 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றார்கள்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளராக நிறுத்தப்பட்டிருப்பவர் ஓய்வு நிலை கிராம சேவையாளர் எம். தியாகராஜா, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முதன்மை வேட்பாளராக நிறுத்தப்பட்டிருப்பவர் ஸ்ரீ ரெலோவின் செயலாளர் ப. உதயராசா ஆவார்.
மன்னார் மாவட்டம் 5 அங்கத்தவர்களைக் கொண்டது. இங்கு கட்சிகள், சுயேச்சைக்குழுக்கள் என்ற வகையில் 160 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளராக கலாநிதி ஞானசீலன், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் எந்திரி ரொபேட் பீரிஸ் ஆகியோர் போட்டியிடுகின்றார்கள்.
தேர்தல் தொகுதி அடிப்படையில் வடமாகாணத்தை நோக்குவோமாயின் தேர்தல் மாவட்டமான யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகியன ஊர்காவற்றுறை, வட்டுக்கோட்டை, காங்கேசன்துறை, மானிப்பாய், கோப்பாய், உடுப்பிட்டி, பருத்தித்துறை, சாவகச்சேரி, நல்லூர், யாழ்ப்பாணம், கிளிநொச்சியென 11தேர்தல் தொகுதிகளைக் கொண்டவை.
வன்னி மாவட்டம், மன்னார், வவுனியா, முல்லைத்தீவு என மூன்று தேர்தல் தொகுதிகளைக் கொண்டது. மறுபுறம் இவை மாவட்டமாகவும் கொள்ளப்படுகிறது.
ஐந்து மாவட்டங்களிலும் போட்டியிடும் கட்சிகள், குழுக்கள் உறுப்பினர் எண்ணிக்கை வாக்காளர் எண்ணிக்கை வேட்பாளர் எண்ணிக்கை ஆகியவற்றை ஒரே பார்வையில்
நோக்குவோமாயின்,
இவ்வட்டவணையின்படி பார்க்கின்ற போது கடந்த காலத்தில் நடைபெற்ற எல்லா வகையான தேர்தல்களையும் விட வடமாகாண சபைத் தேர்தலில் கட்சிகள், சுயேச்சைக்குழுக்களின் போட்டி வீதம் கணிசமானது என்று சொல்வதை விட அதிகமாகவே காணப்படுகின்றது. 36 அங்கத்துவத்தைப் பெறுவதற்கு 57 கட்சிகளையும் 28 சுயேச்சைக்குழுக்களையும் சேர்ந்த 906 பேர் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர்.
இதில் சிறப்பாக குறிப்பிடக்கூடிய விடயமன்னவென்றால் வடமாகாண சபை தேர்தலில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐவர் போட்டியிடுவதாகும்.
1. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார் பில் வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் புளொட் அமைப்பின் தலைவருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன்.
2. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ரெலோ அமைப்பின் முக்கிய உறுப்பினருமாகிய கே.சிவாஜிலிங்கம்.
3. கிளிநொச்சித் தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழர் விடுதலைக்கூட்டணியின் செயலாளர் நாயகமுமாகிய வீ. ஆனந்தசங்கரி வன்னி மாவட்டத்திலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்களாக களமிறங்கியுள்ளனர்.
இதேவேளை ஈ.பி.டி.பி.யின் சார்பில்,
1. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். தவராஜா, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பிலும்.
2. வன்னி மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ச. கனகரட்ணம் இம்முறை முல்லைத் தீவு மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வேட்பாளராக போட்டியிடுகிறார்.
இத்தகையதொரு பல்முனைப் போட்டி நிலவி வரும் வடக்கு மாகாண சபையை கைப்பற்றப் போகும் வாக்கு வல்லமை கொண்டவர்களாக யார் இருக்கப் போகின்றார்கள்?
ஆட்சியைக் கைப்பற்றும் திறனை தனியொரு கட்சி பெற முடியுமா அல்லது கூட்டுக் கட்சிகள் பெற முடியுமா என்பதெல்லாம் தீவிரமாக ஆராயப்பட வேண்டிய விடயமாகவே இருக்கின்றது
இலங்கையில் 8 மாகாண சபைகளிலும் நாமே ஆட்சி செய்து வருகிறோம். இதேபோல வடக்கு மாகாண சபையிலும் நாமே ஆட்சி அமைப்போம் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளரும் அமைச்சருமான சுசில் பிரேம்ஜயந்த யாழ்ப்பாணத்தில் வைத்து சூளுரைத்துள்ளார்.
இதேவேளை, கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் சர்வதேசத்தின் அழுத்தம் காரணமாக நடைபெறும் இத் தேர்தலானது சுதந்திரமாக நடைபெறுமா என கேள்வி எழுப்பியிருப்பதுடன் சர்வதேச கண்காணிப்பாளர்கள் கட்டாயமாக அழைக்கப்பட வேண்டுமென வலியுறுத்தியுமுள்ளார்.
எவை எப்படியிருந்த போதிலும் இந்த தேர்தலில் நேரடிப் போட்டித் தன்மை கொண்ட கட்சிகளாகக் காணப்படுபவை வரிசை ஒழுங்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி மற்றும் ஈ.பி.டி.பி. ஐக்கிய தேசியக் கட்சி ஆகியனவாகும். இதில் மறைமுகமாக ஐக்கிய தேசியக்கட்சியின் போட்டித் தன்மை சுதந்திரக் கூட்டமைப்புக்கு எதிராக இருக்கப்போகின்றதே தவிர கூட்டமைப்புக்கு அல்ல.
நேரடிப் போட்டியென்ற வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் ஒன்றையொன்று எதிர்கொள்ள வேண்டிய நேர் நிலைப் போட்டி யாழ். மாவட்டத்திலும் வன்னி மாவட்டத்தில் இன்னுமொரு நேர்நிலைத் தன்மை கொண்டதாகவும் காணப்படுகின்றது.
இந்த போட்டி நிலைகளைக்கொண்டு எதையும் திட்டவட்டமாக வரையறுக்க முடியா விட்டாலும் இப்போதைய சூழ்நிலைக்கணிப்பில் அல்லது சமூக ஆய்வாளர் கருத்துப்படி முதன்மை பெற்று நிற்கும் கட்சியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு காணப்படுகின்ற போதும் ஒரு உச்ச வெற்றியை தாண்டக் கூடிய பெரும் வாக்குப் பலத்தை இது எங்கிருந்து பெற முடியுமென்பதை ஒவ்வொரு தேர்தல் தொகுதிகளிலிருந்தே கணிப்பிட முடியும்.
இதை ஒப்பீட்டு ரீதியில் நோக்க வேண்டுமானால் எமக்கு கிடைக்கக் கூடிய அண்மைக்கால தரவுகள் என்ற வகையில் 2010 ஆம் ஆண்டு ஏப்ரல் 8 ஆம் திகதி நடைபெற்ற பொதுத் தேர்தல் தரவுகளைக்கொண்டு நோக்குவது எதிர்கால நிகழ்வை அறிய உதவ முடியும். காரணம் பொது மக் கள் நேரடியாக பங்கு கொண்ட தேசிய ரீதியான வாக்களிப்பென்ற வகையில் இதுவே பொருந்தும்.
அந்த வகையில் வடமாகாணத்திலுள்ள தேர்தல் மாவட்டம் என்ற அடிப்படையில் கிளிநொச்சி உள்ளடங்கிய யாழ். மாவட்டத்திலுள்ள 11 தேர்தல் தொகுதிகளின் வாக்க ளிப்பு நிலைவரத்தை பிரதான கட்சிகள் பெற்ற தரவின் அடிப்படையில் நோக்கு வோம்.
மேற்காட்டப்பட்ட புள்ளி விபரங்களின் படி யாழ். தேர்தல் மாவட்டத்தில் 721359 பேர் வாக்காளர்களாக பதியப்பட்டிருந்த போதிலும் 168277 பேரே வாக்களித்துள்ள னர்.
அதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு 65119 பேர் வாக்களித்த நிலை காணப்பட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு சுமார் 47622 பேர் வாக்களித்துள்ளனர். மூன்றாம் நிலையில் ஐக்கிய தேசிய முன்னணி 12621 வாக்குகளைப் பெற்றுள்ளது.
இந்த வாக்கு செலுத்தல் அடிப்படையில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு 5 ஆசனங்களையும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 3 ஆசனங்களையும் ஐக்கிய தேசிய முன்னணி 1 ஆசனத்தையும் பெற்றிருப்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.
தொகுதி வாரியாகப் பார்க்கின்ற போது யாழ். மாவட்டத்திலுள்ள 11 தொகுதிகளிலும் 18.5 வீத வாக்குகளே அளிக்கப்பட்டுள்ளன.
அதிலும் சனச்செறிவான தேர்தல் தொகுதிகள் என்று அடையாளமிடப்படுகின்ற நல்லூர், மானிப்பாய் போன்ற தேர்தல் தொகுதிகளில் மிக மோசமான வாக்களிப்பு நிலையே காணப்பட்டுள்ளது.
இதேபோன்று வன்னி மாவட்டத்தை எடுத்து நோக்குவோமாயின் வாக்களிப்பு விழுக்காடு அதிகமாகவே காணப்படுகிறது
வன்னி மாவட்டத்தில் பதியப்பட்ட மொத்த வாக்குகளில் 276975 அளிக்கப்பட்ட வாக்குகளாக 90367 காணப்படுகின்றது. இந்த அளிப்பு வாக்கில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு 37639 வாக்குகளைப் பெற்றிருக்க ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 23389 வாக்குகளைப் பெற்றிருக்கிறது. இதன் அடிப்படையில் தமிழ்த் தேசிய கூட்டமை ப்பு 3 ஆசனங்களையும் ஐக்கிய மக்கள் சுதந் திர முன்னணி 2 ஆசனங்களையும் ஐக்கிய தேசிய முன்னணி 01 ஆசனத்தையும் பெற்றிருந்தது.
வன்னி மாவட்டத்தைப் பொறுத்தவரை வவுனியா மாவட்டம் உயர்ந்த தன்மையில் வாக்களிப்பு இருந்த போதிலும் முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களில் மிக மோசமான நிலையே காணப்படுகிறது.
இந்த மாவட்டங்களின் விழுக்காட்டு நிலைக்கு பல்வேறு காரணங்கள் இருந்திருக்கிறது.
இந்த தேர்தல் அனுபவத்தின் அடிப்படையில் பார்க்கின்றபோது மாகாண சபை தேர்தல் எத்தகைய மாற்றங்களைக்கொண்டு வரும் தத்துவங்களைக் கொண்டுள்ளது என்பது காத்திரமான கேள்வியாக மாறக்கூடும்.
ஒரு தேர்தல் உன்னத வெற்றியைத் தீர்மானிப்பதில் பல்வேறு காரணிகள் முதன்மை பெற்று நிற்கின்றது என்பது அரசியல் தத்துவமும் வியாக்கியானமுமாகும்.
அதில் முக்கியமானவை கட்சிகளின் தூரநோக்கு பொருளாதாரத் திட்டங்கள், அதன் தேர்தல் விஞ்ஞாபனம், நிலைமாறாக் கொள்கைகள், தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகளுக்கான கட்சியின் அணுகுமுறை கள், வேட்பாளர்களின் ஆளுமை என எத்தனையோ காரணிகள் கட்சியொன்றின் தேர் தல் வெற்றியைத் தீர்மானிக்கின்றன என்பதை அரசியல் வல்லுநர்கள் குறிப்பிடுவார்கள்.
இவையெல்லாவற்றுக்கு மேலாக தலைமைத்துவத்தின் உயர்ந்த ஆளுமைத் தன்மை யும் செறிவான செல்வாக்கை செலுத்தி நிற்கின்றது.
மேலே எடுத்துக்கூறப்பட்ட ஒவ்வொரு காரணியின் உரைகல் கொண்டு உரைத்துப் பார்க்க வேண்டிய தேவை வடமாகாண சபைத் தேர்தலில் எழுந்து நிற்கின்றது. இந்த தேர்தலைப் பொறுத்தரை மக்கள் ஆணை யென்ற வாக்குப் பெறலை விட, சர்வதேசத்துக்கு எடுத்துக்காட்டக்கூடிய ராஜதந்தி ரப் போருக்கான மக்கள் பிரகடனமாகவே கொள்ளப்படுகிறது.
இந்த ஜனநாயகப் போரில் அரசாங்கம் தன்னை நியாயத்தனாக நிலை நிறுத்த முயற்சிப்பது ஏதோ வகையில் உண்மையே, இராணுவப் பிரசன்னத்தைக் குறைத்து விட் டோம், மீள்குடியேற்றம் நிறைவு பெற்று விட்டது. அபத்தமான படுகொலைகளை விசாரணை செய்து கொண்டிருக்கிறோம். மாகாண சபைக்கு பொலிஸ் அதிகாரங்களோ காணி அதிகாரங்களோ தேவையற்றது. அதை வழங்க நாங்கள் தயாராக இல்லையென்ற செய்திகளை வெளிப்படையாகவே அரசு கூறி வருகின்றது.
இதற்கு பக்கம் பாடுகின்றவர்களும் வடக் குத் தேர்தலில் களம் இறங்கியிருக்கிறார்கள். வடக்குக்கு எந்த அதிகாரங்களும் வழங்கப்படக்கூடாது என கூக்குரல் இடும் கட்சிகளும் பச்சைத் தனமாகவே வாக்குக்கேட்க வந்தி ருக்கின்றன. இவையெல்லாவற்றையும் பார்க்கின்ற போது வடக்கில் ஒரு ராஜ்ஜியம் ஜனநாயக முறைப்படி அமைந்து விடுமோ என்று நாங்கள் கனவுலகில் சஞ்சரிக்க வேண் டியுள்ளது.
ஆனால், கூட்டமைப்பினரோ தமிழ் மக் களின் பிரச்சினைக்கு வடக்கு மாகாண தேர் தலோ அல்லது மாகாண சபைத் தேர்தலோ ஒரு தீர்வாக அமைந்து விடப் போவதில்லை. அது ஒரு படிக்கல்லாக அமைய முடியுமே தவிர முற்று முழுதாக அதை நாம் ஏற்றுக் கொள்ளவில்லையென்று கூறி வருகின்றார் கள். இப்போதைய நிலையில் மாகாண சபை முறைமையென்பது ஒரு கனவுக்குடமாக இருக்கிறன்றது.
இருந்த போதிலும் 60 வருடப் போராட்டங் களை ஒன்று கூட்டிக்காட்டக்கூடிய ஜனநாயகப் போர்க்களமாக வடமாகாண சபை தேர் தல் ஆக்கப்பட்டிருக்கிறது என்பது உண் மையே.
சர்வதேசத்தின் வலியுறுத்தலால் நடத்தப் படுகின்ற இந்த தேர்தலில் தமிழ் மக்களின் ஒன்று கூட்டிய பலமும் கோரிக்கையும் காட் டப்பட வேண்டுமென்பதும் உண்மையே.
ஆனால், அதற்குரிய ஜனநாயக கைங்கரியங்களாக இருப்பது வாக்குவல்லமையாகும். இந்த வாக்கு வல்லமையை அங்குலம் அங் குலமாகவும் வீடு வீடாகவும் அளந்தெடுத்து வாக்குப் பண்ண வைக்கக்கூடிய விழிப் புணர்வொன்று மிக மதி நுட்பமாகவும் சாண க்கியமாகவும் கொண்டுவரப்பட வேண்டிய தேவையுள்ளது என்பதை சம்பந்தப்பட்ட வேட்பாளர்கள் உணர்ந்து கொள்ள வேண் டும்.
பொதுவாக சொல்லப் போனால் 1977 ஆம் ஆண்டுக்கு முன் ஒரு ஆணையை தமிழ் மக்கள் எப்படித் தந்தார்களோ அதை விட இரட்டிப்புத் தன்மையான பலத்தையும் மக்கள் எழுச்சியையும் காட்ட வேண்டிய காலத்தின் நியதி நம்முன்னே கொண்டு வரப்பட்டுள்ளது என்பதே உண்மை.
No comments
Post a Comment