சிறிலங்கா கடற்படையினரால், தமிழ்நாட்டு மீனவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதற்கு, இந்தியா கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது.
நேற்று சவுத் புளொக்கில் உள்ள இந்திய வெளிவிவகார அமைச்சுக்கு அழைக்கப்பட்ட, சிறிலங்கா தூதுவர் பிரசாத் காரியவசத்திடம், இந்திய வெளிவிவகார அமைச்சின் இணைச்செயலர் ஹர்ஸ்வர்த்தன் சிருங்லா, இந்தியாவிமுறைப்படியான எதிர்ப்பையும் கண்டனத்தையும் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டு மீனவர்கள் சிறிலங்கா கடற்படையினரால் தொடர்ச்சியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவதற்கு இந்தியா இராஜதந்திர ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சிறிலங்கா தூதுவரை அழைத்துக் கண்டிக்க வேண்டும் என்றும், தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதா, கடந்த ஒருவாரத்தில், 3 தடவைகள் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு கடிதம் எழுதியிருந்தார்.
இதையடுத்தே, சிறிலங்கா தூதுவர் சவுத் புளொக்கிற்கு அழைக்கப்பட்டு கண்டிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன், கொழும்பிலுள்ள இந்திய தூதுவர் யஸ்வர்த்தன் குமார் சின்ஹாவும், நேற்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சுக்கு நேரில் சென்று இந்திய அரசின் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
முன்னதாக, கடந்த மாதம் புதுடெல்லி வந்திருந்த சிறிலங்காவின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவிடமும், இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனனின் கொழும்புப் பயணத்தின் போதும், மீனவர்களின் பிரச்சினை தொடர்பாக இந்தியா பிரச்சினை எழுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, சிறிலங்காவில் சிறை வைக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டு மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கும்படி கோரி, இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் திமுக, அதிமுக உறுப்பினர்கள் கடந்த இரண்டு நாட்களாக முழக்கம் எழுப்பியிருந்தனர்.
சிறிலங்காவில் 114 தமிழ்நாட்டு மீனவர்கள் தற்போது சிறை வைக்கப்பட்டுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் நேற்று நாடாளுமன்றத்தில் தகவல் வெளியிட்டுள்ளார்.
No comments
Post a Comment