தம்புள்ள, கண்டலம சந்தியிலுள்ள மகா பத்ரகாளி கோவிலை அகற்றுவதற்கான முயற்சிகள் மீண்டும் அரங்கேற்றப்பட்டுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“இந்த கோவிலின் சிலையை எடுத்துச் செல்வதற்கான முயற்சிகள் நேற்று வியாழக்கிழமை இரவு மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த 31 வருடங்களாக இயங்கி வந்த இந்தக் கோவிலில் இறுதி 13 வருடங்கள் தேர்த்திருவிழாவும் இடம்பெற்று வந்துள்ளது.
இந்த நிலையிலேயே தற்போது குறித்த கோயிலை அகற்றும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த கோயிலைச் சுற்றி வாழ்ந்து வந்த 25 அப்பாவி தமிழ் குடும்பங்களுக்கு ஒரு இலட்சம் ரூபா வீதம் வழங்கப்பட்டு அங்கிருந்து அகற்றியுள்ளனர்.
இதனால் அவர்கள் தற்போது நிரந்தர வசிப்பிடமின்றி நிர்க்கதி நிலையை அடைந்துள்ளனர். தாங்கள் தற்போது தற்காலிகமாக தங்கியுள்ள பகுதியிலிருந்து பூசை வழிபாட்டிற்காக இந்தக் கோயிலை நாடிவருகின்றனர்.
தம்புள்ள புனித பிரதேசத்தில் கோவிலோ, பள்ளிவாசலோ இருப்பது புனிதத்துவத்தை எவ்வகையிலும் பாதிக்காது. மாறாக தம்புள்ள நகரில் இருக்கும் கசாப்புக் கடைகளை அகற்றாது புனித தலங்களை அகற்றுவது எவ்வகையில் நியாயமாகும்?.
சிறுபான்மை மக்கள் இன்று தமது மத வழிபாடுகளைக் கூட சுதந்திரமாக மேற்கொள்ள முடியாத ஒரு நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இவ்வாறான சூழலை அகற்றி தமது பிரதேசங்களில் சுதந்திரமாக மத வழிபாடுகளை மேற்கொள்வதற்கான சூழலை அமைத்துக்கொடுப்பது அரசாங்கத்தின் கடப்பாடாகும்.
இவ்வாறன செயற்பாடுகளை அரசாங்கம் கவனத்தில் எடுக்காது இருக்குமானால் பாரிய பின்விளைவுகளை எதிர்நோக்க வேண்டிவரும்” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments
Post a Comment