வடபகுதியில் உள்ள ஆயுர்வேத சுதேச மருந்து விற்பனை நிலையங்கள் மற்றும் மருந்து தயாரிப்போர் மீது விசேட கண்காணிப்புப் பரிசோதனைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இதற்கான ஏற்பாடுகளை வடக்கு மாகாண சுதேச வைத்திய திணைக்களம் செய்துள்ளது. ஒழுங்கு விதிகளை மீறுகின்ற நிறுவனங்கள் மீது சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
ஆயுள்வேத மற்றும் சுதேச வைத்தியத்துறையின் தனித்துவத்தையும் தரத்தையும் மேம்படுத்துவதோடு பக்கவிளைவுகள் அற்ற தூயமருந்துப் பாவனையை பொதுமக்கள் மத்தியில் மேல் நிலைப்படுத்துவற்கு ஏதுவாக வடக்கு மாகாண சுதேச வைத்திய திணைக்களமும் சுதேச வைத்தியத்துறை அமைச்சும் இணைந்த நிலையில் அதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளன.
விற்பனை செய்யப்படும் மருந்துப் பொருட்களும் மூலப்பொருட்களும் சுத்தமாகவும் சுகாதார முறையிலும் காட்சிப்படுத்தப்படவேண்டும். மருந்துகள், மூலப்பொருட்கள் அனைத்தும் அடையாளப்படுத்தும் சுட்டிகள் கொண்டிருப்பதை உறுதி செய்தல்வேண்டும். மருந்து விற்பனை நிலையம் உரிய முறையில் பதிவுசெய்திருப்பதை உறுதிப்படுத்தலும் பதிவுச் சான்றிதழை பார்வையில் படும்படி காட்சிப்படுத்தல், மருந்து உற்பத்திகள் நடைபெறுமாயின் அதற்கான அனுமதியை ஆயுர்வேத திணைக்களத்தில் பெற்றிருத்தல், அதனை பார்வையில்படும் படி வைத்தல் என்பன உரியமுறையில் அனுசரிக்க வேண்டும். இவைகளை வலியுறுத்தி வடமாகாண சுதேச வைத்தியத் திணைக்கள ஆணையாளர் டாக்டர் திருமதி சியாமளா துரைசிங்கம் விரிவான சுற்றறிக்கை ஒன்றினை அனுப்பி வைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
No comments
Post a Comment