ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை அடுத்த மூன்று வாரங்களில் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில், அரசாங்கமும் தற்காப்பு நடவடிக்கைகள் சிலவற்றில் இறங்கியுள் ளது.
வரும் 25ஆம் திகதி தொடக்கம், 31 ஆம் திகதி வரை நவநீதம்பிள்ளை இலங்கையில் பயணத்தை மேற்கொள்கிறார்.
அவரது ஒருவார கால உண்மை கண்டறியும் பயணம், 31 ஆம் திகதி கொழும்பில் நடத்தவுள்ள செய்தியாளர் சந்திப்புடன் நிறைவடையும்.
இலங்கை அரசாங்கம் தொடர்பான கடு மையான விமர்சனங்களை சர்வதேச அரங் கில் முன்வைத்து வருபவர்களில் நவநீதம்பிள்ளையும் ஒருவர்.
அவர் ஒரு தமிழர் என்பதால், இலங்கை அரசுக்கு எதிராகச் செயற்படுவதாக கூட அரசாங்கம் அவரை விமர்சித்தது.
எப்போதெல்லாம், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், இலங்கை விவகாரம் குறித்து விவாதம் எழுகிறதோ, அப்போதெல்லாம், நவநீதம்பிள்ளையும் அவரது பணியகமும், நடுநிலையுடன் செயற்படவில்லை என்றும், பக்கச்சார்பாக நடந்து கொள்வதாகவும் குற்றஞ்சாட்டுவது இலங்கையின் வழக்கம்.
இலங்கை அரசாங்கத்தின் மீது கடுமையான விமர்சனங்களை முன் வைப்பவராக நவநீதம்பிள்ளையும், அவரை கடுமையாக விமர்சிக்கும் நிலையில் இலங்கை அரசாங்கமும் இருக்கும் நிலையில், இந்தப் பயணம் உலகளவில் முக்கியமானதாக கருதப்படுகிறது.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்துக்கமையவே இலங்கை வரும் நவநீதம்பிள்ளை, இங்குள்ள நிலைமைகளைப் பார்வையிட்டு, முன்னேற்றங்கள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்கும்படியும் பணிக்கப்பட்டுள்ளார். நவநீதம்பிள்ளையின் இலங்கைப் பயணம் முடிந்த அடுத்தவாரமே, ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 24ஆவது அமர்வு ஆரம்பமாகவுள்ளது.
அந்த அமர்வில் தனது இலங்கைப் பய ணம் குறித்த அறிக்கையை நவநீதம்பிள்ளை சமர்ப்பிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முழுமையாக இல்லாவிட்டாலும், இலங்கை குறித்த ஒரு மேலோட்டமான- இடைக்கால அறிக்கையையாவது அவர் ஜெனீவாவில் அடுத்த மாதம் முன்வைப்பதற்கு சாத்தியமுள்ளதால், அரசாங்கம் முன்னெச்சரிக்கையுடன் இருப்பதாகத் தெரிகிறது.
உண்மையில், அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடக்கவுள்ள 25ஆவது அமர்வில் தான், இலங்கை நிலைமைகளின் முன்னேற் றம் குறித்த முழுமையான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்று ஐ.நா மனித உரிமைகள் பேரவைத் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, 25ஆவது அமர்வில் எத்தகைய அறிக்கை சமர்ப்பிக்கப்படுவது என்பது குறித்து அரசாங்கம் இப்போது கவலைப்படவில்லை.
24ஆவது அமர்வில் நவநீதம்பிள்ளை இடைக்கால அறிக்கையை சமர்ப்பிப்பதானாலும், அதில் குற்றம் காணப்படக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளது.
ஏனென்றால், நவநீதம்பிள்ளை அளிக்கும் அறிக்கை இலங்கை அரசாங்கத்துக்குப் பாதகமாக அமைந்து விட்டால், வரும் நவம்பர் மாதம் கொழும்பில் நடக்கவுள்ள கொமன்வெல்த் மாநாட்டை அது பாதிக் கும்.
ஏற்கனவே, கனடா, பிரித்தானியா போன்ற நாடுகள் கொமன்வெல்த் மாநாட்டையும் மனித உரிமை விவகாரங்களையும் இணைத்து வைத்து தலையிடி கொடுத்து வருகின்றன.
இந்த நிலையில், நவநீதம்பிள்ளை அடுத்த மாதம் கொடுக்கும் அறிக்கை பாதகமாக அமைந்து விடக் கூடாது என்பதில் அரசாங்கம் உறுதியாக உள்ளதாகத் தெரிகிறது.
இதற்காக அரசாங்கம் நீண்டகாலமாக நிறைவேற்றாமல் இழுத்தடித்து வந்த சர்வதேச சமூகத்தின் கோரிக்கைகள் சிலவற்றை நிறைவேற்றும் முயற்சியில் இறங்கியுள்ளது.
நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளில் மேலும் சிலவற்றை நடைமுறைப்படுத்த இணங்கியுள்ள அரசாங்கம் அதன் செயல்முறை குறித்து விபரிக்கும் இணையத்தளத்தையும் ஆரம்பித்துள்ளது.
திருகோணமலையில், ஐந்து மாணவர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, 11 விசேட அதிரடிப்படையின ரைக் கைது செய்துள்ளது.
காணாமற்போனோர் தொடர்பாக ஆரா யும் ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்றை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
தங்காலையில், பிரித்தானிய சுற்றுலாப் பயணியின் கொலை தொடர்பாக ஆளும்கட்சியின் செல்வாக்குமிக்க உள்ளூர் தலைவர் உள்ளிட்டவர்கள் மீது குற்றச்சாட்டுகளை சுமத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
யாழ்.மாவட்டத்தில் வலிகாமம் பகுதியில் பொதுமக்களின் காணிகளில் அமைந்திருந்த
13 முகாம்களை மூடுவதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை.
இவையெல்லாம், ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையையும், சர்வதேச சமூகத்தையும் திருப்திப்படுத்த அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள்.
ஆனால், சர்வதேச அழுத்தங்களின் பேரில் காணாமற்போனோர் தொடர்பான ஆணைக்குழுவை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று ஜனாதிபதி நிராகரித்துள்ளார்.
ஆனால், உண்மை சர்வதேச அழுத்தங்கள் தான் என்பதில் சந்தேகமில்லை.
இவற்றையெல்லாம் அரசாங்கம் தானாகவே முன்வந்து செய்தது என்பதை நம்புவதானால், எதற்காக இதனைச் செய்வதற்கு இவ்வளவு காலமும் தேவைப்பட்டது என்ற கேள்வியை எழுப்ப வேண்டியிருக்கும்.
காணாமற்போனவர்கள் தொடர்பான ஆணைக்குழு விடயத்தில் அரசாங்கம் அக்கறை காட்டாமலேயே இருந்து வந்தது.
ஏனென்றால் அது, போரின் இறுதிக்கட்டத்தில், சரணடைந்து காணாமற்போன புலிகளின் முக்கிய தளபதிகள், பிரமுகர்கள் பற்றிய விவகாரத்தையும் கிளறிவிடும் என்பது அரசாங்கத்துக்குத் தெரியும்.
எனவே தான், இந்தளவு காலமும் இந்த விவகாரத்தை இழுத்தடித்து வந்தது.
தனக்கு அல்லது படையினருக்குப் பாதி ப்பை ஏற்படுத்தும் என்பதால் தான், இதுபோன்று நடவடிக்கைகளை எடுக்காமல் அரசாங்கம் தவிர்த்து வந்தது.
ஆனால், இப்போது நவநீதம்பிள்ளையின் வருகை, கொமன்வெல்த் மாநாட்டை குறையேதுமின்றி நடத்த வேண்டும் என்பதற்காக அரசாங்கம் தனது பிடிவாதத்தில் சில சமரசங்களை செய்து கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
கொமன்வெல்த் மாநாடு விவகாரம் ராஜபக் ஷ அரசாங்கத்துக்கு என்பதை விட, அந்தக் குடும்பத்தின் கௌரவப் பிரச்சினையாகவே உள்ளது.
இலங்கையில் இதற்கு முன்னர் நடந்த மிகப்பெரிய சர்வதேச மாநாடு என்றால் அது சிறிமாவோ காலத்தில் நடத்தப்பட்ட அணிசேரா நாடுகளின் தலைவர்களின் உச்சி மாநாடு தான்.
அதற்குப் பின்னர் சார்க் தலைவர்களின் மாநாட்டைத் தவிர வேறேதும் இலங்கை யில் நடந்ததில்லை.
அணிசேரா மாநாட்டைத் திறம்பட நடத்தி, புகழ் சேர்த்த சிறிமாவோ பண்
டார நாயக்கவைப் போன்று கொமன்வெல்த் மாநாட்டினால், புகழ்பெற நினைக்கிறார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ.
அந்த திட்டம் நிறைவேறுவது நவநீதம்பிள்ளையின் கையிலும் உள்ளது.
எனவே தான் அவரது வருகைக்கு முன்னர் அரசாங்கம் ஏதோ சிலவற்றைச் செய்து அவரைச் சமாதானப்படுத்த முனைகிறது. ஆனால், அவர் அரசாங்கத்தின் தேவைகளை நிறைவேற்றும் ஒருவராக இருப்பார் என்று எதிர்பார்ப்பதற்கில்லை.
ஏற்கனவே இலங்கை அரசாங்கம் தொடர்பாக அவர் கொண்டிருக்கும் கருத் தும், இலங்கைப் பயணத்தில் பக்கச்சார்பு நிழல் ஏதும் படிந்து விடாமல் தவிர்ப்பதில் ஐ.நா அதிகாரிகள் காட்டும் அக்கறையும் அத்தகைய எதிர்பார்ப்புகளை கொள்ள வைக்கவில்லை.
நவநீதம்பிள்ளை யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, திருகோணமலைப்
பகுதிகளுக்கு பயணம் செய்வதையே முக்கிய நோக்கமாக கொண்டுள்ளார்.
இந்தப் பகுதிகளுக்கு தனியார் விமானத் தில் அவர் பயணத்தை மேற்கொள்வதற்கே, ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் பணியகம் திட்டமிட்டுள்ளது.
ஆனால், போர் முடிவுக்கு வந்தவுடன், ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் இலங்கை விமானப்படை ஹெலியில் பாதுகாப்பாக பயணத்தை மேற்கொண்டதைச் சுட்டிக்காட்டி, நவநீதம்பிள்ளையையும், விமானப்படையின் ஹெலி ருவர்ஸ் விமானங்களை பயன்படுத்தும்படி அழுத்தம் கொடுத்துள்ளது.
பான் கீ மூன் பயணத்தை மேற்கொண்டிருந்த காலத்தில், தனியார் விமானங்கள் போர் வலயத்தில் பயணம் மேற்கொள்வதற்கு தடைவிதிக்கப்பட்டிருந்தது.
அதனால், தனியார் விமானத்தை பான் கீ மூன் பயன்படுத்தக் கூடிய நிலை இருக்கவில்லை. ஆனால், இப்போது நிலை அப்படியில்லை.
எந்த விமானமும் எங்கும் பயணம் மேற் கொள்ள அனுமதி உள்ளது.
அரசாங்கம் விமானப்படை விமானத்தை பயன்படுத்த அழுத்தம் கொடுப்பதற்குக் காரணம், தாம் விரும்பியவாறு நவநீதம்பிள் ளையின் பயணத்தை ஒழுங்குபடுத்திக் கொள்வதற்கே என்று கருதப்படுகிறது.
பான் கீ மூன், விமானப்படை விமானங்க ளில் பயணம் செய்ததால், முக்கியமான பல இடங்களை தவறவிட்டிருந்தார்.
அரசாங்கம் எங்கெல்லாம் கொண்டு சென் றதோ அந்த இடங்களைத் தான் அவர் பார் வையிட்டார்.
யாரையெல்லாம் ஒழுங்கு செய்ததோ, அவர்களைத் தான் சந்தித்தார்.
ஆனால், அப்படியொரு தவறைச் செய்ய நவநீதம்பிள்ளை தயாராக இல்லை என்பதையே, விமானப்படை விமானத்தில் பயணத்தை மேற்கொள்ள மறுப்பு வெளி யிட்டதில் இருந்து உணர முடிகிறது.
எவ்வாறாயினும், நவநீதம்பிள்ளையின் பய ணத்தை தனக்குச் சாதமாகப் பயன்படுத்திக் கொள்ள அரசாங்கம் முனைந்தாலும், அது எந்தளவுக்கு சாத்தியமாகும் என்பது சந்தே கம் தான்.
No comments
Post a Comment