அவுஸ்திரேலியாவின் புகலிடம் தொடர்பான புதிய கொள்கை, தஞ்சம் கோருவோருக்கு அளிக்கப்பட வேண்டிய போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளை மறுத்திருப்பதாக ஐநா தெரிவித்துள்ளது.
புதிய கொள்கையின்படி, அவுஸ்திரேலியா நோக்கி படகில் தஞ்சம்கோரி வருவோர் பப்புவா நியுகினிக்கு அனுப்பப்படுவார்கள்.
அங்கேயே அவர்களின் விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டு, அகதிகளாக அங்கீகரிக்கப்படுவோர் அங்கேயே மீள்குடியேற்றம் செய்யப்படுவார்கள்.
ஆனால், தஞ்சக் கோரிக்கையாளர்களின் விண்ணப்பங்களை பரிசீலிக்கும் விடயத்தில் பப்புவா நியுகினியின் சட்டதிட்டங்களில் பல்வேறு குறைபாடுகள் காணப்படுவதாக யூஎன்எச்சீஆர் என்ற ஐநாவின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயம் கூறுகிறது.
பப்புவா நியுகினி அரசாங்கத்தோடு இணைந்து பணியாற்றிவரும் ஆர்ஆர்ஏ என்ற அவுஸ்திரேலியாவின் பிராந்திய மீள்குடியேற்ற ஏற்பாட்டு மையம், தஞ்சக் கோரிக்கையாளர்கள் தொடர்பான பாரதூரமான பல்வேறு கேள்விகளுக்கு இன்னும் பதிலளிக்கவில்லை´ என்று அவுஸ்திரேலியாவின் புதிய கொள்கை தொடர்பான அதன் முதலாவது மீளாய்வில் யூஎன்எச்சீஆர் சுட்டிக்காட்டியுள்ளது.
பப்புவா நியுகினியில் இருக்கின் அகதிகள் மற்றும் தஞ்சக் கோரிக்கையாளர்களுக்கு போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாதிருக்கின்றமை குறித்து யூஎன்எச்சீஆர் வருத்தம் அடைந்துள்ளதாக கூறியுள்ளது.
தஞ்சக் கோரிக்கையாளர்களின் விண்ணப்பங்களை ஆராய்ந்துபார்க்குமளவுக்கு தேவையான ஆளணி மற்றும் நிபுணுத்துவ வசதிகள் பப்புவா நியுகினியிடம் இல்லை என்றும் அங்கு ஏதேச்சாதிகாரமாக கட்டாய தடுப்புக்காவல்களுக்கு ஆட்கள் உட்படுத்தப்படுவதாகவும் ஐநாவின் அகதிகளுக்கான நிறுவனம் தெரிவித்துள்ளது.
படகுகள் மூலம் ஆட்கடத்தும் வியாபாரிகளை ஒழிப்பதற்கே புதிய கொள்கையைக் கொண்டுவந்துள்ளதாக அவுஸ்திரேலிய பிரதமர் கெவின் ரட் அண்மையில் அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.
No comments
Post a Comment