யாழ்ப்பாணத்தில் காணாமல்போன மனிதவுரிமைகள் செயற்பாட்டாளர்களான லலித் -குகன் தொடர்பான ஆட்கொணர்வு மனுமீதான விசாரணையில் தொலைக்காட்சி ஊடகவியலாளர்கள் இருவரை நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
அமைச்சரவைப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல வழங்கிய செவ்வியொன்றில் கடத்தப்பட்டு காணாமல் போன லலித் -குகன் உயிரோடிருப்பது தொடர்பாக பிரஸ்தாபித்திருந்தார்.
இது தொடர்பில் லலித்-குகன் ஆட்கொணர்வு மனு மீதான விசாரணையின் போது முறைப்பாட்டாளர்களினால் பிரேரிக்கப்பட்டதை அடுத்து குறித்த செவ்வி ஒளிபரப்பப்பட்ட தொலைக்காட்சிகளது செய்தி ஆசிரியர்கள் இருவரையுமே நீதிமன்றில் ஆஜராக பணிக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கில் எதிராளிகளாக அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல, பொலிஸ்மா அதிபர், இராணுவத் தளபதி மற்றும் யாழ்.மாவட்ட இராணுவத்தளபதி ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளது. படைத்தரப்பின் சார்பில் சட்டத்தரணி ஒருவர் ஆஜராகியிருந்தார்.
இவ்வழக்கு விசாரணை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 5ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் ஆவரங்கால் பகுதியில் கடந்த 2011ம் ஆண்டு டிசம்பர் 9ம் திகதி லலித்-குகன் ஆகிய இருவரும் கடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
No comments
Post a Comment