தம்புள்ள பகுதியில் மரக்கறி (காய்கறி) வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் பெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர்.
மரக்கறிகளை வாகனங்களில் ஓரிடத்தில் இருந்து வேறு இடத்துக்கு கொண்டு செல்லும்போது அவற்றுக்கான பிளாஸ்டிக் கூடைகளை கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என்ற அரச உத்தரவை எதிர்த்தே இந்தப் போராட்டத்தை விவசாயிகள் நடத்தியுள்ளனர்.
தம்புள்ள நகருக்கு அருகே யாழ்- கண்டி வீதியான ஏ 9 பாதையை மறித்து அதில் மரக்கறிகளை கொட்டி சுமார் 1000 விவசாயிகள் இந்தப் போராட்டத்தை நடத்தியுள்ளனர்.
சில மாதங்களுக்கு முன்னரே இந்தப் பிளாஸ்டிக் கூடைகளை பயன்படுத்துவதற்கான சட்டம் கொண்டு வரப்பட்டுவிட்டதாகவும், ஆயினும் நேற்று டிசம்பர் 11 ஆம் திகதி முதல் அது கட்டாயமாக அமல்படுத்தப்பட்டு, பிளாஸ்டிக் கூடைகளில் அல்லாமல் வேறு கொள்கலன்களின் மரக்கறிகளை கொண்டு சென்ற வாகனங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் செய்தியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அட்டைப் பெட்டிகள் மற்றும் சாக்குகளில் மரக்கறிகளை கொண்டு செல்லும் போது அவை பழுதடைவதை தடுப்பதற்காகவே இந்தப் பிளாஸ்டிக் கூடைகளை அரசாங்கம் அறிமுகப்படுத்தியதாகவும், ஆனால், அந்தப் பிளாஸ்டிக் கூடைகள் மிகவும் செலவு மிக்கவை என்றும் அவற்றை லாறிகளில் ஏற்றும் போது அவை அதிக இடத்தை பிடிப்பதாகவும் கூறும் விவசாயிகள் அவற்றை ஏற்க மறுப்பதாகவும் அந்தச் செய்தியாளர் கூறினார்.
No comments
Post a Comment