Latest News

August 01, 2011

முக ஸ்டாலின், துரைமுருகன், கே என் நேரு, நடிகை குஷ்பு உள்பட திமுக தலைவர்கள் கைது
by admin - 0

பழிவாங்கும் நோக்கில் அதிமுக போடும் பொய் வழக்குகளைக் கண்டித்து இன்று தடையை மீறி திமுகவினர் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தினர்.

இதில் திமுகவின் முன்னணி தலைவர்கள் முக ஸ்டாலின், துரை முருகன், கேஎன் நேரு, தாமோ அன்பரசன் உள்பட ஆயிரக்கணக்கான திமுகவினர் கைது செய்யப்பட்டனர்.

தி.மு.க.வினர் மீது அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளை கண்டித்து ஆகஸ்டு 1-ந் தேதி ஆர்ப்பாட்ட அறப்போர் நடைபெறும் என்று தி.மு.க. தலைமைக் கழகம் அறிவித்தது. தமிழ்நாடு முழுவதும் தி.மு.க.வினர் மாநிலம் தழுவிய அறப்போர் நடத்துவார்கள்.

மாவட்ட தலைநகரங்களில் அந்தந்த மாவட்ட தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்ட அறப்போர் நடைபெறும். அதில் தி.மு.க.வினர் கலந்து கொள்ள வேண்டும் என்றும் தி.மு.க. சார்பில் அறிவிக்கப்பட்டது.

முக ஸ்டாலின்

வடசென்னையில் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அறப்போர் நடைபெறும் என்று அறிவிப்பு வெளியானது. மாவட்டங்களில் போராட்டத்துக்கு தலைமை தாங்குவோர் பட்டியலும் வெளியிடப்பட்டது. இந்த நிலையில் தி.மு.க. வினரின் ஆர்ப்பாட்டத்துக்கு போலீஸ் அனுமதி மறுக்கப்பட்டது. எனவே தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட தி.மு.க.வினர் முடிவு செய்தனர்.

வட சென்னை மாவட்ட தி.மு.க. சார்பில் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்காக இன்று காலை 8.30 மணியில் இருந்தே தொண்டர்கள் குவிய தொடங்கினர். சுமார் 10 மணியளவில் 500-க்கும் மேற்பட்ட தி.மு.க. தொண்டர்கள் குவிந்தனர். தி.மு.க பொருளாளர் மு.க.ஸ்டாலின் 10.30 மணிக்கு வந்தார். அதன் பிறகு ஆர்ப்பாட்டம் தொடங்கியது.

குஷ்பு பங்கேற்பு

ஆர்ப்பாட்டத்தில் டி.கே.எஸ். இளங்கோவன் எம்.பி., முன்னாள் அமைச் சர்கள் பரிதி இளம்வழுதி, சற்குணபாண்டியன்,வட சென்னை மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் ஆர்.டி.சேகர் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர். குஷ்புவும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றார்.

முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் செங்கை சிவம், சேகர்பாபு மற்றும் நிர்வாகிகள் வக்கீல் துலுக்கானம், இளைய அருணா, நெடுமாறன். செஞ்சி சண்முகம், மலர் விழி, தேவராசன், கிரி ராஜன், துரைசாமி, சங்கர், அன்பழகன், கணேசன், சொ.ஜெய்சங்கர், கவுன் சிலர் சிவலிங்கம் உள்பட ஏராளமான தி.மு.க. பிரமுகர்கள் திரண்டனர்.

துணை மேயர் சத்திய பாமா, மகளிர் அணி நிர்வாகிகள் குருவம்மாள், சிம்லா பாபு, சகுந்தலா, சூரியா, கவுன்சிலர் தேவகி, லதா, ராஜேஸ்வரி, முன்னாள் கவுன்சிலர் மீனா உள்ளிட்ட பெண்களும் கலந்து கொண்டனர். தடையை மீறி போராட்டம் நடத்தியதால் மு.க.ஸ்டாலின் உள்பட அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

லாரியே மேடையானது

போராட்டத்துக்கு போலீஸ் அனுமதி மறுக்கப்பட்டிருந்ததால் 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர். அனுமதி மறுக்கப்பட்டிருந்ததால் கலெக்டர் அலுவலகத்தில் வழக்கமாக ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் இடத்தில் மேடை எதுவும் அமைக்கப்படாமல் இருந்தது. ஆனால் ஒரு லாரியை மேடையாக்கி தி.மு.க. நிர்வாகிகள் அங்கு நிறுத்தி இருந்தனர்.

மேயர் சுப்பிரமணியன்

தென் சென்னை மாவட்ட தி.மு.க. சார்பில் சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. மேயர் மா.சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். வசந்தி ஸ்டான்லி எம்.பி., அமைப்பு செயலாளர் கல்யாணசுந்தரம், முன்னாள் அமைச்சரும் மாநில மகளிர் அணி புரவலர் புலவர் இந்திரகுமாரி, முன்னாள் அமைச்சர் ரகுமான்கான், ஜின்னா, ஆயிரம்விளக்கு உசேன் உள்பட ஆயிரக்கணக்கான தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம் செய்த வசந்தி ஸ்டான்லி எம்.பி., மேயர் மா.சுப்பிரமணியன் உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்ட தி.மு.க.வினரை போலீசார் கைது செய்து பஸ்களில் ஏற்றி அருகில் உள்ள திருமண மண்டபத்திற்கு கொண்டு சென்றனர்.

காஞ்சிபுரம்....

காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள காவலன் கேட்டில் மாவட்ட செயலாளர் தா.மோ.அன்பரசன் தலைமையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தி.மு.க. நிர்வாகிகளும் தொண்டர்களும் குவிந்தனர். அங்கு அவர்கள் போலீஸ் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து தா.மோ.அன்பரசன், ஆர்.எஸ்.பாரதி, வைத்திலிங்கம், எஸ்.டி. உக்கம்சந்த், சன்பிராண்ட் ஆறுமுகம், நகர செயலாளர் சேகர், படப்பை மனோகரன், பாலவாக்கம் விசுவநாதன் உள்பட 1000-த்திற்கும மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

திருவள்ளூரில்...

திருவள்ளூர் பஜார் வீதியில் மாவட்ட பொறுப்பாளர் சுதர்சனம் தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தி.மு.க. வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.

சேலத்தில்...

சேலம் சத்திரம் பகுதியில் இருந்து செவ்வாய்ப்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கு ஆர்ப்பாட்டம் நடத்த இன்று பேரணியாக வந்த செல்வகணபதி எம்.பி. உள்பட 500 பேர் கைது செய்யப்பட்டனர். சேலம் மாநகராட்சி அருகே இருந்து ஊர்வல மாக புறப்பட்ட முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மகன் வீரபாண்டி ராஜா, முன்னாள் எம்.எல்.ஏக்கள் தமிழ் செல்வன், சின்னத்துரை, கே.ஆர்.ஜி.தனபாலன் மற்றும் நிர்வாகிகள் உள்பட நுற்றுக் கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டனர்.

நேற்று இரவு சேலம் மாநகராட்சி துணை மேயர் பன்னீர்செல்வம், சூரமங்கலம் மண்டல குழு தலைவர் சரவணன், கவுன்சிலர் மணிமேகலை குப்புசாமி உள்பட 27 பேர் முன் எச்சரிக்கையாக கைது செய்யப்பட்டனர்.

ஈரோடு

ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் இன்று தடையை மீறி முன்னாள் அமைச்சரும், மாவட்ட தி.மு.க. செயலாளருமான என்.கே.கே.பி.ராஜா தலைமையில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் செய்ய முயன்றனர். அவர்களை போலீசார் கலைந்து செல்லும்படி கூறினர். ஆனால், ஆர்ப்பாட்டம் செய்ய முயன்றதால் போலீசார் அவர்களை கைது செய்தனர். முன்னாள் அமைச்சர்கள் ராஜா, முத்துசாமி மற்றும் முன்னாள் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், நகராட்சி தலைவர்கள் உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

திருப்பூர்...

திருப்பூரில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்திய முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான வெள்ளக்கோவில் சாமி நாதன், திருப்பூர் மேயர் செல்வராஜ், மாநகர துணை செயலாளர் நாகராஜ், பி.எஸ். மணி, முன்னாள் எம்.எல்.ஏ. கோவிந்தசாமி, உள்பட 300 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருச்சி - நேரு கைது...

திருச்சியில் இன்று காலை 10 மணிக்கு, மாவட்ட செயலாளர் கே.என்.நேரு தலைமையில் ஏராளமான தி.மு.க.வினர் கலெக்டர் ஆபீசு முன்பு திரண்டனர். அங்கு, அவர்கள் தமிழக அரசை கண்டித்தும், போலீசாரின் அத்துமீறிய நடவடிக்கையை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் அன்பில் பெரியசாமி, கே.என்.சேகரன், பொருளாளர் கே.கே.எம்.தங்கராஜா, துணை மேயர் அன்பழகன், அவைத் தலைவர் வண்ணை அரங்கநாதன், மற்றும் நிர்வாகிகள் செவ்வந்தி லிங்கம், கவுன் சிலர்கள் மற்றும் ஏராளமான தி.மு.க. வினர் கலந்து கொண்டனர். போலீஸ் அனுமதி இல்லாமல் ஆர்ப்பாட்டம் நடத்தியதாக மாவட்ட செயலாளர் கே.என்.நேரு உள்பட ஏராளமான தி.மு.க.வினரை போலீசார் கைது செய்தனர்.

மதுரையில் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் கைது

மதுரையில் ஆர்ப்பாட்டம் செய்த 200 தி.மு.க.வினர் கைது செய்யப்பட்டனர். விருதுநகரில் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, தஞ்சையில் கோ.சி.மணி, ராமநாதபுரத் தில் சுப.தங்கவேலன் ஆகியோர் தலைமையில் ஏராளமான தி.மு.க.வினர் கைதானார்கள்.

வேலூரில்...

வேலூர் மாவட்டத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்டோர் பங்கேற்று கைதானார்கள்.

தூத்துக்குடியில் பெரியசாமி, கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஆர்ப்பாட்டம் செய்து கைதானார்கள்.

நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும் திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
« PREV
NEXT »

No comments