Latest News

July 21, 2011

நெல் தரிசில் சாம்பல் பூசணிக்காய் சாகுபடி
by admin - 0


பத்தடிக்கு பத்தடி இடைவெளியில் இரண்டு முதல் இரண்டரை அடி விட்டமும், ஒன்பது அங்குலம் ஆழமுள்ள குழிகள் போடவேண்டும். மக்கிய தொழு உரம் குழிக்கு ஒரு கூடை வீதம் கொட்டி மண்ணோடு நன்றாக கலக்கும்படி கொத்திவிட வேண்டும். ஒரு ஏக்கரில் நட 3,200 முதல் 3500 விதைகள் தேவைப்படும். விதையை ஆழமாக ஊன்றக்கூடாது. ஆழம் முக்கால் அங்குலத்திற்கு அதிகமாக போகக்கூடாது. ஒரு குழியில் நான்கு அல்லது ஐந்து செடிகள் வளரும்படி பணிகளை செய்துகொள்ள வேண்டும். உயிர் தண்ணீர் விட வேண்டும். உயிர் தண்ணீர் விட்டு 15 நாட்கள் தொடர்ந்து தண்ணீர் விடவேண்டும்.

 
விதை நட்ட 25ம் நாளிலிருந்து 30 நாட்களுக்குள் முதல் உரம் வைக்க வேண்டும். குழியிலுள்ள களைச்செடிகளை நன்றாக கொத்தி எடுத்து உரம் வைத்து பாசனம் செய்ய வேண்டும். ஒரு ஏக்கருக்கு தேவைப்படும் உரம் 30 கிலோ 17:17:17 காம்ப்ளக்ஸ், 10 கிலோ யூரியா இவற்றை நன்கு கலந்து பின் 100 கிராம் அளவு கலவையை ஒரு குழிக்கு வைக்க வேண்டும். விதை நட்ட 45 அல்லது 50வது நாள் குழி ஒன்றுக்கு 200 கிராம் 17:17:17 காம்ப்ளக்ஸ் உரம் மட்டும் வைக்க வேண்டும்.
விதை நட்ட 35ம் நாள் செடி நன்றாக படர்ந்து கொடி ஓடும். இந்தக்கொடிகள் பூமியின் மீது ஓடும்போது கணுக்களிலிருந்து வெளிவரும் வேர்கள் பூமியில் இறங்கி நிலத்தை இறுகப்பிடித்துக்கொள்ளும். கொடிகள் வளமாக நிலத்தை தழுவி வளரும்போதுதான் செடி சீராக பூ, பிஞ்சுகள் விடும். நெல் வயலை உழாத சூழ்நிலையில் தரை கெட்டியாக இருக்கும். இதனால் கணுக்களிலிருந்து வேர் வெளிவந்தால் அவைகளால் நிலத்தினுள் இறங்க முடியாது. இதுசமயம் நிலத்தினை கொத்தி மிருதுவாக்கி கொடியின் கணுவை அதில் வைத்து மேலே மண் தள்ளி மூடி கைகளால் லேசாக அழுத்திவிட வேண்டும். இப்பணி பதியன் போடுதல் என்று அழைக்கப் படுகின்றது.
செடி நட்ட 40 நாட்கள் கழித்து நஞ்சை வயல் முழுவதும் நன்கு நனையும்படி ஓர் உருட்டுத்தண்ணீர் பாசனம் செய்யலாம். இப்பணி செடியிலிருந்து பூ, பிஞ்சுகள் கொட்டிவிடுவதை தவிர்த்துவிடுகின்றது. நஞ்சை நிலத்தில் பாசனம் செய்ததால் களைச்செடிகள் வளர்ந்து மெத்தைபோல் தளத்தை அமைத்துவிட்டது. இதன்மேல் உட்கார்ந்த பிஞ்சு, காய்கள் உஷ்ணத்தால் பாதிக்கப்படாமல் இருந்தன. காய்களின் மேல் சூரிய வெளிச்சம் படாமல் குடைபிடித்தது போன்று களைச்செடிகள் இருந்தன. காய்களின்மீது சூரிய படை விழாமல் செய்கின்றது. காய்கள் தழும்பில்லாமல் சுத்தமாக இருந்ததால் விற்பனை பிரச்னை தவிர்க்கப்பட்டது.
வண்டுகள் விழக்கூடிய வாய்ப்பு உண்டு. இதைத்தடுக்க மெட்டாசிஸ்டாக்ஸ் அடிக்கலாம். அசரை விழுந்தால் ரோகர் 200 மில்லிஅடிக்கலாம். விவசாயிகளுக்கு ஒரு எச்சரிக்கை யாதெனில் பி.எச்.சி. மருந்து கண்டிப்பாக அடிக்கக் கூடாது. இதைத் தூவினால் செடி பட்டுப்போய்விடும்.
Get cash from your website. Sign up as affiliate.
« PREV
NEXT »

No comments