Latest News

June 18, 2011

சாய்பாபா ரகசிய அறையில் குவியல் குவியலாக சிக்கிய பணம், நகை!
by admin - 0

புட்டபர்த்தி பிரசாந்தி ஆசிரமத்தில் உள்ள சத்ய சாய்பாபாவின் பிரத்யேக அறையான யஜூர்வேத மந்திர் மீண்டும் திறக்கப்பட்டது. அங்கு கோடி கோடியாக பணமும், பெருமளவில் நகைகளும் குவியல் குவியலாக இருந்தது தெரிய வந்தது. ஏராளமான கம்ப்யூட்டர்களும் கிடைத்துள்ளன. பணம், நகையை வங்கியில் டெபாசிட் செய்துள்ளனர்.

கடந்த மார்ச் 28-ம் தேதி பகவான் சத்யசாய் பாபா உடல்நலக்குறைவினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் சிகிச்சை பலனின்றி ஏப்ரல் 24 ம் தேதி இறையடி சேர்ந்தார். அப்போது அவர் வசித்து வந்த பிரத்யேக அறையான யஜூர்வேதமந்திர் பூட்டப்பட்டது.

தற்போது ஒன்றரை மாதங்களுக்குப் பிறகு மீண்டும் வியாழக்கிழமை காலை 10 மணி அளவில் பகவான் சத்யசாய்பாபா வசித்து வந்த அறை திறக்கப்பட்டது. முன்னாள் தலைமை நீதிபதியும், சத்ய சாய் டிரஸ்ட் உறுப்பினருமான பி.என். பகவதி, செயலாளர் சக்ரவர்த்தி, சாய்பாபாவின் சீடரும் பாதுகாவலருமான சத்யஜித் ஆகியோர் யஜூர்வேத மந்திரினுள் சென்றனர்.

அந்த அறையைத் திறக்கும் ரகசிய எண் சாய்பாபாவின் நெருங்கிய சீடரான சத்யஜித்துக்கு மட்டுமே தெரியும் என்பதால் அவரே அறையைத் திறந்தார்.

பின்னர் உள்ளே போனபோது ஒவ்வொரு அறையிலும் பணமும், நகைகளும் குவியல் குவியலாக இருந்தது தெரிய வந்தது. பணம் கட்டுக் கட்டாக இருந்ததாம். வைர நகைகள் பெருமளவில் இருந்தன. இவற்றின் மதிப்பு என்ன என்பது உடனடியாகத் தெரியவில்லை. ஆனால் பல கோடி அளவுக்கு இருக்கும் என்று தெரிகிறது.

அங்கிருந்த பணம், நகைகளை கணக்கெடுத்து தனித் தனியாக பிரிக்கும் பணியில் மாணவர்கள் குழுவை ஈடுபடுத்தினர். பின்னர் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு அவர்கள் மூலம் பணத்தையும், நகைகளையும் வங்கிக்கு கொண்டு சென்று டெபாசிட் செய்தனர்.
« PREV
NEXT »

No comments