Latest News

February 19, 2018

சிறிலங்கா ராணுவ அதிகாரியை படம்பிடித்த முன்நாள் போராளிக்கு கொலை அச்சுறுதல்
by admin - 0

இலங்கையின் சுதந்திர தினத்தன்று லண்டனில் புலம்பெயர் தமிழர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது கழுத்தை அறுப்பது போன்று இராணுவ உயர் அதிகாரியொருவர் வெளிப்படுத்திய சைகையை காணொளியாக பதிவுசெய்த முன்னாள் போராளி ஒருவருக்கு அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.பிரித்தானியாவில் வசித்துவரும் சத்தியமூர்த்தி சபேஸ்ராஜ் என்ற முன்னாள் போராளியே இவ்வாறு அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.



இலங்கையின் 70 ஆவது சுதந்திரதின வைபவங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து லண்டனில் உள்ள இலங்கையின் உயர்ஸ்தானிகர் அலுவலகத்திற்கு முன்பாக புலம்பெயர் தமிழர்கள் கடந்த நான்காம் திகதி ஆர்ப்பாட்டமொன்றை  நடத்தியிருந்தனர். 

அப்போது இலங்கை உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் பாதுகாப்பு விவகாரங்களுக்கு பொறுப்பான உயர் அதிகாரியான கொமாண்டர் பிரியங்க பெர்னாண்டோ ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழர்களை பார்த்து கழுத்தை அறுப்பது போல சைகை காண்பித்தார்.

அத்துடன் தனது இரணுவ சீருடையின் தோள்பட்டையில் இருந்த இலங்கையின் தேசிய சின்னத்தையும் சுட்டிக் காண்பித்திருந்தார். 

அதனை காணொளியாக பதிவு செய்த சத்தியமூர்த்தி சபேஸ்ராஜ் என்ற அந்த முன்னாள் போராளி தனது முகநூலில் உடனடியாக அதனை பதிவேற்றம் செய்தார். 

அந்த காணொளியை பிரதி செய்த மேலும் பலர் தமது முகநூல்களிலும் பகிர்ந்திருந்ததுடன், தொலைக்காட்சிகளும் அதனை செய்தியாக ஒளிபரப்பியிருந்தார்.

தொலைக்காட்சிகளும், செய்தி இணையத்தளங்களும் பத்திரிகைகளும், அந்த காணொளியை அடிப்படையாக் கொண்டு செய்திகளை வெளியிட்டிருந்தன.  

இதனால் இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதுடன் பிரித்தானிய இலங்கை அரசுகளின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டன.

இதனையடுத்து இலங்கை வெளிவிவகார அமைச்சு, குறித்த பாதுகாப்பு உயர் அதிகாரியை தற்காலிகமாக சேவையில் இருந்தும் இடைநிறுத்தியிருந்தது. 

ஆனாலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அந்த அதிகாரியை உடனடியாக மீண்டும் பணியில் அமர்த்துமாறு உத்தரவிட்டிருந்தார்.

இதனிடையே கழுத்தை அறுப்பதாக சைகை காண்பித்ததன் மூலம் உயிர் அச்சுறுத்தலை இலங்கை இராணுவ உயர் அதிகாரி விடுத்ததாகவும் அவரின் இராஜதந்திர அந்தஸ்தை மீளப் பெற்று நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என பிரித்தானியா தொழில் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திருந்தனர். 

இந்த நிலையில்இராணுவ உயர் அதிகாரி பிரியங்க பெர்ணாண்டோ கழுத்தை அறுப்பது போன்று சைகை மூலம் காண்பித்ததை காணொளியாக பதிவுசெய்து முகநூலில் வெளியிட்டவரின் விபரங்களை லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் அலுவலக அதிகாரிகள் தேட ஆரம்பித்தனர்.

பிரியங்க பெர்ணாண்டோவின் செயற்பாட்டை நியாயப்படுத்தி சிங்கள முகநூல் பாவனையாளர்களும் தமது கருத்துக்களை பதிவிட்டிருந்ததுடன்இ இலங்கை அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்களும் பிரியங்க பெர்ணாண்டோவிற்கு தமது ஆதரவை வெளியிட்டிருந்தனர்.


குறிப்பாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்தன பிரியங்க பெர்ணாண்டோவின் செயற்பாட்டை பாராட்டிய அதேவேளை ஐக்கிய தேசிய கட்சியின் மற்றுமொரு அமைச்சரான ஹரீன் பெர்ணாண்டோ மற்றும் நவீன் திஸாநாயக்க ஆகியோர் அவருக்கு ஆதரவு தெரிவித்திருந்தனர். 

இந்த பின்புலத்தில் ஜொலி மல்லி என்பவரின் முகாநூல் பக்கத்தில் புலிகளின் ஆதரவாளர் என இனங்காணப்பட்டவர்களின்  முகாநூல் பக்கத்தை உடனடியாக தடை செய்ய வேண்டும்| எனவும் கோரப்பட்டிருந்தது.

அந்த முகாநூல் பக்கங்களை எவ்வாறு தடை செய்ய முடியும் என்பது குறித்த வழிகாட்டல்களும் ஜொலி மல்லி என்ற சிங்கள மொழிமூலமான முகநூல் பக்கத்தில் முன்வைக்கப்பட்டிருந்தன. 

இதற்கு அமைவாக முகாநூல் நிர்வாகத்தினால் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள்  முகநூல் பக்கத்தில் நிழல் படங்கள் மற்றும் காணொளிகள் பதிவேற்றம் செய்வது தடைசெய்யப்பட்டுள்ளது.

சுமார் 400 இற்கும் அதிகமானவர்களின் முகநூல்கள் இதனால் முடக்கப்பட்டிருப்பதாக நாடுகடந்த தமிழ் அரசாங்கம் என்ற அமைப்பின் உத்தியோகத்தர் தெரிவித்தார்.

இதேவேளை, கழுத்தை அறுப்பது போன்று இராணுவ உயர் அதிகாரி வெளிப்படுத்திய சைகையை காணொளியாக பதிவுசெய்த முன்னாள் போராளி சத்தியமூர்த்தி சபேஸ்ராஜ் தொடர் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகி வருவதாக தற்பொழுது செய்திகள் வெளியாகி வருகின்றன.

« PREV
NEXT »

No comments